Tag Archives: அப்பா

கப்பலா, சிப்பலா?

இது மனதை சற்று கனமாக்க கூடிய பதிவு. அதே சமயம், மனதிற்கு தைரியமும், நம்பிக்கையும் தரும் என்று முயற்சிக்கிறேன்.

இதுவும் கடந்து போகும் என்கிற தத்துவத்தை முன் நிறுத்தியும் எழுதுகிறேன்.

கப்பல், எல்லோர்க்கும் தெரிந்தது. சிப்பல், இன்றைய தலைமுறை அறிவார்களா என்று தெரியவில்லை.

வீடுகளில், அந்த காலத்தில், வெண்கல பானையில் அரிசி வடிக்கும் போது, அதன் மேல் மூடவும், சிறிது சிறிதாக எடுத்து பரிமாறவும், இந்த சிப்பல் என்ற தட்டு உபயோகித்தார்கள். ஒரே தட்டில், ஒரு பக்கம் ஓட்டைகள் இருக்கும், ஒரு பக்கம் இருக்காது. பொங்கிய சாதத்தில் இருக்கும் அதிகப்படி கஞ்சியை இந்த ஓட்டைகள் வழியாக வடித்தார்கள். சரி இப்போது சிப்பல் என்றால் என்ன அதில் கொஞ்சம் தான் கொள்ளும் என்று தெரிந்தது.

சமீபத்தில், தோழி சாந்தி ராமச்சந்திரன் (சாந்த்ராம் என்று இன்ஸ்டா கிராம் குடும்பத்தில் பிரபலமானவர்) அவர்களின் தம்பி இறைவனடி சேர்ந்தார். புற்றுநோயுடன் போராடி, தன்னால் இயன்றவரை எதிர்த்து இறுதியில் தளர்ந்தார். அன்னாருக்கு எனது நமஸ்காரங்கள்.

Buddy , my brother lost his battle against cancer என்று சாந்தியிடமிருந்து ஒரு நாள் எனக்கு செய்தி. எனது ஆழ்ந்த அனுதாபங்கள் என்று சொல்லிவிட்டு, அவரை இரண்டு வாரங்கள் கழித்து நேற்று தொலைபேசியில் அழைத்தேன். அரை மணி பேச்சு, இருவருக்குமே ஆசுவாசத்தை கொடுத்தது. ஒரு அக்காவாக, அவர் வருத்தம், அவரின் வேதனை என்னை உலுக்கியது. அவர் பெற்றோரை நினைத்து எனக்கு, மிக அதிக வேதனையாக இருந்தது. புத்ர சோகம் கொடுமையிலும் கொடுமை. தொண்ணூற்றி மூன்று வயது தந்தை பார்க்க வேண்டியது இல்லை தன் மகனின் மரணம். என் அம்மம்மா, இறந்து இப்போது ஒன்றரை வருடங்கள் ஆகிறது. நூற்றி மூன்று வயது வாழ்ந்தவர்.

தன் கணவரின் மரணம்,

தன் தலைச்சன் மகனின் மரணம்,

தன் இரு மாப்பிள்ளைகளின் மரணம்,

தன் தலைச்சன் மகளின் மரணம், இப்பிடி ஐந்து மரணங்கள் பார்த்தவர்.

ஆனால், நான் ஏன் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று கேட்டதே இல்லை. அது அவர்கள் கர்மா, அதை பார்க்க வேண்டியது என் கர்மா என்ற கண்ணோட்டம்.

நான் அம்மமாவிடம் கற்ற மிக முக்கியமான வாழக்கை பாடம்.

இது கலி காலம் மா, கனியிருக்க காய் உதிரும் என்பார் மாமனார். கனிந்த, முதிர்ந்த, பெரியோர்கள் இருக்கும் போது, பிஞ்சு காய்களான இளம் வயதினர் மரித்தல்.

சாந்திக்கு ஆறுதல் கூறும் போது, என் மாமனார் இச்சந்தர்பங்களில், கூறும் வார்த்தைகள், வழக்கு சொற்கள் கூறினேன்.

ஐயோ ஐயோ…இன்னார் இள வயதில் மரித்தார் என்று நான் அனத்தும் போது,

என்னம்மா பண்ணுவது, சிலர் கப்பலில் கட்டிக் கொண்டு வருவார்கள், சிலர் சிப்பலில் கட்டிக்கொண்டு வருவார்கள். யாருடையது எப்போது தீருகிறதோ அப்போது கிளம்ப வேண்டியது தான். கட்டிக்கொண்டு வருவது என்று குறிப்பிடுவது நம் கர்மா என்று கொள்ளலாம். கப்பல் அளவு தொலைக்க வேண்டிய கர்மாக்களை தொலைத்தால் தானே, அடுத்த கட்டம்.கொண்டு வந்தது தீரும் வரை, இருந்து/ வாழ்ந்து தான் ஆகவேண்டும். ஒரு வேளை, கொஞ்சம் தான் கழிக்க வேண்டியதிருந்தால், வந்தான் வென்றான் சென்றான் என்று துரிதமாக கிளம்பி விடலாம். இல்லையென்றால் என் அம்மம்மா போல, கண்டு, முதிர்ந்து, அனுபவங்களை ஏற்று, அதை என் போன்ற பேத்திகளுக்கு, கற்பித்து, பின் விடைபெறலாம்.

எது எப்படியோ, புறப்பும் இறப்பும் இன்றும் ஒரு புதிர். அதற்கு விடை கிடைத்து விட்டால், நாம் கடவுள். காலம் நம் கையிலும் இல்லை. எல்லாவற்றிற்கும் ஒரு நேரம் இருக்கிறது. அதுவரை நம்பிக்கையுடன் காத்திருப்பது மட்டுமே நாம் செய்யக் கூடியது.

சாந்த்ராம் இப்போது இடும் பதிவுகளில், #thistooshallpass. அது தான் நிஜம். எவ்வளவு அழுது புரண்டாலும், அடுத்த வேளை பொழுது விடியும், நாக்கு காப்பியை தேடும், பசி எட்டிப் பார்க்கும், மௌனம் கலையும், சிறிது சிறிதாக இயல்பு வாழ்க்கை மறுபடியும் அமையும். எதுவும் எதற்காகவும் நிற்காது.

என் அப்பாவுக்கு புற்று நோய் என்று தெரிந்தவுடன், ஒரே மகளான நான், என் அம்மாவின் தோளோடு தோள் நின்று, சமாளித்தேன். ஆனால், இரவில் அழுது மறுகி, அப்பாவின் மூச்சு சீராக உள்ளதா என்று, அருகில் சென்று பார்ப்பேன். செல்ல அப்பா இல்லாத ஒரு வாழ்க்கையை எப்பிடி கொண்டு செல்வது? சாத்தியமே இல்லையே என்று அன்று நினைத்தேன். ஆனால், அப்பா இறந்து இருபத்தி ஆறு வருடங்கள் ஓடி விட்டன. அவர் இறந்த பதின்மூன்றாவது நாள் அம்மாவை சென்னையில் விட்டுவிட்டு மும்பை கிளம்பினேன். எது நின்றது?உப்பும் தண்ணியும் ஊற ஊற எல்லாம் சரியாகிவிடும் என்று சொன்ன அம்மாவை தனியாக விட்டுவிட்டு போகும் போது மனது கனத்தது.

வந்த ராஜுவும், ராமசாமியும் (சாந்தியின் தம்பியும், என் அப்பாவும்) தங்கிவிட்டுருந்தால், நமக்கு ஆனந்தமே. ஆனால் இல்லையே.. அது நம் முடிவு இல்லையே. இனி அவர்களின் நினைவும், வாழ்க்கையை எப்பிடி எதிர் கொண்டார்கள், இருவரும் புற்று நோயை எப்பிடி எதிர்த்து போராடினார்கள் என்பது மட்டுமே நம் நினைவில் நிற்கும்.

கவிஞர் சொன்னது போல

வந்தவரெல்லாம் தங்கி விட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் எது…

வாழ்க்கை என்பது வியாபாரம் அதில்,

ஜனனம் என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்.

சின்ன தோல்விகளுக்கெல்லாம், துவண்டு போவது நம்மை எங்குமே இட்டு செல்லாது. தோல்வி என்ற வார்த்தையை அகற்றி விட்டு, அது ஒரு பாடம் என பார்க்க பழகுங்கள்.

தளராதீர்கள் நண்பர்களே, இதுவும் கடந்து போகும்.

காதலின் தீபம் ஒன்று….

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கமென்ன… காதல் வாழ்க !!!!

பஞ்சு அருணாசலம் எழுதி, இசை ஞானி மெட்டு போட, எஸ்.பி.பி தன் குரலால் என்னை /நம்மை இன்று வரை கிறங்கடிக்க, மிகை இல்லாத body language இல் ரஜினிகாந்த். தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இந்த காட்சி. பாடலின் தொடக்கம் சுமதி என்று மரத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் பெயருக்கு முத்தமிடுவது போல் துடங்கும். (1984 இல் வந்த படம். இன்று போல் கதாநாயகிகளை/ கதாநாயகன்களை கடித்து துப்புவதெல்லாம் அப்போது இல்லை என சொல்லலாம்).

அந்த பாடல் முழுவதுமே, பான்ட் பாக்கெட்டில் தன் கைகளை வீட்டுக்கு கொண்டு, இங்கும் அங்கும் நடந்து நடந்து பாடியிருப்பார் ரஜினி. மாதவியும் நிறைய யோசனையில் ஆழ்ந்து இருப்பார்.

ஒன்று தான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே…

அப்பிடி ஒரு காதல் இன்று பார்க்க முடியுமா ?

என்னை நான் தேடித் தேடி…உன்னிடம் கண்டுகொண்டேன்….

அடாடா… சூப்பர் வரிகள்…… ஆனால் இன்று…

அது சரி உனக்கென்ன வந்தது இன்று என்று நீங்கள் கேட்பதில் தவறில்லை. ஏங்க சுத்தி முத்தி எங்க பாத்தாலும் சிவப்பு கலர்… ஹார்ட்டு…. ரெட்டை மோதிரம்…சிவப்பு ரோஜா… அப்பறம் ஏங்க நா அதை பத்தி பேச மாட்டேன்.

ஆனா இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் இன்று காலை நடை பயிற்சிக்கு நான் போன போது கண்டு தொலைத்த கண் கொள்ளா காட்சிதாங்க….

பயிற்சியின் நடுவே 15 நிமிட தியானம் செய்வது வழக்கம்.

இன்றும் உட்கார்ந்தேன்…பக்கத்து பெஞ்சில் 3 யுவதிகள். அந்த காலை பொழுதிலும், நன்றாக ஒப்பனை செய்து கொண்டு, பளிச் பளிச்…..நடுவில் இருந்த பெண் மட்டும் முகம் காட்டாமல், வலது புறம் இருந்த பெண்ணின் தோள் மீது சாய்ந்திருந்தாள். அவளும் இவள் கன்னம் தட்டி சமாதான படுத்திக் கொண்திருந்தாள். சரி நம் வேலையை பாப்போம் என கார்டு எடுத்து காதில் சொருகி, தியான app ஐ தேடி, அதை ஆரம்பித்தேன்.

இதமான பெண் குரல்,சல சலக்கும் நீரோடையின் ஒலியுடன், பயிற்சியாளர் பெண்மணி எனக்கு, ஆணைகள் பிறப்பித்தாள்… மூக்கு வழியாக மூச்சை இழுத்து, வாய் வழியாக சில முறை விட்ட பின்பு, இதயத்தை தொட்டுக் கொண்டு, அதற்கு நன்றி சொல்ல சொன்னாள். அரை நூற்றாண்டாக அடித்துக் கொண்டிருக்கிறாய், யப்பா சாமி, நல்ல படியாக தொடர்ந்து அடி, இப்போதைக்கு நின்னு கின்னு தொலைக்காதே என்று செல்லமாக சொல்லிவிட்டு..பெண் பயிற்சியாளர் சொன்னது போல், சுய மேம்பாட்டு வரிகள்….

ஐ ஆம் ஹாப்பி

ஐ ஆம் ஹெலத்தி

ஐ ஆம் அட் பீஸ்…

எங்கத்த பீஸ்… பக்கத்தில் விசும்பல் சத்தம். நம்ம நடு நாயக பொண்ணு தாங்க. கண்ணை திறக்க கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, உலா போன எண்ண ஓட்டங்களை, லகான் போட்டு, கட்டி இழுத்து வந்து மீண்டும்,

ஐ ஆம் ஹாப்பி…என்று ஆரம்பித்தால், சள சள என பேச்சு குரல். சரி இன்னக்கி தியானம் அம்பேல் என்று தெரிந்ததும், கண்ணை திறந்து பக்கத்தில் பார்த்தேன். அப்பிடியே தலை முடியில் பாத்தி கட்டி விட்டாற்போல ஒரு வெட்டு, அதுக்கு ஒரு கலர், (நான் சின்னவளாக இருக்கும்போது எண்ணெய் தடவ வழியில்லாமல் இருப்பவர்கள் தலை இப்படி தான் இருக்கும்… அது அப்போ ‘செம்பட்டை’ இப்போ ஹேர் கலரிங்). ஒரு விடலை… அழும் அந்த பெண்ணை சமாதான படுத்த கையை பிடித்து எழுப்பவதும், முகத்தை பார்க்க முற்படுவதுமாக. ஒரு வழியாக நம்ம ஹீரோயின் மனமிரங்கி கையை எடுத்து விட்டு தன் இருப்பிடம் விட்டு ஏழுந்தாள்.

யப்பே….சிவப்பு லிப்ஸ்டிக்… நன்றாக வெள்ளை பூச்சு முகத்தில்…

அட கொடுமையே… என்னவோ ரொம்ப வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்ததெல்லாம், வீணானதே…

சும்மாவா…. அட பன்னி… அழுது என் தியானத்தை வேறு கலைத்தாயே…

அவன் கை கோர்த்துக்கொண்டு இன்னும் ரெண்டு பெஞ்சு தள்ளி போய் உட்கார்ந்தாள். கருமம்… ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுவிட்டு இடத்தை காலி செய்தேன்.

காதல் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. இந்த வயதுக்கு வராத காதல்(அது காதல் தானா???) எரிச்சல் ஊட்டுகிறது. படிக்கும் பருவத்தில், ஏன் நல்ல நண்பர்களாக இருக்க கூடாது. நன்றாக படித்து, வேலையில் அமர்ந்து, சம்பாதித்து, தானும் பெருமை அடைந்து, பெற்றவர்களையும் பெருமை அடைய செய்து, எவ்வளவு இருக்கிறது…வெட்டி பொழுது போக்கும் இந்த விடலைகளை பார்த்தால் பத்திக் கொண்டு வருகிறது.

சமீபத்தில்தான் ‘ஊரி’ என்ற இந்திய ராணுவம் தொடர்பான படம் பார்த்தேன். இந்த செம்பட்டய கொண்டு மிலிடரயில் விட்டு விட வேண்டும். விடய காலையில் ஒரு பெண்ணிற்காக எழுந்து வந்தவனுக்கு, காலையில் மிலிட்டரி பள்ளியில் எழுந்து கிரௌண்டை சுத்தி ஓடுவது ஈஸி தானே…

பொறுப்பு என்ற ஒன்று இல்லை. இதில் ஆண் பெண் பேதமும் இல்லை.

சினிமாவில் காட்டுவது இல்லை வாழ்க்கை. ஏகப்பட்ட போராட்டங்கள் நிறைந்தது. பொறுப்புகள் கொண்டது. ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு தூண் போல நின்று, வாழ்க்கையை கொண்டு போக வேண்டியது. அந்த காதலில், பாசம், பரிவு, தியாகம், கோவம்,ஊடல்,கூடல்,தேடல், விட்டுக்கொடுத்தல், கண் முடித் தனமாக சப்பை கட்டுதல் இன்னும் இன்னும் எவ்வளவோ…

அந்த பொறுப்பற்ற ஜோடிகளை பார்த்த நொடியில் தோன்றியது தான் இந்த தலைப்பு.

எவ்வளவோ பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த பாடல்… தெரியவில்லை. ஏளனமாக ஆக தான் இந்த தலைப்பை கொடுத்தேன்.

ஆனால் நல்ல காதல் வாழ்க.

காதலர் தின நல் வாழ்த்துக்கள்….

வானப்பிரஸ்தம்

ப்ரஹம்மச்சர்ய

கிரஹஸ்தாஸ்ரமம்

வானப்ரஸ்தம்

முதல் இரண்டும் வாழ்வின் உற்சாகத்தில் இருக்கும்போது நடந்து விடுகிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் இயல்பாக, மனதிற்கு கஷ்டங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல், அப்படியே காலம் ஓடி நம் கைகளில் சிக்காமல் கடக்கிறது.

மூன்றாவதாக வரும் வானப்ரஸ்தம் நம்மிடம் சவால் விடுகிறது.

வானப்பிரஸ்தம் என்பது வர்ணாசிரம தர்மத்தின்படி மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும். இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல். பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, துறவறத்திற்குஆயத்தப்படுத்துதல் ஆகும். இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்.

இதை எனக்கு கூகுள் சொல்கிறது.

என்னுடைய தாழ்மையான அபிப்ப்ராயத்தில், 60வது வயதிற்கு மேல் இல்லை… இன்னும் எவ்வளவு முன்னதாக மனதளவில் கடைபிடிக்க இயலுமோ அவ்வளவு நல்லது.

நீ சாமியார் …என்று என் வீட்டில் என்னை ஒருவர் கூறுவார்.

இல்லவே இல்லை. அதற்கான தகுதி எனக்கு இல்லை. தாமரை இலை தண்ணீர் போல் இருப்பது துறவறம் இல்லை.

நான் என முப்பத்தைந்து நாற்பதுகளிலேயே வானப்ரஸ்தாசரமத்திற்கு தயார் செய்து கொண்டுவிட்டேன்.

அதில் என் குருமார்கள் என் அப்பாவும் அம்மாவும். அவர்கள் வாழ்ந்த யதார்த்த வாழ்க்கை. ஒரு நிலைக்கு மேலே நாங்கள் எங்கள் கருத்துக்களை மட்டும் கூறுவோம், முடிவு உன்னுடையது என்று எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.

எங்களை காடு வா வா என்கிறது … நீ உன் வாழ்க்கையை பார். உன் கணவன் குழந்தைகள் அவர்கள் எதிர் காலத்தை கவனி என்றார்கள்.

ஒரு விதத்திலும் எமோஷனல் பிளாக் மெயில் செய்யவில்லை.

ஸ்வாமி சுகபோதானந்தா அவர்களின் புத்தகத்தில் பல வருடங்கள் முன் படித்த ஞாபகம்.

வாழ்க்கை ஒரு ரிலே ரேஸ் போல… நீ ஓடி முடிக்கும் போது அடுத்தவனிடன் கம்பை கொடுக்க வேண்டும்.

எவ்வளவு நிதர்சனமான உதாரணம்.

நாமும் பாசம் கண்ணை கட்டாமல்,

அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைக்கலாமே.

அவர்கள் தவறினால் திருத்தி கொடுக்கலாம். தவறு செய்தால் தானே அவர்களும் கற்று கொள்வார்கள்.

1. எல்லா வேலைகளும்நீங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். பகிர்ந்து செய்தால் எல்லாரும் active ஆக இருக்கலாம்.

2. வரவு செலவில் ரொம்பவும் மூக்கை நுழைக்காதீர்கள். பெண் பிள்ளைகள் அதிகமாக செலவு செய்வதாக தோன்றினால்… நல்ல முறையில் சொல்லுங்கள். நக்கல், குத்தல் , நாலு பேர் முன் சொல்வது இதெல்லாம் வேண்டாமே. அதையும் மீறி,

நான் பாதுக்கறேன் அப்பா/அம்மா என்று சொன்னால் விட்டு விடுங்கள். புலம்ப வேண்டாம்.

3. உங்கள் வயதுள்ளவர்களை சந்தித்தால், இந்த காலத்து பசங்க எங்க… என்று ஆரம்பித்து புலம்ப வேண்டாம். கைகளை போச்சு எல்லாம் என்று காட்டுவது, தலையில் அடித்து கொள்வது, உதட்டை கோணுவது…வேண்டவே வேண்டாம்.

Body language என்று சொல்லப்படும் நம் உடல் பாவனை ரொம்ப முக்கியம்.

4. நாளை நாம் ஓய்வு பெறுவோம் என்று முன்கூட்டியே ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல், திடீரென்று நிறைய நேரமும், செய்வதற்கு ஒன்றும் இல்லாது போலவும் தோன்றும். அப்போது யார் எது சொன்னாலும் தப்பாகவும் தோன்றும். புத்தகம் இன்றியமையாத துணை. கொஞ்சம் டெக்னாலஜி தெரிந்தால் தூள் கிளப்பலாம்.

5. வாட்ஸ் ஆப் / facebook…இன்ஸ்டாகிராம்

எப்பவுமே என்ன வேன்டிற்கு என்று குற்றம் சொல்லாமல், தெரிந்து கொள்ளுங்கள்.

நான் அனுப்பின message கு ப்ளூ டிக் வந்தது.. ஆனாலும் நீ பதில் அனுப்பல னு பெண் பிள்ளையை நோண்டாதீர்கள்… அவர்கள் என்ன வேலையாய் இருக்கர்களோ…கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்…

(ரொம்பவே நேரம் கடத்தினால் வளாசுங்கள் ,,😎)

இன்னிக்கி என்ன சமையல்? என்று தினமும் கொடையாதீர்கள். என்னத்தையோ சமைக்கட்டும் சாப்பிடட்டும்…

6. எனக்கு பொழுது போகவில்லை, வீடு வெறிச்சுன்னு இருக்கு, வாழ பிடிக்கலை, இதெல்லம் சொல்லி குழந்தைகளை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தாதீர்கள்.

7. முதியோர் இல்லம்.

இன்று பல ஊர்களில் முதியோர் இல்லம் என்கிற பேரில், நல்ல ஹோட்டல் போல வசதிகள் தருகிறார்கள். அதனால், அங்கு போய் இருப்பதை, ஒரு தண்டனை போல பாவிக்காமல், ஜாலியாக இருக்க பாருங்கள்.

உங்களால் ஒரு வீட்டை நடத்துவதற்கு, சிரமமாக இருந்தால், முதியோர் இல்லத்தில் சென்று இருப்பதில் தவறில்லை.

8. Selflove: உங்களை உங்களுக்காக விரும்புங்கள். அதில் தவறே இல்லை. குற்ற உணர்வும் வேண்டாம். ஓடி ஓடி உழைத்து சம்பாதித்து, பிள்ளைகளை படிக்க வைத்து, மணமுடித்து செட்டில் செய்து விட்டீர்கள். இப்போது உங்களுக்காக வாழலாமே. பிடித்த சினிமா பாருங்கள்…கோவிலுக்கு சென்று வாருங்கள், ஊட்டியோ கொடைக்கானலோ போய் வாருங்கள். போகும் இடத்தில் சௌகரியமாக தங்கி, உண்டு, இளைப்பாருங்கள்.

50 வது வயதில் எனது 50 வது பதிவு இது.

வாழ்க்கை வாழ்வதற்க்கே. எல்லோருமே தங்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம்மால் ஆனது, எல்லோருக்கும் நல்ல வாக்கு சொல்லுவோம். தளர்ந்த உள்ளங்களுக்கு

இதுவும் கடந்து போகும் கண்ணே ….

என்று உற்சாகமூட்டுவோம்.

என்னை அக்காவாக, அத்தையாக, மமியாக, பெரியம்மாவாக, தோழியாக பார்க்கும் எல்லோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

பதிவிற்குள் பதிவு

மயிலேயே கயிலை

கயிலையே மயிலை..

ஐம்பது வருட உறவை நினைவு கூர்ந்தேன்..

தோழி ஒருத்தி கூறினாள்.. கண்ணீர் முட்டுகிறதென்று…

மண்ணாசை வேண்டாம் என்றேன்

மண்ணாசை அல்ல…விலக்க முடியாத நினைவுகளின் வியாதி என்றாள்.

நினைவுகளையும் தேர்ந்தெடுங்கள் என்றேன்.

என்னிடம் இருப்பவையெல்லாம் நல்ல நினைவுகள் மட்டுமே ……

மார்கழி மாதத்து அதிகாலை இருளில் போட்ட கோலம்.

இரவு உணவிற்கு பின் நாயர் கடையில் தம் அடித்துவிட்டு, அப்பா வாங்கி வரும் வாழைப்பழம்

இன்று வரை யாருக்கு யார் என்ன வேண்டும் என்று புரியாத கோடி வீட்டு குருக்கள் குடும்பம்…

காலியாக இருந்த தெருவில் ஞாயிறு களில் வாடகை சைக்கள் பழகியது

இதயம் பேசுகிறது வார இதழ்க்காக காத்திருந்தது

பாலங்கள் படித்தது…சிவசங்கரியின் வாக்கு வேதமாக இருந்தது

பக்கத்தில் இருக்கும் பள்ளிக்கு சென்றது

பத்தில் கோட்டை விட்டது

பன்னண்டில் பாரிஸில் படித்தது

கல்லூரிக்கு தோழியுடன் சென்றது

ரவி புக் ஹௌஸ் இல் தினம் ஏதாவது ஒன்று வாங்கியது

கண்ணாடி வளையலை புடவை மெல் வைத்து பார்த்து வாங்கியது

கொலுசு போட்டுக் கொண்டு வீட்டின் முற்றத்தில் மேலும் கீழும் நடந்தது

மருதாணி வைத்துக் கொண்டு ரசித்தது

அப்பாவுக்கு புற்று நோய் என தெரிந்ததும் அம்மாவிடம் ..நான் இருக்கிறேன் என தோள் கொடுத்தது

என்னவர் என்னைப் பல வருடங்கள் கழித்து பார்த்தது, அவருக்காக பாடியது

வாழை மரம் நட்டு , மணப் பெண் கோலம் பூண்டது

22 வருடங்கள் பூரணமாக இருந்தது

28 வருடங்கள் வந்து வந்து போனது

மொத்தம் 50!!!!

கபாலி, கற்பகாம்பாள்

கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?

அதிலிருந்து 2 வீடு தள்ளி தான் என்னோட வீடு…

உள்ளே நுழைந்தவுடன் கோவில் வீடு எண்2 என்று பதித்த ஒரு கல் இருக்கும். அதை தாண்டினால், ஒரு பெரிய நிலப் படியும் பெரிய கனமான கதவும்.

இப்பிடி சொல்லிக் கொண்டிருந்த பந்தம் கடந்த 9ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கபாலி கோவிலுக்கு சொந்தமான வீட்டில் என் அப்பா 50 வருடங்கள் முன் வாடகை தாரராக குடி போனார். அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் என் அம்மாவின் சீமந்தமாம்..

ஒட்டு வீடு தான். நீண்ட தாழ்வாரம், கூடம்,ரேழி, முற்றம்,புழக்கடை, வெராண்டா…..

இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

வீட்டின், ஓரோர் இடங்கள்.

அந்த பெரிய கதவில்

P.S.Ramaswamy

Mrs. Lakshmi Ramaswamy

என்று ஒரு போர்டு.

ஒரு முறை நான் சாக் பீஸில் என் பெயரையும் அதற்கு கீழே எழுதினேன். உறவினர் ஒருவர், என் மேல் ரொம்ப பாசமானவர், எனக்கு பிளாஸ்டிக் இல்

R.Anuradha IN/OUT 😊😊😊

டாக்டர் ரூம் வாசலில் இருக்குமே அது போல செய்து அன்பளிப்பாக கொடுத்தார்.

அதை தாண்டினால் ரேழி(அப்படினா???) எனக்கு தெரியாது… வீட்டில் ஒரு பகுதி அவ்வளவு தெரியும். அந்த ரேழியில் என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி போட்டோ. அதன் வலப் பக்கம், ஒரு ரூம். ஏன் அதை நாங்கள் first ரூம் என்று சொன்னோம்??🤔🤔🤔முதலில் வருவதாலோ? அந்த first ரூம் தான் எங்கள் ஹால், லிவிங் ரூம், பெட் ரூம் எல்லாம். அம்மாவும் அப்பாவும் தங்கள் இறுதி சுவாசத்தை விட்டதும் இங்கே தான். அதில் அம்மா அப்பாவின் ஒரு படம். அம்மாவும் அவர் தோழியும், அம்மாவின் பட்டம் பெற்ற படம், அம்மா மடிசாரில், இன்னும் சில தெய்வ படங்கள்.

அதை தாண்டினால் ஒரு இடம், 2 படி இறங்க வேண்டும். ஒரு சின்ன ரூம் போல…பாய் படுக்கை வைக்க. அங்கிருந்து ஒரு படி இறங்கினால் , வெட்ட வெளி மித்தம்(முற்றம்). கொடிகள் கட்டப் பட்டிருக்கும் துணிகள் காய போட. வலதுபுறம் ஒரு பெரிய குளியல் அறை. (மும்பையில் அது பெட் ரூம்!!!) அதில் 2 சிமென்ட் தொட்டிகள். துணி துவைக்கும் கல்…மூடாத தண்ணீர் வடியும் கால்வாய். (சாக்கடை என்றும் சொல்லலாம்)அதில் அந்த நாட்களில் பாய்லர் இருந்தது. வென்னீர் போட.

முத்தத்தின் ஒரு கோடியில், என் அப்பா எனக்காக வைத்த நித்யமல்லி செடி. பாதி முத்தத்திற்கு படர்ந்திருக்கும். நடுவே ஒரு ஆள் நுழைகிறார் போல ஒரு gap. ஒரு ஸ்டூல் போட்டு ஏறினால், நம் உடல் அந்த gap இல் நுழைத்துக் கொண்டு, பூக்களை பறிக்கலாம். அப்பப்பா….. எவ்வளவு பூ… இதை எழுதும்.போது கூட எனக்கு வாசனை அடிக்கிறது. என் பூ தொடுக்கும் ஆர்வம் இங்கிருந்து தான் தொடங்கியது. நீண்ட பின்னலில், எங்கள் வீட்டு நித்யமல்லி… அம்மாவின் கொண்டையில், காலில் வாழை நார் மாட்டி எசைத்த அரை வட்ட வேணி…

குளியலரையை அடுத்து ஸ்டோர் ரூம். குளித்து விட்டு உடை மாற்றவும், பல சரக்கு சாமான்( இந்நாள் grocery😁) வைக்கவும் கெஸ்ட் ரூம் எல்லாம் இது தான்.

அதை தாண்டினால் தாழ்வாரம். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் எனக்கு இங்கு உட்கார வைத்து தான் சாப்பாடு. அன்றும் இன்றும் எனக்கு அது தப்பாக படவில்லை.

அங்கிருந்து 2 படிகள் ஏறினால் சமயலறை. இன்றைய பெரிய மாஸ்டர் பெட் ரூம் அளவு. பூஜை அறையும் டைனிங் ஏரியா வும் எல்லாம் இதற்குள்.

தளிகை பண்ற உள்…(ஐயங்கார் வழக்கு சொல்)…

இந்த நாள் இனிய நாள் …

வழங்குபவர் தென்கச்சி சுவாமிநாதன்…

ட்ரான்சிஸ்டரில் கேட்டுக் கொண்டே எல்லா படங்களுக்கும் அம்மாவும் அப்பாவும், பவழமல்லி மாலை கோர்ப்பார்கள். (புழக்கடையில் பெரிய மரம்)கருவேப்பிலை மரமும் இருந்தது. இந்த த.உள்ளிலிருந்து பார்த்தால் வாசல் தெரியும். வாசலில் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு.தாழ்வாரத்தில்ருந்து வலப் பக்கமாக போனால் ஒரு சந்து போல வந்து புழக்கடையில் விரியும். அங்கு தான் டாய்லெட். 2007 வரை கதவு கூட இல்லாத கழிப்பறை. வெளியே வாளியில் தண்ணீர். யாரேனும் வரும் சத்தம் கேட்டால், உள்ளிருப்பவர் கணைக்க வேண்டும் 🤣🤣😂😂 கதவு இல்லாதது எனக்கு மட்டும் அல்ல என் பெண்களுக்கும் கூட அசௌகர்யமாக பட்டதில்லை.இது தான் எங்கள் வீட்டின் வரைபடம் !!!ஒன்ன பாக்காம ஒன் கையால மருந்து சாப்பிடாம போய்டுவேனோ… என்றும், இனிமே கை குழந்தையை தூக்கிண்டு பாம்பே லேந்து வந்து அலையாதே… நான் போய்ட்டேன்னு தகவல் வந்தப்பரம் வந்தா போறும் என்று சொன்ன அப்பாவும்,கற்பாகம்பாள் காலடில போகணும்,இனிமே நானும் ஒனக்கு ஒரு பொண்ணு தானே சீனு? என்று கேட்ட அம்மாவும்… இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை மிக மிக நிறைவானது. அவர்கள் பெற்ற நானும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். போதும் என்ற பொன்னான மனம் எனக்குள் விதைக்கப் பெற்றவள். வாடகை நிலுவை தொகை 5 லட்சத்து சொச்சமும் கட்டி விட்டு, வீட்டையும் கோவிலுக்கு திருப்பி கொடுத்துவிட்டு வரும் போது மனதில் எந்த வித சலனமும் இல்லை. மாறாக பெரும் நிம்மதி. யாரிடமும் காசு வாங்காமல், sub let செய்யாமல், அப்பா அம்மா பெயரை காப்பாற்றி விட்டேன். அதற்கு முழு நன்றி என் கணவருக்கு. அவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.கடந்த 9ஆம் தேதி , நர்த்தன விநாயகருக்கு ஒரு சதிர் காய் போட்டு விட்டு , கபாலிக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வீட்டை ஒப்படைத்தேன்.கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?அதிலிருந்து 2 வீடு தள்ளி என்னோட வீடு…….”.இருந்தது”#மைலாப்பூர் #கபாலி

நன்றியுடன் உங்கள் அனு …..

இன்று பிறந்த நாள்

50 முடிந்தது பாதி கிணறு ??

யாருக்கு தெரியும்.

ஆனால் 50 வருடங்களை திரும்பி பார்த்தால், சரி…ஒரு 40 வருடங்களாவது நினைவிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள

நல்ல வாழ்க்கை தான்.

இந்த பதிவை 50வது பதிவாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. மனதை தொட்டால் தான் பதிப்பது என்று ஒரு பாலிசி! அதனால் பக்கத்தை ரொப்பி எழுதுவதில் உடன்பாடில்லை.

காலம் சுழன்று கொண்டிருக்கிறது. எதற்காகவும் யாருக்காகவும் நிற்காமல்.

உப்பும் தண்ணீரும் ஊற ஊற எல்லாம் சரியாகும் என்று அம்மா சொல்லுவாள். துக்கமும் சுகமும் மாறி மாறி தான் வாழ்க்கை.

அது சரி… வேதாந்தம் பேசாமல், மொக்கை போடாமல், நீ என்ன கிழித்தாய் னு சொல்லு என்கிறீர்களா?

பெரிதாக ஒன்னும் இல்லை.

நல்ல மகள்… நீ ரொம்ப….நல்லவ 🤣🤣என்று பலர் கூறும் போது அம்மா அப்பாவை நினைத்துக் கொள்கிறேன். அந்த ஜீன்ஸ் இல்லையென்றால் ஏது நல்ல குணம். 2 வழி தாத்தா பாட்டிக்களையும் தான் சேர்த்து நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் ஆசீர்வாதம் உணர்கிறேன்.

************************************

நல்ல மனைவி….மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…

ஆமா…. ஆமா…. என் கணவருக்கு அந்த வரம் கிடைச்சிருக்கு…

என்ன செய்வது …அவர் பதிவதில்லை அதனால் நானே சொல்லிக்கொள்கிறேன். நான் பேச நினைப்பதெல்லாம் அவர் பேச , அவர் பேச நினைப்பது /நினைக்காதது எல்லாம் நான் பேச…கவியரசர் கண்ணதாசன் என் கணவரை சந்தித்ததில்லை…(நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு 🤣🤣😎) இல்லைனா பாட்டை மாற்றி எழுதிருப்பார். இப்பிடிஒரு கணவன் அமைய என்ன தவம் செய்தேனோ. பெரியவர்களின் ஆசி, பூர்வ ஜென்ம நல்ல கர்மா…சீனு என்கிற ஸ்ரீனிவசனை என்னோடு இணைத்தது னு தான் சொல்லணும்.

************************************

நல்ல மருமகள்…பெண் குழந்தை இல்லாத மாமியார் மாமனாருக்கு மகளானேன்.

இந்த ஒரே வாக்கியம் போதும்…

என் மாமனார் தாயுமானவன் !!!

ஒரு மருமகளுக்கு இவ்வளவு தான் செய்ய முடியும் என்கிற தடையை உடைத்தவர். அறுவை சிகிச்சை முடிந்த 6 மாத காலத்தில் கண்ணை இமை காப்பது போல னு சொல்லுவார்களே அது போல என்னை காத்தவர். 4 மாதங்கள் வாரம் தோறும் எனக்கு மூத்திர பை மாற்றியவர். இன்றளவும் எங்கள் உள்ளாடைகள் மடிப்பவர். (வெக்கமாயில்லியா னு கேட்கிறீர்களா? )அப்பாவிடம் மகளுக்கு என்ன வெட்கம்.

இன்றளவும் மறக்க முடியாதது… ரயில் பயணத்தில் ஒருவர் என்னை பார்த்து கேட்டது…”மாமனாராயா இப்படி அப்பா அப்பா னு கூப்படறீங்க…உங்க அப்பா னு நெனச்சேன்”அது என் பாசத்திற்கான சான்றிதழ்.

மாமியார்….அடாடா… நாங்க சீரியல் மாமியார் மருமகள் இல்லியே. காலை ஐந்தரை மணிக்கு காபி பொழுதில் கூட ஸ்வெட்டர் போடுவது பற்றி ரொம்ப தீவிரமா டிஸ்கஸ் பண்ணுவோம்.

ஹாஹாஹா… அதுக்காக அப்பிடியே ஆதர்ஷ மாமியார் மருமகள் னு எல்லாம் சொல்ல முடியாது. எலியும் பூனையுமா கூட இருப்போம். 2 நாள் 3 நாள் அப்பறம் மருந்துட்டு பொழப்ப பாக்க வேண்டியதுதான். குடும்பத்தை தாண்டி வெளி ஓலகத்ல எத்தனையோ விதமான மனிதர்களை பொறுத்துக் கொள்கிறோம்…நம் கண்ணான கணவரின் அம்மா அப்பா வை கொஞ்சம் கூடுதல் பொறுமை காட்டி அரவணைக்கலாம்.பெரியவா எதானும் சொன்ன மூஞ்சியை தூக்கி வெச்சுக்காம, அதை எப்படி சரி ஆக்கறது னு பாரு…இங்க கேட்பது நாகலக்ஷ்மிங்கிற எங்க அம்மா ஓட அசரீரி😂************************************நல்ல அம்மா…இதுக்கு தனி பதிவே போடணும்!!!!ரெண்டும் ரெண்டு கண்ணு.சின்ன பொட்டலமாக வந்த கடவுளின் பரிசுப்பொருள்கள்.முதலில் என்னை தாயாக்கி இப்போது என்னை சேயாக்கியவர்கள்.கடவுள் அருளால், பெரியவர்கள் ஆசியால், அவர்கள் துணையுடன் நல்ல பிள்ளைகளாக வளர்த்த பெருமை உண்டு. ஒரு தாய்க்கு இது போதும்.************************************நல்ல நண்பி !!!!… நிறைய நண்பர்கள். வெகு காலமாக தெரிந்தவர்கள், சில காலமாக தெரிந்தவர்கள், நண்பர்களின் நண்பர்கள், நண்பர்களின் குடும்பத்தினர், முகநூல் நண்பர்கள், இன்ஸ்டாகிராம் நண்பர்கள், வாட்சப் நண்பர்கள், போதுமா…..எல்லோர்க்கும் தெரியும் சாய்வதற்கு என் தோள்கள் எப்பவும் தயார் நிலையில் இருக்கும் என்று.

இனும் ஒரு பெரிய பாத்திரம் பாக்கி . அதற்க்கான காத்திருப்பில் இருக்கிறேன்

50 வயதில் கசப்பான அனுபவங்களும் , மனிதர்களும், ரணங்களும், வலிகளும், காயங்களும், இல்லாமல் இல்லை. புரையோட விடாமல் பார்த்துக்கொண்டுவிட்டேன். கொஞ்சம் லேட்டாக தான் சிலரை புரிந்து கொண்டேன், ஆனால் இப்போதாவது புரிந்ததே என்று சந்தோஷம்.புரிந்து கொண்டு????என்னை விலக்கிக் கொண்டேன்.என் நிம்மதி முக்கியம் என்று உணர்ந்ததால்.