காஃபீ வித் கற்பகம்…..

இல்லை …காஃபீ வித் அனு வா?

எதுவா இருந்தாலும், இந்த நெரஞ்ச வெள்ளிக்கிழமை, கற்பகத்தை பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்.

கற்பகம் மாமி ஊருக்கு. எனக்கு கப்பூ…

ஹாய் கப்பூ… னு சொன்னா ஹாய் சொல்லிட்டு, குண்டம்மா.. கப்பூ வா மே ! கப்பூ….என்பார்.

யாரு இந்த கப்பூ?/ கற்பகம் மாமி. எங்கள் பக்கத்து வீட்டு மாமி. 10 வருட பரிச்சயம். பேருக்கு தான் சீனியர் சிடிசன். சின்ன பெண்களுக்கு(அதாவது எனக்கு)😊 சரி சமமா பேச முடியும் அவரால். இரண்டு பிள்ளைகள். மூன்று பேர குழந்தைகள். கணவர், மருமகள்கள். நாங்கள் அலசாத விஷயமே இல்லை. பாலிடிக்சிலிருந்து panty வரை 😂😂😂நான் இப்போது இருக்கும் வீட்டிற்கு புதிதாக வந்தபோது, இன்னிக்கி என்ன டிபின் என்று கேட்டேன். கடுத்த மா தோசை என்றார். ஆஹா இந்த வார்த்தையை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு என்று ஆரம்பித்த எங்கள் சம்பாஷணை இன்று வரை பல விஷயங்களை அலச வைக்கிறது

இருவர் உடம்பிலும் தஞ்சாவூர் தண்ணி…. அதனால் ஒரே பழமொழி பரிமாற்றம். சில அடல்ட்ஸ் ஒன்லி பழமொழிகளும் உண்டு. ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்து விட்டோ, ஒரு ஹலோ மட்டுமே சொல்லி விட்டோ நாங்கள் சென்றதில்லை. குப்பை வைத்துவிட்டு, குப்பை டப்பாவை கையில் பிடித்தபடி ஒரு பதினைந்து நிமிஷம், சாவியை துவாரத்தில் போட்டு விட்டு ஒரு இருவது நிமிஷம், மாடி படியில் எதிர் கொண்டால் ஒரு இருபத்தைந்து நிமிஷம்,(மேலே உள்ள புகைப்படம் மாடிப் படியில் கட்டம் போட்ட புடவையில் நாங்கள் எதிர் கொண்ட போது) பால் வாங்கி வரும்போதோ வாக்கிங் போகும் போதோ மாட்டினால் ஒரு 30 நிமிஷம் என்று எங்கள் அரட்டை நடக்கும். யாரை பற்றியும் பேசாமல் பொதுவாக வாழ்க்கை, வாழ்க்கையின் கண்ணோட்டம், பயணம், புடவை, வக்கணயான சாப்பாடு காம்பினேஷன், என ஏதாவது ஒன்று மாட்டும் அலசுவதற்கு.

வேலை மெனகட்டு நேற்று வாட்ஸாப்பில், free யா என்று கேட்டு விட்டு, அரட்டைக்கு எண்ணிக்குமே free என்று சொன்னவுடன், சென்று ஒரு மணி நேரம் பிளேடு போட்டு விட்டு வந்தேன்.

வயசு எல்லோருக்கும் ஏறி கொண்டு தான் போகிறது. ஆனால் இருப்பதில் சந்தோஷமாக, பாசிடிவாக இருப்பது நம் கையில் தான் இருக்கு. கப்பூவும் நானும் அந்த ரகம். (ஜூன் மாத பிறப்புகள். ஜெமினி க்கள் அப்படித்தனோ?)😊☺️

தென் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, அந்த நாளத்து பம்பாயில் வாக்கப்பட்டு, தன் பிள்ளைகளை வளர்த்து, கல்யாணம் முடித்து, இன்று கொஞ்சம் இளைப்பாறி, தன் ஆசைக்கு, நாலு இடங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார். மச்சினர் பேரனுக்கு பூணல், வயசான மன்னி.. ஒடம்பு சரி இல்லை.. நன்னா இருக்கர்ச்ச பாக்கலாம் னு ஒரு வாரம் ஊருக்கு போறேன், எங்க அண்ணா பொண்ணு அவா ஊர்ல கும்பாபிஷேகம் னு கூப்டா, சம்பந்தி மாமி ஊர்ல கோவிலுக்கு போறோம், இப்படி நாலு இடம் பார்ப்பதில் அதிக ஆர்வம். பயணமும், பயணிப்பதும் எல்லாரும் விரும்பி செய்வதில்லை. ஆனால் பயணங்கள் கற்று தரும் பாடங்கள் விலை உயர்ந்தவை.

நாம் பின் பற்ற வேண்டியது ஒன்று தான். மனதை விசாலமாக வைத்து கொள்ள வேண்டும். To keep the mind open. பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் குடியிருந்த வீட்டு அசல் வீடு துளு பாஷை பேசுவார்களாம். அதனால் மாமியும் நன்றாக துளு வில் துள்ளி விளையாடுவார் ! அது ஒரு கிப்ட். கண்ணு பாத்தா கை செய்யணும் என்பார்களே அது போல காதால் கேட்டு வாயால் பேசணும் நா? திறமை தானே?

அடுத்து என்னை ஈர்த்த விஷயம். பாங்காக நேர்த்தியாக தோற்றமளிப்பது. கழுத்தில் ஒரு கொடி, கைகளில் இரண்டு வளையல்கள், வைர தோடு, பேசரி எப்போதும். நளினமாக உடுத்திய புடவை. நல்ல சிரிப்பு. பெரிய பொட்டு. போதுமே ஒருவரை ஈர்க்க.

இந்த பத்து வருடத்தில் சோர்ந்து நான் பார்த்ததில்லை. அப்பிடியே இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

தனக்கென்று ஒரு நண்பிகள் வட்டம். காலை அருகில் உள்ள கிரவுண்ட் இல் நாலு ரவுண்டு. வெளி உலகம் பார்த்தல் /புரிதல் அங்கு ஏற்படுகிறது. வாட்ஸாப்பில், யூ ட்யூபில், ஏதோ பார்த்துக் கொண்டு பொழுது போகிறது. மனதளவில் இளமை. அடுத்த தலைமுறை அவர்கள் பொறுப்பில் இயங்கட்டும். உடன் நிற்கின்றேன் என்கிற மனப்பான்மை. நாள் கிழமைகளை குறைவில்லாமல் கொண்டாடுவது. புதிதாக எதை பற்றி பேசினாலும், நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள முயல்வது. பாஸ்டா,பிசா, நூடுல்ஸ் எல்லாம் டேஸ்ட் செய்யவும் ரெடி. தொகையல், கூட்டு, குழம்பு என்று வக்கணயாக, நல்ல காம்பினேஷன் சாப்பாடும் அவ்வளவே ரசிக்க முடியும்.

அவர் மைண்ட் ஐஸ் லைக் அ பாராசூட். இட் ஒர்க்ஸ் பெஸ்ட் வென் இட் இஸ் ஓபன் our mind is like a parachute. It works best when it is open.

கப்பூ எனக்கு தோழி, அம்மா, அத்தை,மாமி எல்லாம். இப்படி ஒரு மனுஷியை என் வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி.

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!!

காதலின் தீபம் ஒன்று….

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கமென்ன… காதல் வாழ்க !!!!

பஞ்சு அருணாசலம் எழுதி, இசை ஞானி மெட்டு போட, எஸ்.பி.பி தன் குரலால் என்னை /நம்மை இன்று வரை கிறங்கடிக்க, மிகை இல்லாத body language இல் ரஜினிகாந்த். தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இந்த காட்சி. பாடலின் தொடக்கம் சுமதி என்று மரத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் பெயருக்கு முத்தமிடுவது போல் துடங்கும். (1984 இல் வந்த படம். இன்று போல் கதாநாயகிகளை/ கதாநாயகன்களை கடித்து துப்புவதெல்லாம் அப்போது இல்லை என சொல்லலாம்).

அந்த பாடல் முழுவதுமே, பான்ட் பாக்கெட்டில் தன் கைகளை வீட்டுக்கு கொண்டு, இங்கும் அங்கும் நடந்து நடந்து பாடியிருப்பார் ரஜினி. மாதவியும் நிறைய யோசனையில் ஆழ்ந்து இருப்பார்.

ஒன்று தான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே…

அப்பிடி ஒரு காதல் இன்று பார்க்க முடியுமா ?

என்னை நான் தேடித் தேடி…உன்னிடம் கண்டுகொண்டேன்….

அடாடா… சூப்பர் வரிகள்…… ஆனால் இன்று…

அது சரி உனக்கென்ன வந்தது இன்று என்று நீங்கள் கேட்பதில் தவறில்லை. ஏங்க சுத்தி முத்தி எங்க பாத்தாலும் சிவப்பு கலர்… ஹார்ட்டு…. ரெட்டை மோதிரம்…சிவப்பு ரோஜா… அப்பறம் ஏங்க நா அதை பத்தி பேச மாட்டேன்.

ஆனா இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் இன்று காலை நடை பயிற்சிக்கு நான் போன போது கண்டு தொலைத்த கண் கொள்ளா காட்சிதாங்க….

பயிற்சியின் நடுவே 15 நிமிட தியானம் செய்வது வழக்கம்.

இன்றும் உட்கார்ந்தேன்…பக்கத்து பெஞ்சில் 3 யுவதிகள். அந்த காலை பொழுதிலும், நன்றாக ஒப்பனை செய்து கொண்டு, பளிச் பளிச்…..நடுவில் இருந்த பெண் மட்டும் முகம் காட்டாமல், வலது புறம் இருந்த பெண்ணின் தோள் மீது சாய்ந்திருந்தாள். அவளும் இவள் கன்னம் தட்டி சமாதான படுத்திக் கொண்திருந்தாள். சரி நம் வேலையை பாப்போம் என கார்டு எடுத்து காதில் சொருகி, தியான app ஐ தேடி, அதை ஆரம்பித்தேன்.

இதமான பெண் குரல்,சல சலக்கும் நீரோடையின் ஒலியுடன், பயிற்சியாளர் பெண்மணி எனக்கு, ஆணைகள் பிறப்பித்தாள்… மூக்கு வழியாக மூச்சை இழுத்து, வாய் வழியாக சில முறை விட்ட பின்பு, இதயத்தை தொட்டுக் கொண்டு, அதற்கு நன்றி சொல்ல சொன்னாள். அரை நூற்றாண்டாக அடித்துக் கொண்டிருக்கிறாய், யப்பா சாமி, நல்ல படியாக தொடர்ந்து அடி, இப்போதைக்கு நின்னு கின்னு தொலைக்காதே என்று செல்லமாக சொல்லிவிட்டு..பெண் பயிற்சியாளர் சொன்னது போல், சுய மேம்பாட்டு வரிகள்….

ஐ ஆம் ஹாப்பி

ஐ ஆம் ஹெலத்தி

ஐ ஆம் அட் பீஸ்…

எங்கத்த பீஸ்… பக்கத்தில் விசும்பல் சத்தம். நம்ம நடு நாயக பொண்ணு தாங்க. கண்ணை திறக்க கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, உலா போன எண்ண ஓட்டங்களை, லகான் போட்டு, கட்டி இழுத்து வந்து மீண்டும்,

ஐ ஆம் ஹாப்பி…என்று ஆரம்பித்தால், சள சள என பேச்சு குரல். சரி இன்னக்கி தியானம் அம்பேல் என்று தெரிந்ததும், கண்ணை திறந்து பக்கத்தில் பார்த்தேன். அப்பிடியே தலை முடியில் பாத்தி கட்டி விட்டாற்போல ஒரு வெட்டு, அதுக்கு ஒரு கலர், (நான் சின்னவளாக இருக்கும்போது எண்ணெய் தடவ வழியில்லாமல் இருப்பவர்கள் தலை இப்படி தான் இருக்கும்… அது அப்போ ‘செம்பட்டை’ இப்போ ஹேர் கலரிங்). ஒரு விடலை… அழும் அந்த பெண்ணை சமாதான படுத்த கையை பிடித்து எழுப்பவதும், முகத்தை பார்க்க முற்படுவதுமாக. ஒரு வழியாக நம்ம ஹீரோயின் மனமிரங்கி கையை எடுத்து விட்டு தன் இருப்பிடம் விட்டு ஏழுந்தாள்.

யப்பே….சிவப்பு லிப்ஸ்டிக்… நன்றாக வெள்ளை பூச்சு முகத்தில்…

அட கொடுமையே… என்னவோ ரொம்ப வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்ததெல்லாம், வீணானதே…

சும்மாவா…. அட பன்னி… அழுது என் தியானத்தை வேறு கலைத்தாயே…

அவன் கை கோர்த்துக்கொண்டு இன்னும் ரெண்டு பெஞ்சு தள்ளி போய் உட்கார்ந்தாள். கருமம்… ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுவிட்டு இடத்தை காலி செய்தேன்.

காதல் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. இந்த வயதுக்கு வராத காதல்(அது காதல் தானா???) எரிச்சல் ஊட்டுகிறது. படிக்கும் பருவத்தில், ஏன் நல்ல நண்பர்களாக இருக்க கூடாது. நன்றாக படித்து, வேலையில் அமர்ந்து, சம்பாதித்து, தானும் பெருமை அடைந்து, பெற்றவர்களையும் பெருமை அடைய செய்து, எவ்வளவு இருக்கிறது…வெட்டி பொழுது போக்கும் இந்த விடலைகளை பார்த்தால் பத்திக் கொண்டு வருகிறது.

சமீபத்தில்தான் ‘ஊரி’ என்ற இந்திய ராணுவம் தொடர்பான படம் பார்த்தேன். இந்த செம்பட்டய கொண்டு மிலிடரயில் விட்டு விட வேண்டும். விடய காலையில் ஒரு பெண்ணிற்காக எழுந்து வந்தவனுக்கு, காலையில் மிலிட்டரி பள்ளியில் எழுந்து கிரௌண்டை சுத்தி ஓடுவது ஈஸி தானே…

பொறுப்பு என்ற ஒன்று இல்லை. இதில் ஆண் பெண் பேதமும் இல்லை.

சினிமாவில் காட்டுவது இல்லை வாழ்க்கை. ஏகப்பட்ட போராட்டங்கள் நிறைந்தது. பொறுப்புகள் கொண்டது. ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு தூண் போல நின்று, வாழ்க்கையை கொண்டு போக வேண்டியது. அந்த காதலில், பாசம், பரிவு, தியாகம், கோவம்,ஊடல்,கூடல்,தேடல், விட்டுக்கொடுத்தல், கண் முடித் தனமாக சப்பை கட்டுதல் இன்னும் இன்னும் எவ்வளவோ…

அந்த பொறுப்பற்ற ஜோடிகளை பார்த்த நொடியில் தோன்றியது தான் இந்த தலைப்பு.

எவ்வளவோ பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த பாடல்… தெரியவில்லை. ஏளனமாக ஆக தான் இந்த தலைப்பை கொடுத்தேன்.

ஆனால் நல்ல காதல் வாழ்க.

காதலர் தின நல் வாழ்த்துக்கள்….

என் ஆயுதம்…

அடாடா…. பயப்படாதீங்கநண்பர்களே!!!

ஆயுதம் ஏந்திய அனு உங்கள் மனக் கண் முன்தோன்றி மறைந்திருப்பேன்.

என்னோட ஆயுதம்என்னோட க்ரோஷா/நிட்டிங் ஹூக்குங்க!!!!!👍

ஒருத்தருக்கு கரண்டி

ஒருத்தருக்கு பேனா

ஒருத்தருக்கு வர்ணம்தீட்ட பருஷ்

என இருப்பதுபோலஎனக்கு என் ஹூக்/நீடில் !!!!!

க்ரோஷா முதலில்அம்மாசொல்லிக்கொடுத்தாலும், ஸ்வெட்டர் பின்னசொல்லிக் கொடுத்ததுமாமியார். நிட்டிங்முதலில் இருந்தேசொல்லிக் கொடுத்ததுமாமியார். ஆனால்குருவுக்கு மிஞ்சியசிஷ்யை ஆகிவிட்டேன்இப்போது. எல்லாம்இன்டர்நெட்ன்கைங்கர்யம் தான்.

அம்மாவுக்கு (அதாவதுமாமியார்) இன்டர்நெட்தெரியாததால், நான்அவ்வப் போதுஅவர்களுக்கு பாடம்எடுக்கிறேன்.

க்ரோஷா / நிட்டிங்…..(இரண்டிற்கும் வித்யாசம்தெரியவில்லைஎன்றால் கூகுளைகேளுங்கள். !!!!)அதுஏதோ ஒன்று என்றுமட்டும் அசட்டையாக சொல்லாதீர்கள்.

இதில் எனக்கு அலாதி ஈடுபாடு. மனது சோர்வடையும் போது என் ஆயுதங்கள் தான் எனக்கு டானிக்.

மனது வலிக்கும் போது புதிதாக ஒன்றை தொடங்கினால், அதில் லயித்து மூழ்கி, முத்தெடுத்து, பார்க்கும் போது அழகாக இன்று உருவாகியிருக்கும்.

அதையும் மீறி சோர்வடையும் நாட்களும் உண்டு. ஏதோ ஒரு வலி தூண்டப்பட்டு, அதன் தொடர்பாக, எப்போதோ நடந்த சம்பவம் நினைவில் வந்து, மீண்டும் அந்த நாள் மனக்கண் முன்னே ஓடி, அப்பப்பா…. ஒரு வழி ஆகி விடுவேன்.

கண்கள் ஊசியை தேடும்…கை பர பர வென்றிருக்கும்…கையில் எடுக்க வேண்டியது தான் மனம் லேசாகும். சில நாட்கள், பொங்கி பொங்கி அழுகை வரும். அழ வேண்டியது தான். சிம்பிள்….

தும்மல் வந்தால் தும்முவது போல

இருமல் வந்தால் இருமுவது போல

அழுகை வந்தால் அழ வேண்டியது தான்.

சின்ன குழந்தைகளுக்கு, பின்னுவதில் தனி மகிழ்ச்சி. நான் பின்னுவதை எந்த குழந்தை அணியும் என தெரியாமல் பின்னுவது இன்னும் த்ரில்…சின்னதும், சுமார் பெரிசுமாக பல ஸ்வெட்டர் இன்று வரை பின்னி பின்னி கை விடப்பட்ட குழந்தைகள் காப்பாகத்திற்கும், வேத பாடசாலைக்கும் கொடுத்தயிற்று. ஒரு சமயம், முதியோர் இல்லத்திற்கு 50 தொப்பி, போட்டு கொடுத்தோம். அதீத மன நிறைவு.

பின்னும்போது, ஸ்லோகங்கள் சொல்லுவதும், பாட்டு பாடுவதும், ஒரு வழக்கம். அதற்காகவே இருவர் ஆர்டர் கொடுத்தார்கள்.

நம் கையால் ஒன்றை உருவாக்கி முடிக்கும் போது பெண் பிரம்மா போல ஒரு பெருமை.

பழையன கழிதல்….

போகி பண்டிகை…

பழயன கழித்து, புதியன புகவேண்டிய நாள்.

பழைய பொருட்கள் மட்டுமில்லாமல்,

பழைய வெறுப்புகள், காழ்ப்புகள், வருத்தங்கள், புகார்கள், எல்லாவற்றையும் கழிப்போம். அதற்காக பிடி விட்டு போன(பிடிக்காமல் போவது வேறு) உறவுகளையும், நட்புகளையும் தேடிப் போய் புதுப்பியுங்கள் என்று சொல்லவில்லை. நடந்த சம்பவத்தை, மனதிலிருந்து நீக்கி விட்டு, முன்னே செல்லுங்கள் என்று சொல்கிறேன்.

ஒரு விதமான மனச்சிறையில் நாம் வாழ்கிறோம். எந்நேரமும் ஏதோ ஒன்றை பற்றி சிந்தனை. (நான் கோட்டை கட்டுவதில் புலி). ஒரு கோட்டை இடிந்து இடிந்து வீழ்கிறது. ஆனாலும், தொட்டில் பழக்கம் பாருங்கள்… மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் முன்னேறி வருகிறேன்.

அந்த ஓவர் தின்கிங் (கோட்டை கட்டும்) பழக்கத்தை இந்த போகியில் நான் கழிக்க போகிறேன்.

சில உறவுகளும், நட்புகளும், என்னை சுலபமாக எண்ணி விட்டார்கள். அவர்களுக்கும் குட் பை….

சிலரது நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு என்ற எனது எண்ணத்திற்கு டாடா காட்டி விட்டேன்.

நீ ரொம்ப ……நல்லவ எவ்ளோ அடிச்சாலும் தாங்கர…என்ற என் பற்றிய அபிப்ராயத்தை, நான் முதலில் கழிக்கிறேன்.

எனக்கும் வலிக்கும்…

50 வயதில் ஒரு சில இடங்களிலாவது என்னை நான் எனக்காக முன்னுரிமை கொடுத்தக் கொள்ள போகிறேன்.

பொருள் சேகரிக்கும் பழக்கத்தை கழிக்க போகிறேன். Minimalism வாழ்க்கைக்கு மிகவும் தேவை.

To live in the present …நிகழ் காலத்தில் வாழ்வது மிக அவசியம். கடந்த காலத்தை என்னை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால், எதிர் காலம் கொஞ்சம் என்னை ஆட்படுத்துகிறது. அதுவும் தானாக நடக்கும் என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டும். அந்த எதிர் கால கவலையை கழிக்க போகிறேன்.

உடல் உபாதை கொடுக்கும் பயத்தை காய் விட்டு அதற்க்கான தீர்வை கண்டுபிடித்து, செயல்பட போகிறேன். இரெண்டு மாதமாக செயல் படுத்திக்கொண்டிருக்கிறேன். (இங்கும் ஓவர் தின்கிங் தான் என் பிரச்சனை).

நீங்களும் மனதிலும், உடலிலும் உள்ள எதிர்மறைகளை நீக்கி, ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.

போகி மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

அன்றொரு நாள் அதே நிலவில் …..

அன்றொரு நாள் இதே நிலவில்

24 நாலு மணி நேர பயணம் …
அதென்ன பெரிய விஷயமா?
இதெல்லாம் ஒரு விஷயம் னு எழுதறியே அனு என்கிறீர்களா ?
அட ஆமாங்க ………….
ஒரு இடத்திலிருந்து புறப்பட்டு இன்னொரு இடத்துக்கு போறதுக்கு 24 மணி நேரம் நா கொஞ்சம் மொக்கையா தானே இருக்கும்…
ஏதோ நடுவுல ஒரு ஜங்ஷன் ல இறங்கி ஒரு மசால் வடை வாங்கினோம், காலாற கொஞ்சம் நடந்தோம், ஹிக்கின்போதம் கடைய ஒரு நோட்டம் விட்டோம் என்று ரயில் பயணமாக இல்லாமல்,
ஆகாச மார்கமாக ….அசௌகரியமாக தான் இருக்கிறது. 8 மணி நேர பயணம், நடுவுல கொஞ்சம் பிரேக் மீண்டும் 8 அல்லது 9 மணி நேர பயணம்

பிடிச்சு வெச்ச பிள்ளையாராட்டம் ஒரே இடத்தில் உக்காரணும் , இந்த கொடி இடையை சுத்தி ஒட்டியாணம் வேற….. அப்பறம் சிரித்துக் கொண்டே உப்பு சப்பு இல்லாத ஒரு சாப்பாட்டை ரொம்ப பிடிச்ச மாதிரி நடித்துக் கொண்டே சாப்பிடனும், …. கொஞ்சம் சிரமம் தான்

ஆனால் என் போன்ற அம்மாக்களுக்கும், மாமியார்களுக்கும், பொதுவாகவே நடு வயது காரர்களுக்கு, கொஞ்சம் அதிகம் தான் .

குஞ்சும் குளுவானுமாக மகள்களை அழைத்துக் கொண்டு இதே 24 மணி நேரம் ரயிலில் பயணித்த காலங்களும் உண்டு.
பிறகு கடைசியாக எப்போது ரயிலில் போனோம் என்று யோசிக்கும் அளவு, விமான பயணங்கள்.
முதல் வெளிநாட்டு பயணமும் பெண்களுடன் தனிப் பயணம் தான். அது முடிந்து10 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வெளிநாட்டு பயணம். ஆனால் முந்தையதை விட நீ ண்ண்ட பயணம்.
இந்த பயணத்திற்குள், வயதும் நாலு முறை, ஆஸ்பத்திரி போய் வந்து, உடம்பில் அங்கங்கு வலி வேதனை ….
கழுத்து வலி வந்துவிடுமோ….(என் பெரிய கவலை)
மூட்டு வலித்தால் என்ன செய்வது இப்படி ஏகப்பட்ட கேள்விகள் மண்டைக்குள்
எப்படியோ, கணவருடனும் பெண்ணுடனும் ஒரு பயணம், மீண்டும் பெண்களுடன் ஒரு பயணம் என்று 2 ,3 முறை பொய் வந்த பிறகு, கணவர் அமெரிக்கா வர வேலை இருந்ததால், அப்பாவுடன் போம்மா கம்பெனி இருக்கும் என்றார்கள் குழந்தைகள்.
நானும் சரி என்று புக் செய்து, மனதளவில் ரிலாக்ஸ் செய்து கொண்டுவிட்டேன். அவரை பார்த்து விட்டால், அவர் உடன் இருந்தால் எல்லாம் பார்த்துக்கொள்வார் என்று நாடி நரம்பு சதை எல்லாம் தளர்ந்தது.
இன்றைய தலை முறைக்கு இது புரியுமா என்று தெரியவில்லை. என்னால் முடியாதது இல்லை. அவர் உடன் இருக்கும் போது அது கொடுக்கும் சவுகரியம்.

எதிர்பார்த்தது போல் நடந்து விட்டால் என்ன ருசி இருக்கிறது.

அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது என்று தெரிந்த உடன், ஒரு பதட்டம், ஒரு ஏமாற்றம்.

தெரியாத , பரிச்சயமில்லாத வழியில்

போக வேண்டுமே.

நம்மால் முடியுமா?
வழிகாட்டல்களை சரியாக பார்த்துக் கொண்டு போய் விடுவோமா?…..
ஒரு டெர்மினல் விட்டு மற்றொரு டெர்மினல்க்கு போக ரயில் இருக்குமா பஸ் இருக்குமா?……
பசித்தால் வாங்கி திங்க, கையில் இருக்கும் டாலர் உபயோகப் படுத்த முடியுமா??………
ஒரு வேளை கையில் இருக்கும் காசை விட அதிகமாக தேவை பட்டால்?…..
கையில் இருக்கும் கிரெடிட் கார்டு வேலை செய்யுமா?…..
சார்ஜ்ரை நினைவாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்… எப்போதும் சார்ஜ் இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டும் …..முடிந்தபோதெல்லாம் குடும்பத்திற்கு அறிவிக்க வேண்டும்…
இட்லியும், வெந்தயக்கீரை சப்பாத்தியும் கையில் எடுத்துக்க்கொள்வோமா?…..
ஒரு பாக்கெட் மொனாகோ பிஸ்கட் கூட வைத்துக்கொள்ளலாம். உப்பு போட்டு சாப்பிட்டால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

இப்படி மண்டைக்குள் ஒரு ட்ராபிக் ஜாம்.

அது விலக 4 நாட்கள்.

பிறகு என்ன, வழக்கம் போல மனதை தைரிய படுத்திக்கொண்டு, ஆக வேண்டிய வேலையை பார்க்க வேண்டியதுதான்.

இந்த காலத்து பிள்ளைகள் போல ஒரு backpack எடுத்துக் கொண்டேன்.

உங்களுக்கு எந்த உடை சௌகரியமாக இருக்குமோ அதில் பயணம் செய்யுங்கள். வெளிநாடு என்பதற்காக பாண்ட் ஷட் என்று பொருந்தாத உடை அணிந்து, ஒரு மாதிரி நடந்து, உட்கார்ந்து உங்களை நீங்களே தண்டித்து கொள்ளாதீர்கள்.

ஒரு தெளிவாக தெரிய கூடிய ஜிப் லாக் பையில் உங்கள் சோப்பு சீப்பு கண்ணாடி ,பொட்டு பாக்கெட், லிப்ஸ்டிக், கண் மை, குட்டி லோஷன், குட்டி பேஸ்ட், அம்ருதாஞ்சன, என எது அத்யாவஸ்யமாக தேவையோ அதையெல்லாம் எல்லாம் வைத்துக் கொண்டேன்.

ஏன் தெளிவாக தெரியும் ஜிப் லாக்? ஏனென்றால், வெளி நாட்டு பாதுகாப்பு பரிசோதனையில், அவர்கள் அது போல் ஒரு பையில் இதையெல்லாம் வைக்க சொல்கிறார்கள். சில இடங்களில் அவர்களே பையும் தருகிறார்கள். அப்படி தரவில்லை என்றால், பாதுகாப்பு பரிசோதனையின் போது, அரக்க பறக்க எல்லாவற்றையும் தோண்டி எடுத்து, கீழே கொட்டி, பொறுக்கி, தட்டு தடுமாறி, இது தேவையா.?

சில பா.சோ. இடத்தில், போட்டுக்கொண்டு இருக்கும் ஷூ வை கூட அவிழ்த்து ட்ரேயில் வைக்கவேண்டும். அதை கூட நான் எளிதாக்கி கொண்டு விட்டேன். வெல் க்ரோ ஓட்டும் ஷூ என்னுடையது. லேஸ் கட்டும் ஷூ அப்போது தான் மணி முடிச்சு போட்டுக் கொண்டு நம் பிராணனை எடுத்து, நாம் காலை தூக்கி நின்றாடும் தெய்வமே என்று அபிநயம் பிடித்து…. வேண்டாமே

அபிநயம் என்றதும் நினைவிற்கு வருகிறது, கொலுசு அல்லது நான் அணிவது போன்று காப்பு.

ஆர் யூ அ டான்செர்? என்று கேட்டார் பரிசோதகர், அந்த மெஷின் பீ பீ ப்பீ என்று அலரியவுடன். ஏன்டாப்பா… கொலுசு போட்டவ எல்லாரும் டான்செரா? ஒரு ஜதி வேண்டுமானால் போட்டு காட்டவா? என்று கேட்க தோன்றியது…

இது முடிந்தவுடன், பரிசோதனைக்கு வைத்த எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டீர்களா என்று ஒரு முறை பார்த்துக் கொள்ளுங்கள். முக்கியமாக பாஸ்போர்ட் வெள்ளியில் வைத்திருந்தால்.

அடுத்து விமானத்திற்குள் பிரவேசம் முடிந்த மட்டும் கொஞ்சமாக எடுத்துக்கொண்டு போக பழகுங்கள். பிரயாணம் சுகம். என்னோட ஒண்ணு விட்ட மாமா பேத்தி கல்யாணத்துல வெச்சுக் கொடுத்த அந்த பை, எவ்ளோ வருஷமா என் கிட்ட இந்த புடவை இருக்கு தெரியுமா, என்றெல்லாம் சென்டிமென்ட் பேசாமல், அதி அவசியம் என்பதை மட்டும் சுமந்து கொண்டு போங்கள்.

விமானத்திற்குள், 1 மணிக்கொரு தரம் எழுந்து பாத்ரூம் வரை நடந்து போங்கள். அங்கு நின்று கையை காலை அசையுங்கள், தோள் பட்டையை அசையுங்கள். சுற்றும் முற்றும் பராக்கு பாருங்கள்(யாரையும் குருகுருவென்று பார்த்து தொலைத்து திட்டு வாங்கிக் கொண்டு என்னிடம் வராதீர்கள்)

சரி அப்படியே பாத்ரூம் போய்விட்டு போய் உட்காரலாம்.

பாத்ரூம் கதவுகள் சில நேரங்களில் நம் வீட்டில் இருக்கும் பாத்ரூம் போல திறக்கும். சில வற்றில், மடிந்து கொள்கிறது. உள்ளே போய் தாழ் போட்டால் தான் விளக்கு ஏரியும். திறக்க வரவில்லை என்றால் உதவி கேளுங்கள். உள்ளே போய் திறக்க வரவில்லை என்றால் பதட்ட படாதீர்கள். மூச்சை இழுத்து விட்டு, நிதானமாக செயல் படுங்கள். தண்ணீர் சிந்தாமல் உபயோகியுங்கள். மற்றவர்களும் உபயோகிக்க வேண்டும். சுத்தமாக வையுங்கள். Flush செய்தால், புஷ் என்று ஒரு பயங்கர சத்தம்.வரும். தானே அடங்கும்.

விமான பணி பெண்களும், ஆண்களும் ஒரு ஸ்லேடையாக ஆங்கிலம் பேசினால், ஒரு முறைக்கு இரு முறை, கேளுங்கள். அவர்கள் சிலேடை நமக்கு புரியாது… நம் சிலேடை அவர்களுக்கு புரியாது. கையோ கால வலித்தால், அவர்களிடம் கேளுங்கள். Pain killer வைத்திருக்கிறார்கள். ஒரு பேப்பர் இல் கை எழுத்து வாங்கிக் கொண்டு தருகிறார்கள்.

சாப்பிட கொடுப்பதை பிடித்ததோ பிடிக்கலையோ, வயிற்றை ரொப்பி கொள்ளுங்கள். படிப்பதற்கு புத்தகம், பாட்டு கேட்பதற்கு ஹெட் போன் எல்லாம் வைத்துக்கொள்ளுங்கள்.

ஏர்போர்ட்டில் free வைஃபை கனெக்ட் செய்து கொள்ளுங்கள்.

கொஞ்சம் முன் கூட்டியே திட்டமிட்டால் எல்லாம் எளிதாக இருக்கும். நானும் அதை தான் செய்துள்ளேன்.

எனக்கு தெரிந்தவரை பகிர்ந்துள்ளேன். முதல் முறை மகளின் \ மருமகளின் பிரசவத்திற்க்கோ, எதர்க்கோ போகும் பெண்மணிகளில், ஒருவருக்கு கூட இந்த பதிவு நம்பிக்கையூட்டினால் எனக்கு சந்தோஷம்.

வானப்பிரஸ்தம்

ப்ரஹம்மச்சர்ய

கிரஹஸ்தாஸ்ரமம்

வானப்ரஸ்தம்

முதல் இரண்டும் வாழ்வின் உற்சாகத்தில் இருக்கும்போது நடந்து விடுகிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் இயல்பாக, மனதிற்கு கஷ்டங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல், அப்படியே காலம் ஓடி நம் கைகளில் சிக்காமல் கடக்கிறது.

மூன்றாவதாக வரும் வானப்ரஸ்தம் நம்மிடம் சவால் விடுகிறது.

வானப்பிரஸ்தம் என்பது வர்ணாசிரம தர்மத்தின்படி மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும். இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல். பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, துறவறத்திற்குஆயத்தப்படுத்துதல் ஆகும். இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்.

இதை எனக்கு கூகுள் சொல்கிறது.

என்னுடைய தாழ்மையான அபிப்ப்ராயத்தில், 60வது வயதிற்கு மேல் இல்லை… இன்னும் எவ்வளவு முன்னதாக மனதளவில் கடைபிடிக்க இயலுமோ அவ்வளவு நல்லது.

நீ சாமியார் …என்று என் வீட்டில் என்னை ஒருவர் கூறுவார்.

இல்லவே இல்லை. அதற்கான தகுதி எனக்கு இல்லை. தாமரை இலை தண்ணீர் போல் இருப்பது துறவறம் இல்லை.

நான் என முப்பத்தைந்து நாற்பதுகளிலேயே வானப்ரஸ்தாசரமத்திற்கு தயார் செய்து கொண்டுவிட்டேன்.

அதில் என் குருமார்கள் என் அப்பாவும் அம்மாவும். அவர்கள் வாழ்ந்த யதார்த்த வாழ்க்கை. ஒரு நிலைக்கு மேலே நாங்கள் எங்கள் கருத்துக்களை மட்டும் கூறுவோம், முடிவு உன்னுடையது என்று எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.

எங்களை காடு வா வா என்கிறது … நீ உன் வாழ்க்கையை பார். உன் கணவன் குழந்தைகள் அவர்கள் எதிர் காலத்தை கவனி என்றார்கள்.

ஒரு விதத்திலும் எமோஷனல் பிளாக் மெயில் செய்யவில்லை.

ஸ்வாமி சுகபோதானந்தா அவர்களின் புத்தகத்தில் பல வருடங்கள் முன் படித்த ஞாபகம்.

வாழ்க்கை ஒரு ரிலே ரேஸ் போல… நீ ஓடி முடிக்கும் போது அடுத்தவனிடன் கம்பை கொடுக்க வேண்டும்.

எவ்வளவு நிதர்சனமான உதாரணம்.

நாமும் பாசம் கண்ணை கட்டாமல்,

அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைக்கலாமே.

அவர்கள் தவறினால் திருத்தி கொடுக்கலாம். தவறு செய்தால் தானே அவர்களும் கற்று கொள்வார்கள்.

1. எல்லா வேலைகளும்நீங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். பகிர்ந்து செய்தால் எல்லாரும் active ஆக இருக்கலாம்.

2. வரவு செலவில் ரொம்பவும் மூக்கை நுழைக்காதீர்கள். பெண் பிள்ளைகள் அதிகமாக செலவு செய்வதாக தோன்றினால்… நல்ல முறையில் சொல்லுங்கள். நக்கல், குத்தல் , நாலு பேர் முன் சொல்வது இதெல்லாம் வேண்டாமே. அதையும் மீறி,

நான் பாதுக்கறேன் அப்பா/அம்மா என்று சொன்னால் விட்டு விடுங்கள். புலம்ப வேண்டாம்.

3. உங்கள் வயதுள்ளவர்களை சந்தித்தால், இந்த காலத்து பசங்க எங்க… என்று ஆரம்பித்து புலம்ப வேண்டாம். கைகளை போச்சு எல்லாம் என்று காட்டுவது, தலையில் அடித்து கொள்வது, உதட்டை கோணுவது…வேண்டவே வேண்டாம்.

Body language என்று சொல்லப்படும் நம் உடல் பாவனை ரொம்ப முக்கியம்.

4. நாளை நாம் ஓய்வு பெறுவோம் என்று முன்கூட்டியே ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல், திடீரென்று நிறைய நேரமும், செய்வதற்கு ஒன்றும் இல்லாது போலவும் தோன்றும். அப்போது யார் எது சொன்னாலும் தப்பாகவும் தோன்றும். புத்தகம் இன்றியமையாத துணை. கொஞ்சம் டெக்னாலஜி தெரிந்தால் தூள் கிளப்பலாம்.

5. வாட்ஸ் ஆப் / facebook…இன்ஸ்டாகிராம்

எப்பவுமே என்ன வேன்டிற்கு என்று குற்றம் சொல்லாமல், தெரிந்து கொள்ளுங்கள்.

நான் அனுப்பின message கு ப்ளூ டிக் வந்தது.. ஆனாலும் நீ பதில் அனுப்பல னு பெண் பிள்ளையை நோண்டாதீர்கள்… அவர்கள் என்ன வேலையாய் இருக்கர்களோ…கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்…

(ரொம்பவே நேரம் கடத்தினால் வளாசுங்கள் ,,😎)

இன்னிக்கி என்ன சமையல்? என்று தினமும் கொடையாதீர்கள். என்னத்தையோ சமைக்கட்டும் சாப்பிடட்டும்…

6. எனக்கு பொழுது போகவில்லை, வீடு வெறிச்சுன்னு இருக்கு, வாழ பிடிக்கலை, இதெல்லம் சொல்லி குழந்தைகளை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தாதீர்கள்.

7. முதியோர் இல்லம்.

இன்று பல ஊர்களில் முதியோர் இல்லம் என்கிற பேரில், நல்ல ஹோட்டல் போல வசதிகள் தருகிறார்கள். அதனால், அங்கு போய் இருப்பதை, ஒரு தண்டனை போல பாவிக்காமல், ஜாலியாக இருக்க பாருங்கள்.

உங்களால் ஒரு வீட்டை நடத்துவதற்கு, சிரமமாக இருந்தால், முதியோர் இல்லத்தில் சென்று இருப்பதில் தவறில்லை.

8. Selflove: உங்களை உங்களுக்காக விரும்புங்கள். அதில் தவறே இல்லை. குற்ற உணர்வும் வேண்டாம். ஓடி ஓடி உழைத்து சம்பாதித்து, பிள்ளைகளை படிக்க வைத்து, மணமுடித்து செட்டில் செய்து விட்டீர்கள். இப்போது உங்களுக்காக வாழலாமே. பிடித்த சினிமா பாருங்கள்…கோவிலுக்கு சென்று வாருங்கள், ஊட்டியோ கொடைக்கானலோ போய் வாருங்கள். போகும் இடத்தில் சௌகரியமாக தங்கி, உண்டு, இளைப்பாருங்கள்.

50 வது வயதில் எனது 50 வது பதிவு இது.

வாழ்க்கை வாழ்வதற்க்கே. எல்லோருமே தங்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம்மால் ஆனது, எல்லோருக்கும் நல்ல வாக்கு சொல்லுவோம். தளர்ந்த உள்ளங்களுக்கு

இதுவும் கடந்து போகும் கண்ணே ….

என்று உற்சாகமூட்டுவோம்.

என்னை அக்காவாக, அத்தையாக, மமியாக, பெரியம்மாவாக, தோழியாக பார்க்கும் எல்லோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

பதிவிற்குள் பதிவு

மயிலேயே கயிலை

கயிலையே மயிலை..

ஐம்பது வருட உறவை நினைவு கூர்ந்தேன்..

தோழி ஒருத்தி கூறினாள்.. கண்ணீர் முட்டுகிறதென்று…

மண்ணாசை வேண்டாம் என்றேன்

மண்ணாசை அல்ல…விலக்க முடியாத நினைவுகளின் வியாதி என்றாள்.

நினைவுகளையும் தேர்ந்தெடுங்கள் என்றேன்.

என்னிடம் இருப்பவையெல்லாம் நல்ல நினைவுகள் மட்டுமே ……

மார்கழி மாதத்து அதிகாலை இருளில் போட்ட கோலம்.

இரவு உணவிற்கு பின் நாயர் கடையில் தம் அடித்துவிட்டு, அப்பா வாங்கி வரும் வாழைப்பழம்

இன்று வரை யாருக்கு யார் என்ன வேண்டும் என்று புரியாத கோடி வீட்டு குருக்கள் குடும்பம்…

காலியாக இருந்த தெருவில் ஞாயிறு களில் வாடகை சைக்கள் பழகியது

இதயம் பேசுகிறது வார இதழ்க்காக காத்திருந்தது

பாலங்கள் படித்தது…சிவசங்கரியின் வாக்கு வேதமாக இருந்தது

பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு சென்றது

பத்தில் கோட்டை விட்டது

பன்னண்டில் பாரிஸில் படித்தது

கல்லூரிக்கு தோழியுடன் சென்றது

ரவி புக் ஹௌஸ் இல் தினம் ஏதாவது ஒன்று வாங்கியது

கண்ணாடி வளையலை புடவை மெல் வைத்து பார்த்து வாங்கியது

கொலுசு போட்டுக் கொண்டு வீட்டின் முற்றத்தில் மேலும் கீழும் நடந்தது

மருதாணி வைத்துக் கொண்டு ரசித்தது

அப்பாவுக்கு புற்று நோய் என தெரிந்ததும் அம்மாவிடம் ..நான் இருக்கிறேன் என தோள் கொடுத்தது

என்னவர் என்னைப் பல வருடங்கள் கழித்து பார்த்தது, அவருக்காக பாடியது

வாழை மரம் நட்டு , மணப் பெண் கோலம் பூண்டது

22 வருடங்கள் பூரணமாக இருந்தது

28 வருடங்கள் வந்து வந்து போனது

மொத்தம் 50!!!!

கபாலி, கற்பகாம்பாள்

கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?

அதிலிருந்து 2 வீடு தள்ளி தான் என்னோட வீடு…

உள்ளே நுழைந்தவுடன் கோவில் வீடு எண்2 என்று பதித்த ஒரு கல் இருக்கும். அதை தாண்டினால், ஒரு பெரிய நிலப் படியும் பெரிய கனமான கதவும்.

இப்பிடி சொல்லிக் கொண்டிருந்த பந்தம் கடந்த 9ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கபாலி கோவிலுக்கு சொந்தமான வீட்டில் என் அப்பா 50 வருடங்கள் முன் வாடகை தாரராக குடி போனார். அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் என் அம்மாவின் சீமந்தமாம்..

ஒட்டு வீடு தான். நீண்ட தாழ்வாரம், கூடம்,ரேழி, முற்றம்,புழக்கடை, வெராண்டா…..

இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

வீட்டின், ஓரோர் இடங்கள்.

அந்த பெரிய கதவில்

P.S.Ramaswamy

Mrs. Lakshmi Ramaswamy

என்று ஒரு போர்டு.

ஒரு முறை நான் சாக் பீஸில் என் பெயரையும் அதற்கு கீழே எழுதினேன். உறவினர் ஒருவர், என் மேல் ரொம்ப பாசமானவர், எனக்கு பிளாஸ்டிக் இல்

R.Anuradha IN/OUT 😊😊😊

டாக்டர் ரூம் வாசலில் இருக்குமே அது போல செய்து அன்பளிப்பாக கொடுத்தார்.

அதை தாண்டினால் ரேழி(அப்படினா???) எனக்கு தெரியாது… வீட்டில் ஒரு பகுதி அவ்வளவு தெரியும். அந்த ரேழியில் என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி போட்டோ. அதன் வலப் பக்கம், ஒரு ரூம். ஏன் அதை நாங்கள் first ரூம் என்று சொன்னோம்??🤔🤔🤔முதலில் வருவதாலோ? அந்த first ரூம் தான் எங்கள் ஹால், லிவிங் ரூம், பெட் ரூம் எல்லாம். அம்மாவும் அப்பாவும் தங்கள் இறுதி சுவாசத்தை விட்டதும் இங்கே தான். அதில் அம்மா அப்பாவின் ஒரு படம். அம்மாவும் அவர் தோழியும், அம்மாவின் பட்டம் பெற்ற படம், அம்மா மடிசாரில், இன்னும் சில தெய்வ படங்கள்.

அதை தாண்டினால் ஒரு இடம், 2 படி இறங்க வேண்டும். ஒரு சின்ன ரூம் போல…பாய் படுக்கை வைக்க. அங்கிருந்து ஒரு படி இறங்கினால் , வெட்ட வெளி மித்தம்(முற்றம்). கொடிகள் கட்டப் பட்டிருக்கும் துணிகள் காய போட. வலதுபுறம் ஒரு பெரிய குளியல் அறை. (மும்பையில் அது பெட் ரூம்!!!) அதில் 2 சிமென்ட் தொட்டிகள். துணி துவைக்கும் கல்…மூடாத தண்ணீர் வடியும் கால்வாய். (சாக்கடை என்றும் சொல்லலாம்)அதில் அந்த நாட்களில் பாய்லர் இருந்தது. வென்னீர் போட.

முத்தத்தின் ஒரு கோடியில், என் அப்பா எனக்காக வைத்த நித்யமல்லி செடி. பாதி முத்தத்திற்கு படர்ந்திருக்கும். நடுவே ஒரு ஆள் நுழைகிறார் போல ஒரு gap. ஒரு ஸ்டூல் போட்டு ஏறினால், நம் உடல் அந்த gap இல் நுழைத்துக் கொண்டு, பூக்களை பறிக்கலாம். அப்பப்பா….. எவ்வளவு பூ… இதை எழுதும்.போது கூட எனக்கு வாசனை அடிக்கிறது. என் பூ தொடுக்கும் ஆர்வம் இங்கிருந்து தான் தொடங்கியது. நீண்ட பின்னலில், எங்கள் வீட்டு நித்யமல்லி… அம்மாவின் கொண்டையில், காலில் வாழை நார் மாட்டி எசைத்த அரை வட்ட வேணி…

குளியலரையை அடுத்து ஸ்டோர் ரூம். குளித்து விட்டு உடை மாற்றவும், பல சரக்கு சாமான்( இந்நாள் grocery😁) வைக்கவும் கெஸ்ட் ரூம் எல்லாம் இது தான்.

அதை தாண்டினால் தாழ்வாரம். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் எனக்கு இங்கு உட்கார வைத்து தான் சாப்பாடு. அன்றும் இன்றும் எனக்கு அது தப்பாக படவில்லை.

அங்கிருந்து 2 படிகள் ஏறினால் சமயலறை. இன்றைய பெரிய மாஸ்டர் பெட் ரூம் அளவு. பூஜை அறையும் டைனிங் ஏரியா வும் எல்லாம் இதற்குள்.

தளிகை பண்ற உள்…(ஐயங்கார் வழக்கு சொல்)…

இந்த நாள் இனிய நாள் …

வழங்குபவர் தென்கச்சி சுவாமிநாதன்…

ட்ரான்சிஸ்டரில் கேட்டுக் கொண்டே எல்லா படங்களுக்கும் அம்மாவும் அப்பாவும், பவழமல்லி மாலை கோர்ப்பார்கள். (புழக்கடையில் பெரிய மரம்)கருவேப்பிலை மரமும் இருந்தது. இந்த த.உள்ளிலிருந்து பார்த்தால் வாசல் தெரியும். வாசலில் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு.தாழ்வாரத்தில்ருந்து வலப் பக்கமாக போனால் ஒரு சந்து போல வந்து புழக்கடையில் விரியும். அங்கு தான் டாய்லெட். 2007 வரை கதவு கூட இல்லாத கழிப்பறை. வெளியே வாளியில் தண்ணீர். யாரேனும் வரும் சத்தம் கேட்டால், உள்ளிருப்பவர் கணைக்க வேண்டும் 🤣🤣😂😂 கதவு இல்லாதது எனக்கு மட்டும் அல்ல என் பெண்களுக்கும் கூட அசௌகர்யமாக பட்டதில்லை.இது தான் எங்கள் வீட்டின் வரைபடம் !!!ஒன்ன பாக்காம ஒன் கையால மருந்து சாப்பிடாம போய்டுவேனோ… என்றும், இனிமே கை குழந்தையை தூக்கிண்டு பாம்பே லேந்து வந்து அலையாதே… நான் போய்ட்டேன்னு தகவல் வந்தப்பரம் வந்தா போறும் என்று சொன்ன அப்பாவும்,கற்பாகம்பாள் காலடில போகணும்,இனிமே நானும் ஒனக்கு ஒரு பொண்ணு தானே சீனு? என்று கேட்ட அம்மாவும்… இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை மிக மிக நிறைவானது. அவர்கள் பெற்ற நானும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். போதும் என்ற பொன்னான மனம் எனக்குள் விதைக்கப் பெற்றவள். வாடகை நிலுவை தொகை 5 லட்சத்து சொச்சமும் கட்டி விட்டு, வீட்டையும் கோவிலுக்கு திருப்பி கொடுத்துவிட்டு வரும் போது மனதில் எந்த வித சலனமும் இல்லை. மாறாக பெரும் நிம்மதி. யாரிடமும் காசு வாங்காமல், sub let செய்யாமல், அப்பா அம்மா பெயரை காப்பாற்றி விட்டேன். அதற்கு முழு நன்றி என் கணவருக்கு. அவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.கடந்த 9ஆம் தேதி , நர்த்தன விநாயகருக்கு ஒரு சதிர் காய் போட்டு விட்டு , கபாலிக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வீட்டை ஒப்படைத்தேன்.கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?அதிலிருந்து 2 வீடு தள்ளி என்னோட வீடு…….”.இருந்தது”#மைலாப்பூர் #கபாலி

நன்றியுடன் உங்கள் அனு …..

இன்று பிறந்த நாள்

50 முடிந்தது பாதி கிணறு ??

யாருக்கு தெரியும்.

ஆனால் 50 வருடங்களை திரும்பி பார்த்தால், சரி…ஒரு 40 வருடங்களாவது நினைவிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள

நல்ல வாழ்க்கை தான்.

இந்த பதிவை 50வது பதிவாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. மனதை தொட்டால் தான் பதிப்பது என்று ஒரு பாலிசி! அதனால் பக்கத்தை ரொப்பி எழுதுவதில் உடன்பாடில்லை.

காலம் சுழன்று கொண்டிருக்கிறது. எதற்காகவும் யாருக்காகவும் நிற்காமல்.

உப்பும் தண்ணீரும் ஊற ஊற எல்லாம் சரியாகும் என்று அம்மா சொல்லுவாள். துக்கமும் சுகமும் மாறி மாறி தான் வாழ்க்கை.

அது சரி… வேதாந்தம் பேசாமல், மொக்கை போடாமல், நீ என்ன கிழித்தாய் னு சொல்லு என்கிறீர்களா?

பெரிதாக ஒன்னும் இல்லை.

நல்ல மகள்… நீ ரொம்ப….நல்லவ 🤣🤣என்று பலர் கூறும் போது அம்மா அப்பாவை நினைத்துக் கொள்கிறேன். அந்த ஜீன்ஸ் இல்லையென்றால் ஏது நல்ல குணம். 2 வழி தாத்தா பாட்டிக்களையும் தான் சேர்த்து நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் ஆசீர்வாதம் உணர்கிறேன்.

************************************

நல்ல மனைவி….மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…

ஆமா…. ஆமா…. என் கணவருக்கு அந்த வரம் கிடைச்சிருக்கு…

என்ன செய்வது …அவர் பதிவதில்லை அதனால் நானே சொல்லிக்கொள்கிறேன். நான் பேச நினைப்பதெல்லாம் அவர் பேச , அவர் பேச நினைப்பது /நினைக்காதது எல்லாம் நான் பேச…கவியரசர் கண்ணதாசன் என் கணவரை சந்தித்ததில்லை…(நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு 🤣🤣😎) இல்லைனா பாட்டை மாற்றி எழுதிருப்பார். இப்பிடிஒரு கணவன் அமைய என்ன தவம் செய்தேனோ. பெரியவர்களின் ஆசி, பூர்வ ஜென்ம நல்ல கர்மா…சீனு என்கிற ஸ்ரீனிவசனை என்னோடு இணைத்தது னு தான் சொல்லணும்.

************************************

நல்ல மருமகள்…பெண் குழந்தை இல்லாத மாமியார் மாமனாருக்கு மகளானேன்.

இந்த ஒரே வாக்கியம் போதும்…

என் மாமனார் தாயுமானவன் !!!

ஒரு மருமகளுக்கு இவ்வளவு தான் செய்ய முடியும் என்கிற தடையை உடைத்தவர். அறுவை சிகிச்சை முடிந்த 6 மாத காலத்தில் கண்ணை இமை காப்பது போல னு சொல்லுவார்களே அது போல என்னை காத்தவர். 4 மாதங்கள் வாரம் தோறும் எனக்கு மூத்திர பை மாற்றியவர். இன்றளவும் எங்கள் உள்ளாடைகள் மடிப்பவர். (வெக்கமாயில்லியா னு கேட்கிறீர்களா? )அப்பாவிடம் மகளுக்கு என்ன வெட்கம்.

இன்றளவும் மறக்க முடியாதது… ரயில் பயணத்தில் ஒருவர் என்னை பார்த்து கேட்டது…”மாமனாராயா இப்படி அப்பா அப்பா னு கூப்படறீங்க…உங்க அப்பா னு நெனச்சேன்”அது என் பாசத்திற்கான சான்றிதழ்.

மாமியார்….அடாடா… நாங்க சீரியல் மாமியார் மருமகள் இல்லியே. காலை ஐந்தரை மணிக்கு காபி பொழுதில் கூட ஸ்வெட்டர் போடுவது பற்றி ரொம்ப தீவிரமா டிஸ்கஸ் பண்ணுவோம்.

ஹாஹாஹா… அதுக்காக அப்பிடியே ஆதர்ஷ மாமியார் மருமகள் னு எல்லாம் சொல்ல முடியாது. எலியும் பூனையுமா கூட இருப்போம். 2 நாள் 3 நாள் அப்பறம் மருந்துட்டு பொழப்ப பாக்க வேண்டியதுதான். குடும்பத்தை தாண்டி வெளி ஓலகத்ல எத்தனையோ விதமான மனிதர்களை பொறுத்துக் கொள்கிறோம்…நம் கண்ணான கணவரின் அம்மா அப்பா வை கொஞ்சம் கூடுதல் பொறுமை காட்டி அரவணைக்கலாம்.பெரியவா எதானும் சொன்ன மூஞ்சியை தூக்கி வெச்சுக்காம, அதை எப்படி சரி ஆக்கறது னு பாரு…இங்க கேட்பது நாகலக்ஷ்மிங்கிற எங்க அம்மா ஓட அசரீரி😂************************************நல்ல அம்மா…இதுக்கு தனி பதிவே போடணும்!!!!ரெண்டும் ரெண்டு கண்ணு.சின்ன பொட்டலமாக வந்த கடவுளின் பரிசுப்பொருள்கள்.முதலில் என்னை தாயாக்கி இப்போது என்னை சேயாக்கியவர்கள்.கடவுள் அருளால், பெரியவர்கள் ஆசியால், அவர்கள் துணையுடன் நல்ல பிள்ளைகளாக வளர்த்த பெருமை உண்டு. ஒரு தாய்க்கு இது போதும்.************************************நல்ல நண்பி !!!!… நிறைய நண்பர்கள். வெகு காலமாக தெரிந்தவர்கள், சில காலமாக தெரிந்தவர்கள், நண்பர்களின் நண்பர்கள், நண்பர்களின் குடும்பத்தினர், முகநூல் நண்பர்கள், இன்ஸ்டாகிராம் நண்பர்கள், வாட்சப் நண்பர்கள், போதுமா…..எல்லோர்க்கும் தெரியும் சாய்வதற்கு என் தோள்கள் எப்பவும் தயார் நிலையில் இருக்கும் என்று.

இனும் ஒரு பெரிய பாத்திரம் பாக்கி . அதற்க்கான காத்திருப்பில் இருக்கிறேன்

50 வயதில் கசப்பான அனுபவங்களும் , மனிதர்களும், ரணங்களும், வலிகளும், காயங்களும், இல்லாமல் இல்லை. புரையோட விடாமல் பார்த்துக்கொண்டுவிட்டேன். கொஞ்சம் லேட்டாக தான் சிலரை புரிந்து கொண்டேன், ஆனால் இப்போதாவது புரிந்ததே என்று சந்தோஷம்.புரிந்து கொண்டு????என்னை விலக்கிக் கொண்டேன்.என் நிம்மதி முக்கியம் என்று உணர்ந்ததால்.

கருமையே அழகு காந்தாலே ருசி …..

கண்னா கருமை நிற கண்ணா…என்று விஜயகுமாரி 50 களிலோ 60 களிலோ ஒரு படத்தில் பாடுவார். தான் கருப்பாக பிறந்துவிட்டதற்காக தன்னை எல்லோரும் வெறுப்பதாக.

அழகாக பிறந்த வாழைக்காய் அன்று என் கையில் அகப்பட்டு இந்த பாடலை பாடியது.

எல்லா நாட்களும் ஒரு போல இருந்து விடுவதில்லை. ஆனால் எனக்கு பிடிவாதம் அதிகம்… எவ்வளவு கஷ்டமான நாளாக இருந்தாலும், மண்டையை தலையணையில் சாய்க்கும் போது எனக்கு நானே சொல்லிக் கொள்வது…

நாளைய பொழுது நன்றாக விடியும் !!!!

சரி…வாழக்காய்க்கு வருவோம்….

முதல் நாள் முழுவதும் ஏன் ஏன்… என்று அவ்வப்பொழுது விடை தெரியாது நடக்கும் சம்பவங்களில் ஒன்று நடந்து, மனம் முழுவதும் துக்கம் பரவி , கண்களை மூடினால் மனம் பதறி, புரண்டு புரண்டு, கனத்த மனதுடன் எழுந்து, சமைக்க முற்ப்படும்போது தாளித்து கொட்டிய உளுத்தம்பருப்பு ஒரு நொடியில் கருத்து, உள்ளே போக வேண்டிய வாழைக்காய், உள்ளே பாதி வெளியே பாதி என்று விழுந்து, என்னவோ போங்களேன்…. கறுத்து .. நன்றாக வேகாமல், என்னவெல்லாம் ஆக முடியுமோ அவ்வளவு ஆயிற்று…. அதையும் விடாமல் தின்றுவிட்டோம் என்பது வேறு கதை.

ஆனால், அது தானே யதார்த்தம் ?

சில நாட்கள் இப்படியும் இருக்கும். இன்று நான் என்ன சமைத்தேன் பாருங்கள் என்று எப்போதும் ஒரு போல அழகாக அமைத்த தட்டில் எல்லாம் அழகாகவே காட்ட முடியுமா?

ஒரு நாள் தீயிந்து விட்ட வாழைக்காயையும் காட்டுவோம் என்று தோன்றியது.

பக்குவம் இல்லாதவர்களுக்கு, சோஷியல் மீடியா தான் நிஜம் என்று நம்பத் தோன்றும் . எல்லாமே அழகாக, அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள்.

ஆனால் இப்போது சிலர் அவ்வப்போது தெரிவிக்கிறார்கள், இந்த சோஷியல் மீடியாவை தாண்டி நானும் சராசரி மனித இனம் தான், என் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் உள்ளன, கண்ணீரும் கவலையும் உள்ளது, நாங்களும் கணவன் மனைவி சண்டைகள் போடுவோம், எங்கள் குழந்தைகளுக்கும் உடல் நலம் கெடும்,எங்களுக்கும் அடி சருக்கும், எங்களுக்கும் மூட் அவுட் ஆகும்,எங்கள் வாழ்விலும் ரோஜாக்கள் முட்களுடன் தான் உள்ளன.

தீயிந்து போவதோ, துக்கம் வருவதோ, உடைந்து போவதோ, எல்லோர் வாழ்விலும் நடக்கும்.

ஆனால் 2 நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, எழுந்து வேலையை பார்க்க வேண்டியதுதான். உனக்கென்ன, சொல்லி விட்டாய்…என்கிறீர்கள்… கேட்கிறது.ஆனால் உண்மையை சொல்லுங்கள். நீங்களும் அதை தானே செய்தீர்கள்/ செய்கிறீர்கள்.

அதான் அதே தான்……என் பாட்டி, எங்கள் காலனி நாகராஜன் மாமா, போன வாரம் மகனையும் மருமகளையும் பரி கொடுத்த பெற்றோர், (கல்யாணம் ஆகி இரண்டே மாதம் ஆன ஜோடி, ஒன்றாக உயிரை விட்டன)கணவனை பறி கொடுத்த என் தோழி,எல்லோரும் தங்களை ஆசுவாச படுத்திக்கொண்டு எழுந்து நடக்கிறார்கள்.நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அவ்வப்போது ஒரு ரிமைண்டர் தேவை படுகிறது. மகான்கள் , வாழ்வியல் நிபுணர்கள் சொல்லாததை ஒன்றும் நான் சொல்லி விடவில்லை. ஆனால் என் எழுத்து உங்களில் ஒருவருக்காவது ஆறுதல் அளித்தால் அது என் பாக்கியம்.