Monthly Archives: செப்ரெம்பர் 2019

கதை சொல்லும் பென்சில் ✏️

வாட்ஸ் ஆப் கதை படிசீங்களா மக்களே ?

ஆப்பு வைக்கும் வாட்ஸ் ஆப்பு சில சமயங்கள்ல செம்ம மெசேஜ் கூட கொண்டுவரும்க!

அப்பிடித்தான் எனக்கும் ஒண்ணு வந்துது . கன்னடத்தில – போச்சு போ இனிமே கன்னடத்தில எழுதி கொல்ல போறியா னு நீங்க பதர்றது தெரியுது. இல்ல , கண்டிப்பா இல்ல .

நாம் சுணங்கி இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட message கள் நமக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றன. இதுதான் ஆத்மாவுடனான உரையாடலோ?

பென்சில் பாக்சில் உபயோகித்து தேய்ந்து போன பென்சில் ஒன்று, புது பென்சிலை வரவேற்கிறது. எனக்கு அனுபவத்தில் தெரிந்த விஷயங்கள. உனக்கு சொல்கிறேன் கேள் என்றது..

முதலாவதாக, நீ தனியாக செயல்படுவதில்லை . உன்னை ஒருவர் கையில் எடுத்தால் தான் செயல் பட முடியும்.

இரண்டாவது. உன்னுடைய வெளியில் இருக்கும் மர பாகத்தை காட்டிலும்

 

உள்ளே உள்ள lead (ஈயம்) தான்  மிக முக்யம்.

மூன்றாவது, நீ அவ்வப்போது, சீவப்படுவாய்…எப்போதெல்லாம் நீ மழுங்கி போகிறாயா அப்போதெல்லாம் நீ சீவப் படுவாய். தயாராக இரு.
நான்காவது,மிக முக்கியமானது, நீ எழுதும் போது  பிழைகள் ஏற்படும். கடைசியில் இருக்கும் ரப்பர் கொண்டு அழித்து விட்டு மீண்டும் எழுது.
இத்தனை நாளும்  எழுதி எழுதி தேய்ந்து போன பென்சில், புது பென்சிலுக்கு குடுக்கும் அறிவுரை மட்டும் இல்லை. வாழ்க்கை பாடம் நமக்கும் இருக்கு இதில். இந்த வாழ்க்கை பாடங்களை அவ்வப்போது மறப்பது தான் நம் துன்பத்திற்கும், நிம்மதி இல்லாமைக்கு காரணம்.
முதலாவதாக நீயாக எழுத முடியாது, ஒருவர் உன்னை கையில் எடுக்க வேண்டும். அவன் தான் பரமாத்மா. அவன் நம்மை தாங்குகிறான். நம்மை கையில் எடுத்து எழுதுகிறான். அவன் எழுத்து தப்பாது என்று நம்பு. அந்த பரமனின் கையில் நான் ஒரு ஆயுதம் என்பதை மறக்க கூடாது.  பகவத் கீதையில் பதினோராவது அத்தியாயத்தில் முப்பத்தி மூன்றாவது செய்யுளில், கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறான்,
நிமித்த மாத்திரம் ……
“எதிரில் மாண்டதாக நீ நினைப்பவர் எல்லோரும் என்னால் ஏற்க்கனவே வீழ்த்தப்பட்டனர். நீ எனது செயலுக்கு ஒரு கருவி ” என்று. ஹஸ்தினாபுரம் தர்மத்தினால் ஆளப் பட வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன் என்று.
போர் முடிந்த பின், அர்ஜுனன் கூறினானாம்  நான் தான் அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்று.பீமன் தான் அதை விட அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்றானாம். அதனால் கண்ணன் இருவரையும் போர்க் களத்திற்கு அழைத்து சென்றானாம். அங்கு கடோதகஜனின் மகன் பார்பரீகனை கண்டு,  அவனிடம் அர்ஜுனனின் அம்புகளை அதிகம் பார்த்தாயா, பீமனின் கதையை அதிகம் பார்த்தாயா என்று கண்ணன் கேட்க, கண்ணனின் சக்கரத்தை தான் நாலா பக்கமும் சுழல்வதை பார்த்தேன் என்றானாம், பார்பரீகன் . நம் வாழ்க்கையும் அதே தான் நண்பர்களே. “நான்” ” எனது” என்பதை அழித்து, “நீ” “உனது” என கண்ணன் காலடியில் சமர்ப்பித்து பாருங்கள், அந்த அனுபவம் பேரானந்தம். ராம நாமமும் சிவ நாமமும் இதற்க்கு தான். நம்மை நாமே ஞாபகப்படுத்திக்கொள்ள.
நம்,
சுகம் – துக்கம்
லாபம் – நஷ்டம்
ஜெயம் – அபஜெயம்
மான – அவமானம்
எல்லாம் அவன் அருளால் நடக்கிறது. அப்படியென்றால், இதில் என் பங்கு /பாத்திரம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் தாசன், அவர் ஸ்வாமி என்று உணர்வது தான் நம் பாத்திரம். நான் எனும் அஹம்காரம் இல்லாத போது , நாம் பணிவாகிறோம். இப்போது அமெரிக்காவில் இருப்பதில், நிறைய நேரம் கையில். பகல் பொழுதெல்லாம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அதில் முகுந்த மாலா கேட்ட போது , ஒரு புரந்தர தாசர் க்ரித்தியை குறிப்பிட்டார். இன்னு தய பாராதே தாசன மேலே …
அதில் ஒரு வரி,
நானு நன்னது எம்ப நரக தொலகே பித்து
நீனே கதி எந்து நம்பித தாசன மேலே
நான் என்னது என்ற எண்ணம் என்னை நரகத்தில் தள்ளியது , நீயே கத்தி என்று நம்பும் இந்த டடன் மேலே தயை வராதா ……
என்ன ஒரு வீரியமான வார்த்தைகள். கண்ணில் நீர் பெருகிக் கொண்டே இருக்கிறது

 

இரண்டாவது பாடம்  உன் வெளிப்புறத்தை விட உள்ளே உள்ள ஆத்மா  முக்கியம். நீ உடுக்கும் ஆடை யோ, உண்ணும் உணவோ, வசிக்கும் வீடோ, பொன்னோ பொருளோ நீ அல்ல. உன் அந்தராத்மாவும் அதில் நீ அனுபவிக்க கூடிய நிம்மதியும் தான் நீ. உள்ளே புழுக்கம் அதிகமாக இருந்து வெளியே நீ ஏ.சி யில் இருந்தால் என்ன பயன். சரி, இந்த நிம்மதி எங்கே கிடைக்கும் ? கடைகளில் கிடைக்க கூடிய வஸ்து  இல்லையே. விலை கொடுத்து வாங்கக்கூடியது இல்லையே. காசு பணம் இருந்தால் மருந்து வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது அல்லவா? இந்த நிம்மதியை வாங்க காசு பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். உன் பாத கமலங்களில் என்னை அறப்பணித்துவிட்டேன், காப்பாற்று என்று சரணாகதி அடைந்தால் போதும், அவன் தந்து விடுவான் இந்த நிம்மதியை.

மூன்றாவதாக…. நாம் அவ்வப்போது சீவப் படுகிறோம். எப்போதெல்லாம் மழுங்கி போகிறோமோ அப்போதெல்லாம் சீவப் படுகிறோம். விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தப்படுகிறோம். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்காதே.
நஷ்டங்கள் வரும்
உடல் நலம் கெடும்
அழுவோம்
துடிப்போம்
வருந்துவோம்
இதெல்லாம் யார்க்கு இல்லை ? ராமாவதாரத்தில், காட்டுக்கு சென்று அவர் படாத துன்பமா ? கிருஷ்ணாவதாரத்தில் அவர் பிறந்ததே, சிறைச்சாலையில். ராமகிருஷ்ணா பரமஹம்சர், எப்பேர்ப்பட்ட மஹான், அவருக்கு ஏன் புற்று நோய்  வந்தது.  எந்த ஒரு பிறப்பும் துக்கத்திலிருந்து தப்பிப்பதில்லை. இருவர் மட்டுமே இதற்க்கு விலக்கு , ஒன்று இன்னும் பிறவாத குழந்தை, இன்னொன்று, மடிந்து போனவர். கடலும், மலைகளும், ஆறுகளும், இருக்கும் வரை துக்கமும் இருக்கும். சுகமும் துக்கமும் மாறி மாறி வரும். சுவாமி விவேகானந்தரை ஒரு முறை ஒரு குரங்கு கூட்டம் தாக்க வந்ததாம். அவர் பயந்து ஓடாமல், நின்று, எதிர்கொண்டாராம். அவை அதை எதிர் பாராததால், மிரண்டு பின் வாங்கின. நம் பிராரப்த கர்மாக்களிலிருந்து தப்பிக்க முடியாது. என்னுடன் இரு பெருமாளே, என்னை கை பிடித்து கரை சேர்த்து விடு என்று அவன் காலை பற்றுங்கள்.
கடைசியாக தப்பு செய்வது மனித குணம் அதை மன்னிப்பது தெய்வ குணம். தப்பை திருத்திக்கொள்வது மிக முக்கியம். நாம் மன்னிக்க படவேண்டும் என்று ஆணித்தனமாக எண்ணும்  போது, மன்னிப்பதற்கு தயாராக இருப்பதும்  முக்கியம்.  கசப்பானவற்றை அழித்து விட்டு முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் நிம்மதிக்காகவாவது.

நீண்ட பதிவு. ஆனால்  நான் அனுபவித்ததை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையில், அந்த ஆடியோ பதிவில் வந்ததோடு, என் சரக்கையும் சேர்த்து உங்களுக்கு கொடுத்தேன். பொறுமையாக இது வரை படித்ததற்கு நன்றி.
கண்ணன் நம் எல்லோரையும் காக்கட்டும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண  கிருஷ்ண  ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே ……

 

வாட்சாப்(ப்பு) …..

வாட்சாப் – இன்றைய நம் வாழ்வின் இன்றியமையாத ஒரு மூலப் பொருள்.

நமக்கு பல நேரங்களில் வைக்கிறது ஆப்பு !

லாஸ்ட் சீன் – நேர்ல எப்போ கடைசியா பாத்தோம் னு தெரியாது ஆனா வாட்ஸ் ஆப் ல

“நா பாத்தேன் கடைசியா 5.53 கு இருந்தான் சார் அவன். ” னு நம்ப அவரை வேவு பாக்றத பெருமை பேசும் காலம் இது.

ப்ளூ டிக் வந்தது, உடனே offline போய்ட்டாங்க என்று குத்தம் சொல்லும் காலம்.

மெசேஜ் பார்த்துட்டாங்க எப்பவோ ஆனா இன்னும் ரிப்ளை பண்ணல என்று குமுறும் காலம்.

நாம கேக்காமலேயே காலைல கண் முழிக்கும் போது ,

You have been added to ……..என்று ஒரு இம்சை. நாம கடுப்புல இருந்தா , add பண்ணவன் எவனா இருந்தாலும் பரவா இல்லை னு உடனே exit பண்ணிடுவோம். அவன் நேரம் நல்லா இருந்து, நம்ம போயிட்டு போறான் பய னு விட்டோம், செத்தோம். காலை வணக்கத்தில ஆரம்பிச்சு, இரவு வணக்கம் வரைக்கும், சகல விதமான forward கள் போட்டு நம்மை திக்குமுக்காட வெச்சுருவாங்க.

உடனே அந்த குரூப் அட்மின் செட்டிங் மாத் துவாரு. ஓன்லி அட்மினிஸ் னு. அப்போ கொஞ்சம் நிம்மதியா இருக்கும்.

அதுலேயும் என்னை போல நடுத்தர வயதும், எழுவது எண்வதுகள் ல இருக்கறவங்களும் அடிக்கற லூட்டி இருக்கே சொல்லி மாளாது போங்க !

என் பிறந்தநாளுக்கு ஒரு குரூப் ,

என் வீட்டு நாய் குட்டிக்கு ஒரு குரூப், என்அடுக்குமாடி குடியிருப்பு குரூப்

என் பள்ளி தோழிகள் / தோழர்கள் ஒரு குரூப் ( இதுல நீங்க 2/3 பள்ளிகள் படிச்சிருந்தீங்க அவ்ளோ தான் சுத்தம் )

கல்லூரி தோழர்கள் ஒரு குரூப் , அதுல நம்மோடு நல்லா ஒத்துபோகற நாலு பேரோட ஒரு தனி கூட்டணி( குரூப்)

ஆன்மீக குரூப் (கள் )

இப்பிடி அடுக்கிக்கிட்டே போகலாம்

(எண்ணியதில், விருப்பத்துடன் இரண்டு அல்லது மூன்றிலும், கட்டாயத்தில் மற்றவைகளிலுமாக நானே பதினோரு குரூப் களில் இருக்கேங்க 🙂 🙂

சரி இருக்கறது கூட பரவாயில்லைனு பாத்தா , இந்த மனஸ்தாபம் இருக்கே , இது ரொம்ப ஜாஸ்தியாயிடுச்சி. தனி மெஸ்ஸஜும் சரி, குரூப் லேயும் சரி, குண்டக்க மண்டக்க புரிஞ்சுக்கறதே மக்களுக்கு பொழப்பா போச்சுங்கறேன் !

ஒரு நல்ல பழமொழி பாத்தோம்னா சரி பகிரலாம்னா உடனே அதுக்குள்ளாற பூந்து அவங்களா ஒரு அர்த்தத்தை புரிஞ்சிகிட்டு ஏன் என்ன வருத்தம், உன்னை யாரு என்ன சொன்னாங்க னு கேட்டு ஒரே கொடச்சல்.

K னு போட்டா ஒகே வாம்

S னு போட்டா yes ஆம்

TIA நா THANKING IN ADVANCE ஆம்

இப்படி ஒரு தனி அகராதியை இருக்கு ….

இதேயும் மீறி ஒகே னு அடிச்சதை பிச்சி பீராஞ்சு நான் அவமானப்பட்டேன் அசிங்கப்பட்டேன் எப்பிடி நீங்க ஒகே மட்டும் அடிக்கலாம்னு ஐந்து வருட உறவு ஒன்று கசந்து போனது போன வாரம். நானும் மன்னாடி பார்த்து, கெஞ்சி அழுது புரியவைக்க பார்த்தேன். நாப்பது நிமிடம் போராடிய பின் கைவிட்டேன். சில பரிச்சயங்கள் எக்ஸ்பயரி தேதியோடு வருமோ என்னவோ. !!!

எது எப்படியோ, இந்த பூமில இருக்குற கொஞ்ச காலத்தில தேவையில்லாத மனஸ்தாபங்களை தவிர்ப்போம். என்னை போல பேசி தீர்க்க முயற்சிப்போம். அதையும் மீறி விதி இருந்தால் தாங்கும். இல்லையென்றால் நாலு நாட்களுக்கு நம் மண்டையை காயவெச்சிட்டு போகும். !!!

ஒரு டெக்னாலஜி வந்தா அதை ஆக்கபூர்வமா கூட பயன் படுத்தலாம். சிறு பிள்ளை தனமாக விவாதங்களிலும், வெறுப்பிலும் ஈடுபடவேண்டாம்.

மொத்தத்தில் வாட்ஸ் ஆப் ஆப்பு உறவுகளிடையே வைக்காமல் இருக்க வாழ்த்துக்கள்