Tag Archives: ஆறுதல்

கதை சொல்லும் பென்சில் ✏️

வாட்ஸ் ஆப் கதை படிசீங்களா மக்களே ?

ஆப்பு வைக்கும் வாட்ஸ் ஆப்பு சில சமயங்கள்ல செம்ம மெசேஜ் கூட கொண்டுவரும்க!

அப்பிடித்தான் எனக்கும் ஒண்ணு வந்துது . கன்னடத்தில – போச்சு போ இனிமே கன்னடத்தில எழுதி கொல்ல போறியா னு நீங்க பதர்றது தெரியுது. இல்ல , கண்டிப்பா இல்ல .

நாம் சுணங்கி இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட message கள் நமக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றன. இதுதான் ஆத்மாவுடனான உரையாடலோ?

பென்சில் பாக்சில் உபயோகித்து தேய்ந்து போன பென்சில் ஒன்று, புது பென்சிலை வரவேற்கிறது. எனக்கு அனுபவத்தில் தெரிந்த விஷயங்கள. உனக்கு சொல்கிறேன் கேள் என்றது..

முதலாவதாக, நீ தனியாக செயல்படுவதில்லை . உன்னை ஒருவர் கையில் எடுத்தால் தான் செயல் பட முடியும்.

இரண்டாவது. உன்னுடைய வெளியில் இருக்கும் மர பாகத்தை காட்டிலும்

 

உள்ளே உள்ள lead (ஈயம்) தான்  மிக முக்யம்.

மூன்றாவது, நீ அவ்வப்போது, சீவப்படுவாய்…எப்போதெல்லாம் நீ மழுங்கி போகிறாயா அப்போதெல்லாம் நீ சீவப் படுவாய். தயாராக இரு.
நான்காவது,மிக முக்கியமானது, நீ எழுதும் போது  பிழைகள் ஏற்படும். கடைசியில் இருக்கும் ரப்பர் கொண்டு அழித்து விட்டு மீண்டும் எழுது.
இத்தனை நாளும்  எழுதி எழுதி தேய்ந்து போன பென்சில், புது பென்சிலுக்கு குடுக்கும் அறிவுரை மட்டும் இல்லை. வாழ்க்கை பாடம் நமக்கும் இருக்கு இதில். இந்த வாழ்க்கை பாடங்களை அவ்வப்போது மறப்பது தான் நம் துன்பத்திற்கும், நிம்மதி இல்லாமைக்கு காரணம்.
முதலாவதாக நீயாக எழுத முடியாது, ஒருவர் உன்னை கையில் எடுக்க வேண்டும். அவன் தான் பரமாத்மா. அவன் நம்மை தாங்குகிறான். நம்மை கையில் எடுத்து எழுதுகிறான். அவன் எழுத்து தப்பாது என்று நம்பு. அந்த பரமனின் கையில் நான் ஒரு ஆயுதம் என்பதை மறக்க கூடாது.  பகவத் கீதையில் பதினோராவது அத்தியாயத்தில் முப்பத்தி மூன்றாவது செய்யுளில், கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறான்,
நிமித்த மாத்திரம் ……
“எதிரில் மாண்டதாக நீ நினைப்பவர் எல்லோரும் என்னால் ஏற்க்கனவே வீழ்த்தப்பட்டனர். நீ எனது செயலுக்கு ஒரு கருவி ” என்று. ஹஸ்தினாபுரம் தர்மத்தினால் ஆளப் பட வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன் என்று.
போர் முடிந்த பின், அர்ஜுனன் கூறினானாம்  நான் தான் அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்று.பீமன் தான் அதை விட அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்றானாம். அதனால் கண்ணன் இருவரையும் போர்க் களத்திற்கு அழைத்து சென்றானாம். அங்கு கடோதகஜனின் மகன் பார்பரீகனை கண்டு,  அவனிடம் அர்ஜுனனின் அம்புகளை அதிகம் பார்த்தாயா, பீமனின் கதையை அதிகம் பார்த்தாயா என்று கண்ணன் கேட்க, கண்ணனின் சக்கரத்தை தான் நாலா பக்கமும் சுழல்வதை பார்த்தேன் என்றானாம், பார்பரீகன் . நம் வாழ்க்கையும் அதே தான் நண்பர்களே. “நான்” ” எனது” என்பதை அழித்து, “நீ” “உனது” என கண்ணன் காலடியில் சமர்ப்பித்து பாருங்கள், அந்த அனுபவம் பேரானந்தம். ராம நாமமும் சிவ நாமமும் இதற்க்கு தான். நம்மை நாமே ஞாபகப்படுத்திக்கொள்ள.
நம்,
சுகம் – துக்கம்
லாபம் – நஷ்டம்
ஜெயம் – அபஜெயம்
மான – அவமானம்
எல்லாம் அவன் அருளால் நடக்கிறது. அப்படியென்றால், இதில் என் பங்கு /பாத்திரம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் தாசன், அவர் ஸ்வாமி என்று உணர்வது தான் நம் பாத்திரம். நான் எனும் அஹம்காரம் இல்லாத போது , நாம் பணிவாகிறோம். இப்போது அமெரிக்காவில் இருப்பதில், நிறைய நேரம் கையில். பகல் பொழுதெல்லாம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அதில் முகுந்த மாலா கேட்ட போது , ஒரு புரந்தர தாசர் க்ரித்தியை குறிப்பிட்டார். இன்னு தய பாராதே தாசன மேலே …
அதில் ஒரு வரி,
நானு நன்னது எம்ப நரக தொலகே பித்து
நீனே கதி எந்து நம்பித தாசன மேலே
நான் என்னது என்ற எண்ணம் என்னை நரகத்தில் தள்ளியது , நீயே கத்தி என்று நம்பும் இந்த டடன் மேலே தயை வராதா ……
என்ன ஒரு வீரியமான வார்த்தைகள். கண்ணில் நீர் பெருகிக் கொண்டே இருக்கிறது

 

இரண்டாவது பாடம்  உன் வெளிப்புறத்தை விட உள்ளே உள்ள ஆத்மா  முக்கியம். நீ உடுக்கும் ஆடை யோ, உண்ணும் உணவோ, வசிக்கும் வீடோ, பொன்னோ பொருளோ நீ அல்ல. உன் அந்தராத்மாவும் அதில் நீ அனுபவிக்க கூடிய நிம்மதியும் தான் நீ. உள்ளே புழுக்கம் அதிகமாக இருந்து வெளியே நீ ஏ.சி யில் இருந்தால் என்ன பயன். சரி, இந்த நிம்மதி எங்கே கிடைக்கும் ? கடைகளில் கிடைக்க கூடிய வஸ்து  இல்லையே. விலை கொடுத்து வாங்கக்கூடியது இல்லையே. காசு பணம் இருந்தால் மருந்து வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது அல்லவா? இந்த நிம்மதியை வாங்க காசு பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். உன் பாத கமலங்களில் என்னை அறப்பணித்துவிட்டேன், காப்பாற்று என்று சரணாகதி அடைந்தால் போதும், அவன் தந்து விடுவான் இந்த நிம்மதியை.

மூன்றாவதாக…. நாம் அவ்வப்போது சீவப் படுகிறோம். எப்போதெல்லாம் மழுங்கி போகிறோமோ அப்போதெல்லாம் சீவப் படுகிறோம். விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தப்படுகிறோம். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்காதே.
நஷ்டங்கள் வரும்
உடல் நலம் கெடும்
அழுவோம்
துடிப்போம்
வருந்துவோம்
இதெல்லாம் யார்க்கு இல்லை ? ராமாவதாரத்தில், காட்டுக்கு சென்று அவர் படாத துன்பமா ? கிருஷ்ணாவதாரத்தில் அவர் பிறந்ததே, சிறைச்சாலையில். ராமகிருஷ்ணா பரமஹம்சர், எப்பேர்ப்பட்ட மஹான், அவருக்கு ஏன் புற்று நோய்  வந்தது.  எந்த ஒரு பிறப்பும் துக்கத்திலிருந்து தப்பிப்பதில்லை. இருவர் மட்டுமே இதற்க்கு விலக்கு , ஒன்று இன்னும் பிறவாத குழந்தை, இன்னொன்று, மடிந்து போனவர். கடலும், மலைகளும், ஆறுகளும், இருக்கும் வரை துக்கமும் இருக்கும். சுகமும் துக்கமும் மாறி மாறி வரும். சுவாமி விவேகானந்தரை ஒரு முறை ஒரு குரங்கு கூட்டம் தாக்க வந்ததாம். அவர் பயந்து ஓடாமல், நின்று, எதிர்கொண்டாராம். அவை அதை எதிர் பாராததால், மிரண்டு பின் வாங்கின. நம் பிராரப்த கர்மாக்களிலிருந்து தப்பிக்க முடியாது. என்னுடன் இரு பெருமாளே, என்னை கை பிடித்து கரை சேர்த்து விடு என்று அவன் காலை பற்றுங்கள்.
கடைசியாக தப்பு செய்வது மனித குணம் அதை மன்னிப்பது தெய்வ குணம். தப்பை திருத்திக்கொள்வது மிக முக்கியம். நாம் மன்னிக்க படவேண்டும் என்று ஆணித்தனமாக எண்ணும்  போது, மன்னிப்பதற்கு தயாராக இருப்பதும்  முக்கியம்.  கசப்பானவற்றை அழித்து விட்டு முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் நிம்மதிக்காகவாவது.

நீண்ட பதிவு. ஆனால்  நான் அனுபவித்ததை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையில், அந்த ஆடியோ பதிவில் வந்ததோடு, என் சரக்கையும் சேர்த்து உங்களுக்கு கொடுத்தேன். பொறுமையாக இது வரை படித்ததற்கு நன்றி.
கண்ணன் நம் எல்லோரையும் காக்கட்டும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண  கிருஷ்ண  ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே ……

 

காஃபீ வித் கற்பகம்…..

இல்லை …காஃபீ வித் அனு வா?

எதுவா இருந்தாலும், இந்த நெரஞ்ச வெள்ளிக்கிழமை, கற்பகத்தை பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்.

கற்பகம் மாமி ஊருக்கு. எனக்கு கப்பூ…

ஹாய் கப்பூ… னு சொன்னா ஹாய் சொல்லிட்டு, குண்டம்மா.. கப்பூ வா மே ! கப்பூ….என்பார்.

யாரு இந்த கப்பூ?/ கற்பகம் மாமி. எங்கள் பக்கத்து வீட்டு மாமி. 10 வருட பரிச்சயம். பேருக்கு தான் சீனியர் சிடிசன். சின்ன பெண்களுக்கு(அதாவது எனக்கு)😊 சரி சமமா பேச முடியும் அவரால். இரண்டு பிள்ளைகள். மூன்று பேர குழந்தைகள். கணவர், மருமகள்கள். நாங்கள் அலசாத விஷயமே இல்லை. பாலிடிக்சிலிருந்து panty வரை 😂😂😂நான் இப்போது இருக்கும் வீட்டிற்கு புதிதாக வந்தபோது, இன்னிக்கி என்ன டிபின் என்று கேட்டேன். கடுத்த மா தோசை என்றார். ஆஹா இந்த வார்த்தையை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு என்று ஆரம்பித்த எங்கள் சம்பாஷணை இன்று வரை பல விஷயங்களை அலச வைக்கிறது

இருவர் உடம்பிலும் தஞ்சாவூர் தண்ணி…. அதனால் ஒரே பழமொழி பரிமாற்றம். சில அடல்ட்ஸ் ஒன்லி பழமொழிகளும் உண்டு. ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்து விட்டோ, ஒரு ஹலோ மட்டுமே சொல்லி விட்டோ நாங்கள் சென்றதில்லை. குப்பை வைத்துவிட்டு, குப்பை டப்பாவை கையில் பிடித்தபடி ஒரு பதினைந்து நிமிஷம், சாவியை துவாரத்தில் போட்டு விட்டு ஒரு இருவது நிமிஷம், மாடி படியில் எதிர் கொண்டால் ஒரு இருபத்தைந்து நிமிஷம்,(மேலே உள்ள புகைப்படம் மாடிப் படியில் கட்டம் போட்ட புடவையில் நாங்கள் எதிர் கொண்ட போது) பால் வாங்கி வரும்போதோ வாக்கிங் போகும் போதோ மாட்டினால் ஒரு 30 நிமிஷம் என்று எங்கள் அரட்டை நடக்கும். யாரை பற்றியும் பேசாமல் பொதுவாக வாழ்க்கை, வாழ்க்கையின் கண்ணோட்டம், பயணம், புடவை, வக்கணயான சாப்பாடு காம்பினேஷன், என ஏதாவது ஒன்று மாட்டும் அலசுவதற்கு.

வேலை மெனகட்டு நேற்று வாட்ஸாப்பில், free யா என்று கேட்டு விட்டு, அரட்டைக்கு எண்ணிக்குமே free என்று சொன்னவுடன், சென்று ஒரு மணி நேரம் பிளேடு போட்டு விட்டு வந்தேன்.

வயசு எல்லோருக்கும் ஏறி கொண்டு தான் போகிறது. ஆனால் இருப்பதில் சந்தோஷமாக, பாசிடிவாக இருப்பது நம் கையில் தான் இருக்கு. கப்பூவும் நானும் அந்த ரகம். (ஜூன் மாத பிறப்புகள். ஜெமினி க்கள் அப்படித்தனோ?)😊☺️

தென் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, அந்த நாளத்து பம்பாயில் வாக்கப்பட்டு, தன் பிள்ளைகளை வளர்த்து, கல்யாணம் முடித்து, இன்று கொஞ்சம் இளைப்பாறி, தன் ஆசைக்கு, நாலு இடங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார். மச்சினர் பேரனுக்கு பூணல், வயசான மன்னி.. ஒடம்பு சரி இல்லை.. நன்னா இருக்கர்ச்ச பாக்கலாம் னு ஒரு வாரம் ஊருக்கு போறேன், எங்க அண்ணா பொண்ணு அவா ஊர்ல கும்பாபிஷேகம் னு கூப்டா, சம்பந்தி மாமி ஊர்ல கோவிலுக்கு போறோம், இப்படி நாலு இடம் பார்ப்பதில் அதிக ஆர்வம். பயணமும், பயணிப்பதும் எல்லாரும் விரும்பி செய்வதில்லை. ஆனால் பயணங்கள் கற்று தரும் பாடங்கள் விலை உயர்ந்தவை.

நாம் பின் பற்ற வேண்டியது ஒன்று தான். மனதை விசாலமாக வைத்து கொள்ள வேண்டும். To keep the mind open. பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் குடியிருந்த வீட்டு அசல் வீடு துளு பாஷை பேசுவார்களாம். அதனால் மாமியும் நன்றாக துளு வில் துள்ளி விளையாடுவார் ! அது ஒரு கிப்ட். கண்ணு பாத்தா கை செய்யணும் என்பார்களே அது போல காதால் கேட்டு வாயால் பேசணும் நா? திறமை தானே?

அடுத்து என்னை ஈர்த்த விஷயம். பாங்காக நேர்த்தியாக தோற்றமளிப்பது. கழுத்தில் ஒரு கொடி, கைகளில் இரண்டு வளையல்கள், வைர தோடு, பேசரி எப்போதும். நளினமாக உடுத்திய புடவை. நல்ல சிரிப்பு. பெரிய பொட்டு. போதுமே ஒருவரை ஈர்க்க.

இந்த பத்து வருடத்தில் சோர்ந்து நான் பார்த்ததில்லை. அப்பிடியே இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

தனக்கென்று ஒரு நண்பிகள் வட்டம். காலை அருகில் உள்ள கிரவுண்ட் இல் நாலு ரவுண்டு. வெளி உலகம் பார்த்தல் /புரிதல் அங்கு ஏற்படுகிறது. வாட்ஸாப்பில், யூ ட்யூபில், ஏதோ பார்த்துக் கொண்டு பொழுது போகிறது. மனதளவில் இளமை. அடுத்த தலைமுறை அவர்கள் பொறுப்பில் இயங்கட்டும். உடன் நிற்கின்றேன் என்கிற மனப்பான்மை. நாள் கிழமைகளை குறைவில்லாமல் கொண்டாடுவது. புதிதாக எதை பற்றி பேசினாலும், நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள முயல்வது. பாஸ்டா,பிசா, நூடுல்ஸ் எல்லாம் டேஸ்ட் செய்யவும் ரெடி. தொகையல், கூட்டு, குழம்பு என்று வக்கணயாக, நல்ல காம்பினேஷன் சாப்பாடும் அவ்வளவே ரசிக்க முடியும்.

அவர் மைண்ட் ஐஸ் லைக் அ பாராசூட். இட் ஒர்க்ஸ் பெஸ்ட் வென் இட் இஸ் ஓபன் our mind is like a parachute. It works best when it is open.

கப்பூ எனக்கு தோழி, அம்மா, அத்தை,மாமி எல்லாம். இப்படி ஒரு மனுஷியை என் வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி.

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!!

காதலின் தீபம் ஒன்று….

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கமென்ன… காதல் வாழ்க !!!!

பஞ்சு அருணாசலம் எழுதி, இசை ஞானி மெட்டு போட, எஸ்.பி.பி தன் குரலால் என்னை /நம்மை இன்று வரை கிறங்கடிக்க, மிகை இல்லாத body language இல் ரஜினிகாந்த். தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இந்த காட்சி. பாடலின் தொடக்கம் சுமதி என்று மரத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் பெயருக்கு முத்தமிடுவது போல் துடங்கும். (1984 இல் வந்த படம். இன்று போல் கதாநாயகிகளை/ கதாநாயகன்களை கடித்து துப்புவதெல்லாம் அப்போது இல்லை என சொல்லலாம்).

அந்த பாடல் முழுவதுமே, பான்ட் பாக்கெட்டில் தன் கைகளை வீட்டுக்கு கொண்டு, இங்கும் அங்கும் நடந்து நடந்து பாடியிருப்பார் ரஜினி. மாதவியும் நிறைய யோசனையில் ஆழ்ந்து இருப்பார்.

ஒன்று தான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே…

அப்பிடி ஒரு காதல் இன்று பார்க்க முடியுமா ?

என்னை நான் தேடித் தேடி…உன்னிடம் கண்டுகொண்டேன்….

அடாடா… சூப்பர் வரிகள்…… ஆனால் இன்று…

அது சரி உனக்கென்ன வந்தது இன்று என்று நீங்கள் கேட்பதில் தவறில்லை. ஏங்க சுத்தி முத்தி எங்க பாத்தாலும் சிவப்பு கலர்… ஹார்ட்டு…. ரெட்டை மோதிரம்…சிவப்பு ரோஜா… அப்பறம் ஏங்க நா அதை பத்தி பேச மாட்டேன்.

ஆனா இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் இன்று காலை நடை பயிற்சிக்கு நான் போன போது கண்டு தொலைத்த கண் கொள்ளா காட்சிதாங்க….

பயிற்சியின் நடுவே 15 நிமிட தியானம் செய்வது வழக்கம்.

இன்றும் உட்கார்ந்தேன்…பக்கத்து பெஞ்சில் 3 யுவதிகள். அந்த காலை பொழுதிலும், நன்றாக ஒப்பனை செய்து கொண்டு, பளிச் பளிச்…..நடுவில் இருந்த பெண் மட்டும் முகம் காட்டாமல், வலது புறம் இருந்த பெண்ணின் தோள் மீது சாய்ந்திருந்தாள். அவளும் இவள் கன்னம் தட்டி சமாதான படுத்திக் கொண்திருந்தாள். சரி நம் வேலையை பாப்போம் என கார்டு எடுத்து காதில் சொருகி, தியான app ஐ தேடி, அதை ஆரம்பித்தேன்.

இதமான பெண் குரல்,சல சலக்கும் நீரோடையின் ஒலியுடன், பயிற்சியாளர் பெண்மணி எனக்கு, ஆணைகள் பிறப்பித்தாள்… மூக்கு வழியாக மூச்சை இழுத்து, வாய் வழியாக சில முறை விட்ட பின்பு, இதயத்தை தொட்டுக் கொண்டு, அதற்கு நன்றி சொல்ல சொன்னாள். அரை நூற்றாண்டாக அடித்துக் கொண்டிருக்கிறாய், யப்பா சாமி, நல்ல படியாக தொடர்ந்து அடி, இப்போதைக்கு நின்னு கின்னு தொலைக்காதே என்று செல்லமாக சொல்லிவிட்டு..பெண் பயிற்சியாளர் சொன்னது போல், சுய மேம்பாட்டு வரிகள்….

ஐ ஆம் ஹாப்பி

ஐ ஆம் ஹெலத்தி

ஐ ஆம் அட் பீஸ்…

எங்கத்த பீஸ்… பக்கத்தில் விசும்பல் சத்தம். நம்ம நடு நாயக பொண்ணு தாங்க. கண்ணை திறக்க கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, உலா போன எண்ண ஓட்டங்களை, லகான் போட்டு, கட்டி இழுத்து வந்து மீண்டும்,

ஐ ஆம் ஹாப்பி…என்று ஆரம்பித்தால், சள சள என பேச்சு குரல். சரி இன்னக்கி தியானம் அம்பேல் என்று தெரிந்ததும், கண்ணை திறந்து பக்கத்தில் பார்த்தேன். அப்பிடியே தலை முடியில் பாத்தி கட்டி விட்டாற்போல ஒரு வெட்டு, அதுக்கு ஒரு கலர், (நான் சின்னவளாக இருக்கும்போது எண்ணெய் தடவ வழியில்லாமல் இருப்பவர்கள் தலை இப்படி தான் இருக்கும்… அது அப்போ ‘செம்பட்டை’ இப்போ ஹேர் கலரிங்). ஒரு விடலை… அழும் அந்த பெண்ணை சமாதான படுத்த கையை பிடித்து எழுப்பவதும், முகத்தை பார்க்க முற்படுவதுமாக. ஒரு வழியாக நம்ம ஹீரோயின் மனமிரங்கி கையை எடுத்து விட்டு தன் இருப்பிடம் விட்டு ஏழுந்தாள்.

யப்பே….சிவப்பு லிப்ஸ்டிக்… நன்றாக வெள்ளை பூச்சு முகத்தில்…

அட கொடுமையே… என்னவோ ரொம்ப வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்ததெல்லாம், வீணானதே…

சும்மாவா…. அட பன்னி… அழுது என் தியானத்தை வேறு கலைத்தாயே…

அவன் கை கோர்த்துக்கொண்டு இன்னும் ரெண்டு பெஞ்சு தள்ளி போய் உட்கார்ந்தாள். கருமம்… ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுவிட்டு இடத்தை காலி செய்தேன்.

காதல் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. இந்த வயதுக்கு வராத காதல்(அது காதல் தானா???) எரிச்சல் ஊட்டுகிறது. படிக்கும் பருவத்தில், ஏன் நல்ல நண்பர்களாக இருக்க கூடாது. நன்றாக படித்து, வேலையில் அமர்ந்து, சம்பாதித்து, தானும் பெருமை அடைந்து, பெற்றவர்களையும் பெருமை அடைய செய்து, எவ்வளவு இருக்கிறது…வெட்டி பொழுது போக்கும் இந்த விடலைகளை பார்த்தால் பத்திக் கொண்டு வருகிறது.

சமீபத்தில்தான் ‘ஊரி’ என்ற இந்திய ராணுவம் தொடர்பான படம் பார்த்தேன். இந்த செம்பட்டய கொண்டு மிலிடரயில் விட்டு விட வேண்டும். விடய காலையில் ஒரு பெண்ணிற்காக எழுந்து வந்தவனுக்கு, காலையில் மிலிட்டரி பள்ளியில் எழுந்து கிரௌண்டை சுத்தி ஓடுவது ஈஸி தானே…

பொறுப்பு என்ற ஒன்று இல்லை. இதில் ஆண் பெண் பேதமும் இல்லை.

சினிமாவில் காட்டுவது இல்லை வாழ்க்கை. ஏகப்பட்ட போராட்டங்கள் நிறைந்தது. பொறுப்புகள் கொண்டது. ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு தூண் போல நின்று, வாழ்க்கையை கொண்டு போக வேண்டியது. அந்த காதலில், பாசம், பரிவு, தியாகம், கோவம்,ஊடல்,கூடல்,தேடல், விட்டுக்கொடுத்தல், கண் முடித் தனமாக சப்பை கட்டுதல் இன்னும் இன்னும் எவ்வளவோ…

அந்த பொறுப்பற்ற ஜோடிகளை பார்த்த நொடியில் தோன்றியது தான் இந்த தலைப்பு.

எவ்வளவோ பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த பாடல்… தெரியவில்லை. ஏளனமாக ஆக தான் இந்த தலைப்பை கொடுத்தேன்.

ஆனால் நல்ல காதல் வாழ்க.

காதலர் தின நல் வாழ்த்துக்கள்….

என் ஆயுதம்…

அடாடா…. பயப்படாதீங்கநண்பர்களே!!!

ஆயுதம் ஏந்திய அனு உங்கள் மனக் கண் முன்தோன்றி மறைந்திருப்பேன்.

என்னோட ஆயுதம்என்னோட க்ரோஷா/நிட்டிங் ஹூக்குங்க!!!!!👍

ஒருத்தருக்கு கரண்டி

ஒருத்தருக்கு பேனா

ஒருத்தருக்கு வர்ணம்தீட்ட பருஷ்

என இருப்பதுபோலஎனக்கு என் ஹூக்/நீடில் !!!!!

க்ரோஷா முதலில்அம்மாசொல்லிக்கொடுத்தாலும், ஸ்வெட்டர் பின்னசொல்லிக் கொடுத்ததுமாமியார். நிட்டிங்முதலில் இருந்தேசொல்லிக் கொடுத்ததுமாமியார். ஆனால்குருவுக்கு மிஞ்சியசிஷ்யை ஆகிவிட்டேன்இப்போது. எல்லாம்இன்டர்நெட்ன்கைங்கர்யம் தான்.

அம்மாவுக்கு (அதாவதுமாமியார்) இன்டர்நெட்தெரியாததால், நான்அவ்வப் போதுஅவர்களுக்கு பாடம்எடுக்கிறேன்.

க்ரோஷா / நிட்டிங்…..(இரண்டிற்கும் வித்யாசம்தெரியவில்லைஎன்றால் கூகுளைகேளுங்கள். !!!!)அதுஏதோ ஒன்று என்றுமட்டும் அசட்டையாக சொல்லாதீர்கள்.

இதில் எனக்கு அலாதி ஈடுபாடு. மனது சோர்வடையும் போது என் ஆயுதங்கள் தான் எனக்கு டானிக்.

மனது வலிக்கும் போது புதிதாக ஒன்றை தொடங்கினால், அதில் லயித்து மூழ்கி, முத்தெடுத்து, பார்க்கும் போது அழகாக இன்று உருவாகியிருக்கும்.

அதையும் மீறி சோர்வடையும் நாட்களும் உண்டு. ஏதோ ஒரு வலி தூண்டப்பட்டு, அதன் தொடர்பாக, எப்போதோ நடந்த சம்பவம் நினைவில் வந்து, மீண்டும் அந்த நாள் மனக்கண் முன்னே ஓடி, அப்பப்பா…. ஒரு வழி ஆகி விடுவேன்.

கண்கள் ஊசியை தேடும்…கை பர பர வென்றிருக்கும்…கையில் எடுக்க வேண்டியது தான் மனம் லேசாகும். சில நாட்கள், பொங்கி பொங்கி அழுகை வரும். அழ வேண்டியது தான். சிம்பிள்….

தும்மல் வந்தால் தும்முவது போல

இருமல் வந்தால் இருமுவது போல

அழுகை வந்தால் அழ வேண்டியது தான்.

சின்ன குழந்தைகளுக்கு, பின்னுவதில் தனி மகிழ்ச்சி. நான் பின்னுவதை எந்த குழந்தை அணியும் என தெரியாமல் பின்னுவது இன்னும் த்ரில்…சின்னதும், சுமார் பெரிசுமாக பல ஸ்வெட்டர் இன்று வரை பின்னி பின்னி கை விடப்பட்ட குழந்தைகள் காப்பாகத்திற்கும், வேத பாடசாலைக்கும் கொடுத்தயிற்று. ஒரு சமயம், முதியோர் இல்லத்திற்கு 50 தொப்பி, போட்டு கொடுத்தோம். அதீத மன நிறைவு.

பின்னும்போது, ஸ்லோகங்கள் சொல்லுவதும், பாட்டு பாடுவதும், ஒரு வழக்கம். அதற்காகவே இருவர் ஆர்டர் கொடுத்தார்கள்.

நம் கையால் ஒன்றை உருவாக்கி முடிக்கும் போது பெண் பிரம்மா போல ஒரு பெருமை.

வானப்பிரஸ்தம்

ப்ரஹம்மச்சர்ய

கிரஹஸ்தாஸ்ரமம்

வானப்ரஸ்தம்

முதல் இரண்டும் வாழ்வின் உற்சாகத்தில் இருக்கும்போது நடந்து விடுகிறது.

ஒரு விதத்தில் பார்த்தால் இயல்பாக, மனதிற்கு கஷ்டங்கள் எதுவும் பெரிதாக இல்லாமல், அப்படியே காலம் ஓடி நம் கைகளில் சிக்காமல் கடக்கிறது.

மூன்றாவதாக வரும் வானப்ரஸ்தம் நம்மிடம் சவால் விடுகிறது.

வானப்பிரஸ்தம் என்பது வர்ணாசிரம தர்மத்தின்படி மனித வாழ்வில் மூன்றாம் நிலையாகும். இல்லற வாழ்வில் கடமைகளை முறையாகச் செய்து முடித்தபின் மனைவியுடன் காட்டிற்கு சென்று தவ வாழ்வினை மேற்கொள்ளுதல். பொருளாசையை முற்றும் துறத்தலும் பாச பந்தங்களிலிருந்து படிப்படியாக விடுபடுதலுமே இக்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளாகும். சுருங்கக் கூறின் வானப்பிரஸ்த வாழ்க்கை, துறவறத்திற்குஆயத்தப்படுத்துதல் ஆகும். இது அறுபது வயதிற்கு மேல் எழுபத்தைந்து வயதுக்கு உட்பட்ட காலமாகும்.

இதை எனக்கு கூகுள் சொல்கிறது.

என்னுடைய தாழ்மையான அபிப்ப்ராயத்தில், 60வது வயதிற்கு மேல் இல்லை… இன்னும் எவ்வளவு முன்னதாக மனதளவில் கடைபிடிக்க இயலுமோ அவ்வளவு நல்லது.

நீ சாமியார் …என்று என் வீட்டில் என்னை ஒருவர் கூறுவார்.

இல்லவே இல்லை. அதற்கான தகுதி எனக்கு இல்லை. தாமரை இலை தண்ணீர் போல் இருப்பது துறவறம் இல்லை.

நான் என முப்பத்தைந்து நாற்பதுகளிலேயே வானப்ரஸ்தாசரமத்திற்கு தயார் செய்து கொண்டுவிட்டேன்.

அதில் என் குருமார்கள் என் அப்பாவும் அம்மாவும். அவர்கள் வாழ்ந்த யதார்த்த வாழ்க்கை. ஒரு நிலைக்கு மேலே நாங்கள் எங்கள் கருத்துக்களை மட்டும் கூறுவோம், முடிவு உன்னுடையது என்று எனக்கு சுதந்திரம் கொடுத்தார்கள்.

எங்களை காடு வா வா என்கிறது … நீ உன் வாழ்க்கையை பார். உன் கணவன் குழந்தைகள் அவர்கள் எதிர் காலத்தை கவனி என்றார்கள்.

ஒரு விதத்திலும் எமோஷனல் பிளாக் மெயில் செய்யவில்லை.

ஸ்வாமி சுகபோதானந்தா அவர்களின் புத்தகத்தில் பல வருடங்கள் முன் படித்த ஞாபகம்.

வாழ்க்கை ஒரு ரிலே ரேஸ் போல… நீ ஓடி முடிக்கும் போது அடுத்தவனிடன் கம்பை கொடுக்க வேண்டும்.

எவ்வளவு நிதர்சனமான உதாரணம்.

நாமும் பாசம் கண்ணை கட்டாமல்,

அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைக்கலாமே.

அவர்கள் தவறினால் திருத்தி கொடுக்கலாம். தவறு செய்தால் தானே அவர்களும் கற்று கொள்வார்கள்.

1. எல்லா வேலைகளும்நீங்களே செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்காதீர்கள். பகிர்ந்து செய்தால் எல்லாரும் active ஆக இருக்கலாம்.

2. வரவு செலவில் ரொம்பவும் மூக்கை நுழைக்காதீர்கள். பெண் பிள்ளைகள் அதிகமாக செலவு செய்வதாக தோன்றினால்… நல்ல முறையில் சொல்லுங்கள். நக்கல், குத்தல் , நாலு பேர் முன் சொல்வது இதெல்லாம் வேண்டாமே. அதையும் மீறி,

நான் பாதுக்கறேன் அப்பா/அம்மா என்று சொன்னால் விட்டு விடுங்கள். புலம்ப வேண்டாம்.

3. உங்கள் வயதுள்ளவர்களை சந்தித்தால், இந்த காலத்து பசங்க எங்க… என்று ஆரம்பித்து புலம்ப வேண்டாம். கைகளை போச்சு எல்லாம் என்று காட்டுவது, தலையில் அடித்து கொள்வது, உதட்டை கோணுவது…வேண்டவே வேண்டாம்.

Body language என்று சொல்லப்படும் நம் உடல் பாவனை ரொம்ப முக்கியம்.

4. நாளை நாம் ஓய்வு பெறுவோம் என்று முன்கூட்டியே ஏதாவது ஒரு விஷயத்தில் ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இல்லையேல், திடீரென்று நிறைய நேரமும், செய்வதற்கு ஒன்றும் இல்லாது போலவும் தோன்றும். அப்போது யார் எது சொன்னாலும் தப்பாகவும் தோன்றும். புத்தகம் இன்றியமையாத துணை. கொஞ்சம் டெக்னாலஜி தெரிந்தால் தூள் கிளப்பலாம்.

5. வாட்ஸ் ஆப் / facebook…இன்ஸ்டாகிராம்

எப்பவுமே என்ன வேன்டிற்கு என்று குற்றம் சொல்லாமல், தெரிந்து கொள்ளுங்கள்.

நான் அனுப்பின message கு ப்ளூ டிக் வந்தது.. ஆனாலும் நீ பதில் அனுப்பல னு பெண் பிள்ளையை நோண்டாதீர்கள்… அவர்கள் என்ன வேலையாய் இருக்கர்களோ…கொஞ்சம் அவகாசம் கொடுங்கள்…

(ரொம்பவே நேரம் கடத்தினால் வளாசுங்கள் ,,😎)

இன்னிக்கி என்ன சமையல்? என்று தினமும் கொடையாதீர்கள். என்னத்தையோ சமைக்கட்டும் சாப்பிடட்டும்…

6. எனக்கு பொழுது போகவில்லை, வீடு வெறிச்சுன்னு இருக்கு, வாழ பிடிக்கலை, இதெல்லம் சொல்லி குழந்தைகளை குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தாதீர்கள்.

7. முதியோர் இல்லம்.

இன்று பல ஊர்களில் முதியோர் இல்லம் என்கிற பேரில், நல்ல ஹோட்டல் போல வசதிகள் தருகிறார்கள். அதனால், அங்கு போய் இருப்பதை, ஒரு தண்டனை போல பாவிக்காமல், ஜாலியாக இருக்க பாருங்கள்.

உங்களால் ஒரு வீட்டை நடத்துவதற்கு, சிரமமாக இருந்தால், முதியோர் இல்லத்தில் சென்று இருப்பதில் தவறில்லை.

8. Selflove: உங்களை உங்களுக்காக விரும்புங்கள். அதில் தவறே இல்லை. குற்ற உணர்வும் வேண்டாம். ஓடி ஓடி உழைத்து சம்பாதித்து, பிள்ளைகளை படிக்க வைத்து, மணமுடித்து செட்டில் செய்து விட்டீர்கள். இப்போது உங்களுக்காக வாழலாமே. பிடித்த சினிமா பாருங்கள்…கோவிலுக்கு சென்று வாருங்கள், ஊட்டியோ கொடைக்கானலோ போய் வாருங்கள். போகும் இடத்தில் சௌகரியமாக தங்கி, உண்டு, இளைப்பாருங்கள்.

50 வது வயதில் எனது 50 வது பதிவு இது.

வாழ்க்கை வாழ்வதற்க்கே. எல்லோருமே தங்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள். நம்மால் ஆனது, எல்லோருக்கும் நல்ல வாக்கு சொல்லுவோம். தளர்ந்த உள்ளங்களுக்கு

இதுவும் கடந்து போகும் கண்ணே ….

என்று உற்சாகமூட்டுவோம்.

என்னை அக்காவாக, அத்தையாக, மமியாக, பெரியம்மாவாக, தோழியாக பார்க்கும் எல்லோருக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்.

கபாலி, கற்பகாம்பாள்

கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?

அதிலிருந்து 2 வீடு தள்ளி தான் என்னோட வீடு…

உள்ளே நுழைந்தவுடன் கோவில் வீடு எண்2 என்று பதித்த ஒரு கல் இருக்கும். அதை தாண்டினால், ஒரு பெரிய நிலப் படியும் பெரிய கனமான கதவும்.

இப்பிடி சொல்லிக் கொண்டிருந்த பந்தம் கடந்த 9ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கபாலி கோவிலுக்கு சொந்தமான வீட்டில் என் அப்பா 50 வருடங்கள் முன் வாடகை தாரராக குடி போனார். அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் என் அம்மாவின் சீமந்தமாம்..

ஒட்டு வீடு தான். நீண்ட தாழ்வாரம், கூடம்,ரேழி, முற்றம்,புழக்கடை, வெராண்டா…..

இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

வீட்டின், ஓரோர் இடங்கள்.

அந்த பெரிய கதவில்

P.S.Ramaswamy

Mrs. Lakshmi Ramaswamy

என்று ஒரு போர்டு.

ஒரு முறை நான் சாக் பீஸில் என் பெயரையும் அதற்கு கீழே எழுதினேன். உறவினர் ஒருவர், என் மேல் ரொம்ப பாசமானவர், எனக்கு பிளாஸ்டிக் இல்

R.Anuradha IN/OUT 😊😊😊

டாக்டர் ரூம் வாசலில் இருக்குமே அது போல செய்து அன்பளிப்பாக கொடுத்தார்.

அதை தாண்டினால் ரேழி(அப்படினா???) எனக்கு தெரியாது… வீட்டில் ஒரு பகுதி அவ்வளவு தெரியும். அந்த ரேழியில் என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி போட்டோ. அதன் வலப் பக்கம், ஒரு ரூம். ஏன் அதை நாங்கள் first ரூம் என்று சொன்னோம்??🤔🤔🤔முதலில் வருவதாலோ? அந்த first ரூம் தான் எங்கள் ஹால், லிவிங் ரூம், பெட் ரூம் எல்லாம். அம்மாவும் அப்பாவும் தங்கள் இறுதி சுவாசத்தை விட்டதும் இங்கே தான். அதில் அம்மா அப்பாவின் ஒரு படம். அம்மாவும் அவர் தோழியும், அம்மாவின் பட்டம் பெற்ற படம், அம்மா மடிசாரில், இன்னும் சில தெய்வ படங்கள்.

அதை தாண்டினால் ஒரு இடம், 2 படி இறங்க வேண்டும். ஒரு சின்ன ரூம் போல…பாய் படுக்கை வைக்க. அங்கிருந்து ஒரு படி இறங்கினால் , வெட்ட வெளி மித்தம்(முற்றம்). கொடிகள் கட்டப் பட்டிருக்கும் துணிகள் காய போட. வலதுபுறம் ஒரு பெரிய குளியல் அறை. (மும்பையில் அது பெட் ரூம்!!!) அதில் 2 சிமென்ட் தொட்டிகள். துணி துவைக்கும் கல்…மூடாத தண்ணீர் வடியும் கால்வாய். (சாக்கடை என்றும் சொல்லலாம்)அதில் அந்த நாட்களில் பாய்லர் இருந்தது. வென்னீர் போட.

முத்தத்தின் ஒரு கோடியில், என் அப்பா எனக்காக வைத்த நித்யமல்லி செடி. பாதி முத்தத்திற்கு படர்ந்திருக்கும். நடுவே ஒரு ஆள் நுழைகிறார் போல ஒரு gap. ஒரு ஸ்டூல் போட்டு ஏறினால், நம் உடல் அந்த gap இல் நுழைத்துக் கொண்டு, பூக்களை பறிக்கலாம். அப்பப்பா….. எவ்வளவு பூ… இதை எழுதும்.போது கூட எனக்கு வாசனை அடிக்கிறது. என் பூ தொடுக்கும் ஆர்வம் இங்கிருந்து தான் தொடங்கியது. நீண்ட பின்னலில், எங்கள் வீட்டு நித்யமல்லி… அம்மாவின் கொண்டையில், காலில் வாழை நார் மாட்டி எசைத்த அரை வட்ட வேணி…

குளியலரையை அடுத்து ஸ்டோர் ரூம். குளித்து விட்டு உடை மாற்றவும், பல சரக்கு சாமான்( இந்நாள் grocery😁) வைக்கவும் கெஸ்ட் ரூம் எல்லாம் இது தான்.

அதை தாண்டினால் தாழ்வாரம். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் எனக்கு இங்கு உட்கார வைத்து தான் சாப்பாடு. அன்றும் இன்றும் எனக்கு அது தப்பாக படவில்லை.

அங்கிருந்து 2 படிகள் ஏறினால் சமயலறை. இன்றைய பெரிய மாஸ்டர் பெட் ரூம் அளவு. பூஜை அறையும் டைனிங் ஏரியா வும் எல்லாம் இதற்குள்.

தளிகை பண்ற உள்…(ஐயங்கார் வழக்கு சொல்)…

இந்த நாள் இனிய நாள் …

வழங்குபவர் தென்கச்சி சுவாமிநாதன்…

ட்ரான்சிஸ்டரில் கேட்டுக் கொண்டே எல்லா படங்களுக்கும் அம்மாவும் அப்பாவும், பவழமல்லி மாலை கோர்ப்பார்கள். (புழக்கடையில் பெரிய மரம்)கருவேப்பிலை மரமும் இருந்தது. இந்த த.உள்ளிலிருந்து பார்த்தால் வாசல் தெரியும். வாசலில் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு.தாழ்வாரத்தில்ருந்து வலப் பக்கமாக போனால் ஒரு சந்து போல வந்து புழக்கடையில் விரியும். அங்கு தான் டாய்லெட். 2007 வரை கதவு கூட இல்லாத கழிப்பறை. வெளியே வாளியில் தண்ணீர். யாரேனும் வரும் சத்தம் கேட்டால், உள்ளிருப்பவர் கணைக்க வேண்டும் 🤣🤣😂😂 கதவு இல்லாதது எனக்கு மட்டும் அல்ல என் பெண்களுக்கும் கூட அசௌகர்யமாக பட்டதில்லை.இது தான் எங்கள் வீட்டின் வரைபடம் !!!ஒன்ன பாக்காம ஒன் கையால மருந்து சாப்பிடாம போய்டுவேனோ… என்றும், இனிமே கை குழந்தையை தூக்கிண்டு பாம்பே லேந்து வந்து அலையாதே… நான் போய்ட்டேன்னு தகவல் வந்தப்பரம் வந்தா போறும் என்று சொன்ன அப்பாவும்,கற்பாகம்பாள் காலடில போகணும்,இனிமே நானும் ஒனக்கு ஒரு பொண்ணு தானே சீனு? என்று கேட்ட அம்மாவும்… இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை மிக மிக நிறைவானது. அவர்கள் பெற்ற நானும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். போதும் என்ற பொன்னான மனம் எனக்குள் விதைக்கப் பெற்றவள். வாடகை நிலுவை தொகை 5 லட்சத்து சொச்சமும் கட்டி விட்டு, வீட்டையும் கோவிலுக்கு திருப்பி கொடுத்துவிட்டு வரும் போது மனதில் எந்த வித சலனமும் இல்லை. மாறாக பெரும் நிம்மதி. யாரிடமும் காசு வாங்காமல், sub let செய்யாமல், அப்பா அம்மா பெயரை காப்பாற்றி விட்டேன். அதற்கு முழு நன்றி என் கணவருக்கு. அவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.கடந்த 9ஆம் தேதி , நர்த்தன விநாயகருக்கு ஒரு சதிர் காய் போட்டு விட்டு , கபாலிக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வீட்டை ஒப்படைத்தேன்.கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?அதிலிருந்து 2 வீடு தள்ளி என்னோட வீடு…….”.இருந்தது”#மைலாப்பூர் #கபாலி

காது கொடுத்து கேட்டேன் …

காது கொடுத்து கேட்டேன் … என்றவுடன் 

ஆஹா ….குவா குவா சத்தம் என்று பாடினீர்களா?

அதுதான் இல்லை. … 

நான் சொல்வது 

Listening !…கேட்பது… 

பிறர் சொல்ல வருவதை கேட்படது.

“நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம் ” என்று தமிழ் படங்களில் கடைசீ சீனில் வருமே.. 

முக்கியகிமாக சொல்ல வருவதை கதாநாயகநோ கதாநாயகியோ கேட்க மாட்டேன் என்கிறார்களே என்று நாம் தவிப்போமே !!

அது போல அல்லாமல், கேட்பது … சொல்ல வருபவர்கள், சொல்ல வருவதை, சொல்ல விடுவது…..பேசாமல் கேட்பது!

பேசாமல் கேட்பது …

அவர்கள் மனதில் உள்ளதை கொட்டி தீர்க்கும் வரை வாயை திறக்காமல், பொறுமையாக கேட்பது… 

ஹ்ம்ம் கொட்டுவது, தலையை அசைப்பது வேண்டுமானால் allowed…மற்றபடி…

உங்களுக்கு அந்த வயதில் என்ன நேர்ந்தது, நீங்கள் எப்பிடி சமாளித்தீர்கள், எப்படி வென்றீர்கள், கொடி நட்டீர்கள், கிரீடம் கிடைத்தது…. அது எல்லாம் கேட்டால் மட்டுமே பகிரவும். 

சொல்பவரின் மன நிலை என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொண்டு உங்கள் புராணம் பாடினால் போதும். 

சொல்ல வருபவர் ஏதோ ஒரு மன அழுத்தம் காரணமாக , அழுதாலோ, குரல் உடைந்தாலோ, கோபப் பட்டாலோ, பொறுமையாக இருந்து, ஆதரவாக அவர்கள் கரம் பற்றுங்கள். முடிந்தால் கட்டி பிடித்துக் கொள்ளுங்கள். 

கரம் பற்றும் போதும் கட்டி பிடிக்கும் போதும் மனது லேசாகுறது என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

கண்டிப்பாக மனசு தளர்வதை ஒருவர் ஆறுதலாக கரம் பற்றும் போதும், கட்டி முதுகில் தடவும் போதும் உணரலாம். இது இரண்டுமே செய்ய முடியாவிட்டாலும், அவர்கள் சொல்வதை செவி மடுத்தால் போதும். அதுவே அவர்களுக்கு ஆறுதல். அவர்கள் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த உடன், தேவை பட்டால், உங்கள் பக்க கருத்துகளையும், உங்கள் அனுபவத்தையும் கூறுங்கள். 

Happy listening !!