Tag Archives: த்ருப்தி

கதை சொல்லும் பென்சில் ✏️

வாட்ஸ் ஆப் கதை படிசீங்களா மக்களே ?

ஆப்பு வைக்கும் வாட்ஸ் ஆப்பு சில சமயங்கள்ல செம்ம மெசேஜ் கூட கொண்டுவரும்க!

அப்பிடித்தான் எனக்கும் ஒண்ணு வந்துது . கன்னடத்தில – போச்சு போ இனிமே கன்னடத்தில எழுதி கொல்ல போறியா னு நீங்க பதர்றது தெரியுது. இல்ல , கண்டிப்பா இல்ல .

நாம் சுணங்கி இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட message கள் நமக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றன. இதுதான் ஆத்மாவுடனான உரையாடலோ?

பென்சில் பாக்சில் உபயோகித்து தேய்ந்து போன பென்சில் ஒன்று, புது பென்சிலை வரவேற்கிறது. எனக்கு அனுபவத்தில் தெரிந்த விஷயங்கள. உனக்கு சொல்கிறேன் கேள் என்றது..

முதலாவதாக, நீ தனியாக செயல்படுவதில்லை . உன்னை ஒருவர் கையில் எடுத்தால் தான் செயல் பட முடியும்.

இரண்டாவது. உன்னுடைய வெளியில் இருக்கும் மர பாகத்தை காட்டிலும்

 

உள்ளே உள்ள lead (ஈயம்) தான்  மிக முக்யம்.

மூன்றாவது, நீ அவ்வப்போது, சீவப்படுவாய்…எப்போதெல்லாம் நீ மழுங்கி போகிறாயா அப்போதெல்லாம் நீ சீவப் படுவாய். தயாராக இரு.
நான்காவது,மிக முக்கியமானது, நீ எழுதும் போது  பிழைகள் ஏற்படும். கடைசியில் இருக்கும் ரப்பர் கொண்டு அழித்து விட்டு மீண்டும் எழுது.
இத்தனை நாளும்  எழுதி எழுதி தேய்ந்து போன பென்சில், புது பென்சிலுக்கு குடுக்கும் அறிவுரை மட்டும் இல்லை. வாழ்க்கை பாடம் நமக்கும் இருக்கு இதில். இந்த வாழ்க்கை பாடங்களை அவ்வப்போது மறப்பது தான் நம் துன்பத்திற்கும், நிம்மதி இல்லாமைக்கு காரணம்.
முதலாவதாக நீயாக எழுத முடியாது, ஒருவர் உன்னை கையில் எடுக்க வேண்டும். அவன் தான் பரமாத்மா. அவன் நம்மை தாங்குகிறான். நம்மை கையில் எடுத்து எழுதுகிறான். அவன் எழுத்து தப்பாது என்று நம்பு. அந்த பரமனின் கையில் நான் ஒரு ஆயுதம் என்பதை மறக்க கூடாது.  பகவத் கீதையில் பதினோராவது அத்தியாயத்தில் முப்பத்தி மூன்றாவது செய்யுளில், கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறான்,
நிமித்த மாத்திரம் ……
“எதிரில் மாண்டதாக நீ நினைப்பவர் எல்லோரும் என்னால் ஏற்க்கனவே வீழ்த்தப்பட்டனர். நீ எனது செயலுக்கு ஒரு கருவி ” என்று. ஹஸ்தினாபுரம் தர்மத்தினால் ஆளப் பட வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன் என்று.
போர் முடிந்த பின், அர்ஜுனன் கூறினானாம்  நான் தான் அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்று.பீமன் தான் அதை விட அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்றானாம். அதனால் கண்ணன் இருவரையும் போர்க் களத்திற்கு அழைத்து சென்றானாம். அங்கு கடோதகஜனின் மகன் பார்பரீகனை கண்டு,  அவனிடம் அர்ஜுனனின் அம்புகளை அதிகம் பார்த்தாயா, பீமனின் கதையை அதிகம் பார்த்தாயா என்று கண்ணன் கேட்க, கண்ணனின் சக்கரத்தை தான் நாலா பக்கமும் சுழல்வதை பார்த்தேன் என்றானாம், பார்பரீகன் . நம் வாழ்க்கையும் அதே தான் நண்பர்களே. “நான்” ” எனது” என்பதை அழித்து, “நீ” “உனது” என கண்ணன் காலடியில் சமர்ப்பித்து பாருங்கள், அந்த அனுபவம் பேரானந்தம். ராம நாமமும் சிவ நாமமும் இதற்க்கு தான். நம்மை நாமே ஞாபகப்படுத்திக்கொள்ள.
நம்,
சுகம் – துக்கம்
லாபம் – நஷ்டம்
ஜெயம் – அபஜெயம்
மான – அவமானம்
எல்லாம் அவன் அருளால் நடக்கிறது. அப்படியென்றால், இதில் என் பங்கு /பாத்திரம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் தாசன், அவர் ஸ்வாமி என்று உணர்வது தான் நம் பாத்திரம். நான் எனும் அஹம்காரம் இல்லாத போது , நாம் பணிவாகிறோம். இப்போது அமெரிக்காவில் இருப்பதில், நிறைய நேரம் கையில். பகல் பொழுதெல்லாம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அதில் முகுந்த மாலா கேட்ட போது , ஒரு புரந்தர தாசர் க்ரித்தியை குறிப்பிட்டார். இன்னு தய பாராதே தாசன மேலே …
அதில் ஒரு வரி,
நானு நன்னது எம்ப நரக தொலகே பித்து
நீனே கதி எந்து நம்பித தாசன மேலே
நான் என்னது என்ற எண்ணம் என்னை நரகத்தில் தள்ளியது , நீயே கத்தி என்று நம்பும் இந்த டடன் மேலே தயை வராதா ……
என்ன ஒரு வீரியமான வார்த்தைகள். கண்ணில் நீர் பெருகிக் கொண்டே இருக்கிறது

 

இரண்டாவது பாடம்  உன் வெளிப்புறத்தை விட உள்ளே உள்ள ஆத்மா  முக்கியம். நீ உடுக்கும் ஆடை யோ, உண்ணும் உணவோ, வசிக்கும் வீடோ, பொன்னோ பொருளோ நீ அல்ல. உன் அந்தராத்மாவும் அதில் நீ அனுபவிக்க கூடிய நிம்மதியும் தான் நீ. உள்ளே புழுக்கம் அதிகமாக இருந்து வெளியே நீ ஏ.சி யில் இருந்தால் என்ன பயன். சரி, இந்த நிம்மதி எங்கே கிடைக்கும் ? கடைகளில் கிடைக்க கூடிய வஸ்து  இல்லையே. விலை கொடுத்து வாங்கக்கூடியது இல்லையே. காசு பணம் இருந்தால் மருந்து வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது அல்லவா? இந்த நிம்மதியை வாங்க காசு பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். உன் பாத கமலங்களில் என்னை அறப்பணித்துவிட்டேன், காப்பாற்று என்று சரணாகதி அடைந்தால் போதும், அவன் தந்து விடுவான் இந்த நிம்மதியை.

மூன்றாவதாக…. நாம் அவ்வப்போது சீவப் படுகிறோம். எப்போதெல்லாம் மழுங்கி போகிறோமோ அப்போதெல்லாம் சீவப் படுகிறோம். விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தப்படுகிறோம். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்காதே.
நஷ்டங்கள் வரும்
உடல் நலம் கெடும்
அழுவோம்
துடிப்போம்
வருந்துவோம்
இதெல்லாம் யார்க்கு இல்லை ? ராமாவதாரத்தில், காட்டுக்கு சென்று அவர் படாத துன்பமா ? கிருஷ்ணாவதாரத்தில் அவர் பிறந்ததே, சிறைச்சாலையில். ராமகிருஷ்ணா பரமஹம்சர், எப்பேர்ப்பட்ட மஹான், அவருக்கு ஏன் புற்று நோய்  வந்தது.  எந்த ஒரு பிறப்பும் துக்கத்திலிருந்து தப்பிப்பதில்லை. இருவர் மட்டுமே இதற்க்கு விலக்கு , ஒன்று இன்னும் பிறவாத குழந்தை, இன்னொன்று, மடிந்து போனவர். கடலும், மலைகளும், ஆறுகளும், இருக்கும் வரை துக்கமும் இருக்கும். சுகமும் துக்கமும் மாறி மாறி வரும். சுவாமி விவேகானந்தரை ஒரு முறை ஒரு குரங்கு கூட்டம் தாக்க வந்ததாம். அவர் பயந்து ஓடாமல், நின்று, எதிர்கொண்டாராம். அவை அதை எதிர் பாராததால், மிரண்டு பின் வாங்கின. நம் பிராரப்த கர்மாக்களிலிருந்து தப்பிக்க முடியாது. என்னுடன் இரு பெருமாளே, என்னை கை பிடித்து கரை சேர்த்து விடு என்று அவன் காலை பற்றுங்கள்.
கடைசியாக தப்பு செய்வது மனித குணம் அதை மன்னிப்பது தெய்வ குணம். தப்பை திருத்திக்கொள்வது மிக முக்கியம். நாம் மன்னிக்க படவேண்டும் என்று ஆணித்தனமாக எண்ணும்  போது, மன்னிப்பதற்கு தயாராக இருப்பதும்  முக்கியம்.  கசப்பானவற்றை அழித்து விட்டு முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் நிம்மதிக்காகவாவது.

நீண்ட பதிவு. ஆனால்  நான் அனுபவித்ததை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையில், அந்த ஆடியோ பதிவில் வந்ததோடு, என் சரக்கையும் சேர்த்து உங்களுக்கு கொடுத்தேன். பொறுமையாக இது வரை படித்ததற்கு நன்றி.
கண்ணன் நம் எல்லோரையும் காக்கட்டும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண  கிருஷ்ண  ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே ……

 

காஃபீ வித் கற்பகம்…..

இல்லை …காஃபீ வித் அனு வா?

எதுவா இருந்தாலும், இந்த நெரஞ்ச வெள்ளிக்கிழமை, கற்பகத்தை பத்தி நீங்க தெரிஞ்சுக்கணும்.

கற்பகம் மாமி ஊருக்கு. எனக்கு கப்பூ…

ஹாய் கப்பூ… னு சொன்னா ஹாய் சொல்லிட்டு, குண்டம்மா.. கப்பூ வா மே ! கப்பூ….என்பார்.

யாரு இந்த கப்பூ?/ கற்பகம் மாமி. எங்கள் பக்கத்து வீட்டு மாமி. 10 வருட பரிச்சயம். பேருக்கு தான் சீனியர் சிடிசன். சின்ன பெண்களுக்கு(அதாவது எனக்கு)😊 சரி சமமா பேச முடியும் அவரால். இரண்டு பிள்ளைகள். மூன்று பேர குழந்தைகள். கணவர், மருமகள்கள். நாங்கள் அலசாத விஷயமே இல்லை. பாலிடிக்சிலிருந்து panty வரை 😂😂😂நான் இப்போது இருக்கும் வீட்டிற்கு புதிதாக வந்தபோது, இன்னிக்கி என்ன டிபின் என்று கேட்டேன். கடுத்த மா தோசை என்றார். ஆஹா இந்த வார்த்தையை கேட்டு எவ்ளோ நாள் ஆச்சு என்று ஆரம்பித்த எங்கள் சம்பாஷணை இன்று வரை பல விஷயங்களை அலச வைக்கிறது

இருவர் உடம்பிலும் தஞ்சாவூர் தண்ணி…. அதனால் ஒரே பழமொழி பரிமாற்றம். சில அடல்ட்ஸ் ஒன்லி பழமொழிகளும் உண்டு. ஒரு சிரிப்பு மட்டுமே சிரித்து விட்டோ, ஒரு ஹலோ மட்டுமே சொல்லி விட்டோ நாங்கள் சென்றதில்லை. குப்பை வைத்துவிட்டு, குப்பை டப்பாவை கையில் பிடித்தபடி ஒரு பதினைந்து நிமிஷம், சாவியை துவாரத்தில் போட்டு விட்டு ஒரு இருவது நிமிஷம், மாடி படியில் எதிர் கொண்டால் ஒரு இருபத்தைந்து நிமிஷம்,(மேலே உள்ள புகைப்படம் மாடிப் படியில் கட்டம் போட்ட புடவையில் நாங்கள் எதிர் கொண்ட போது) பால் வாங்கி வரும்போதோ வாக்கிங் போகும் போதோ மாட்டினால் ஒரு 30 நிமிஷம் என்று எங்கள் அரட்டை நடக்கும். யாரை பற்றியும் பேசாமல் பொதுவாக வாழ்க்கை, வாழ்க்கையின் கண்ணோட்டம், பயணம், புடவை, வக்கணயான சாப்பாடு காம்பினேஷன், என ஏதாவது ஒன்று மாட்டும் அலசுவதற்கு.

வேலை மெனகட்டு நேற்று வாட்ஸாப்பில், free யா என்று கேட்டு விட்டு, அரட்டைக்கு எண்ணிக்குமே free என்று சொன்னவுடன், சென்று ஒரு மணி நேரம் பிளேடு போட்டு விட்டு வந்தேன்.

வயசு எல்லோருக்கும் ஏறி கொண்டு தான் போகிறது. ஆனால் இருப்பதில் சந்தோஷமாக, பாசிடிவாக இருப்பது நம் கையில் தான் இருக்கு. கப்பூவும் நானும் அந்த ரகம். (ஜூன் மாத பிறப்புகள். ஜெமினி க்கள் அப்படித்தனோ?)😊☺️

தென் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து, அந்த நாளத்து பம்பாயில் வாக்கப்பட்டு, தன் பிள்ளைகளை வளர்த்து, கல்யாணம் முடித்து, இன்று கொஞ்சம் இளைப்பாறி, தன் ஆசைக்கு, நாலு இடங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கிறார். மச்சினர் பேரனுக்கு பூணல், வயசான மன்னி.. ஒடம்பு சரி இல்லை.. நன்னா இருக்கர்ச்ச பாக்கலாம் னு ஒரு வாரம் ஊருக்கு போறேன், எங்க அண்ணா பொண்ணு அவா ஊர்ல கும்பாபிஷேகம் னு கூப்டா, சம்பந்தி மாமி ஊர்ல கோவிலுக்கு போறோம், இப்படி நாலு இடம் பார்ப்பதில் அதிக ஆர்வம். பயணமும், பயணிப்பதும் எல்லாரும் விரும்பி செய்வதில்லை. ஆனால் பயணங்கள் கற்று தரும் பாடங்கள் விலை உயர்ந்தவை.

நாம் பின் பற்ற வேண்டியது ஒன்று தான். மனதை விசாலமாக வைத்து கொள்ள வேண்டும். To keep the mind open. பல வருடங்களுக்கு முன்னால் அவர்கள் குடியிருந்த வீட்டு அசல் வீடு துளு பாஷை பேசுவார்களாம். அதனால் மாமியும் நன்றாக துளு வில் துள்ளி விளையாடுவார் ! அது ஒரு கிப்ட். கண்ணு பாத்தா கை செய்யணும் என்பார்களே அது போல காதால் கேட்டு வாயால் பேசணும் நா? திறமை தானே?

அடுத்து என்னை ஈர்த்த விஷயம். பாங்காக நேர்த்தியாக தோற்றமளிப்பது. கழுத்தில் ஒரு கொடி, கைகளில் இரண்டு வளையல்கள், வைர தோடு, பேசரி எப்போதும். நளினமாக உடுத்திய புடவை. நல்ல சிரிப்பு. பெரிய பொட்டு. போதுமே ஒருவரை ஈர்க்க.

இந்த பத்து வருடத்தில் சோர்ந்து நான் பார்த்ததில்லை. அப்பிடியே இருக்க கடவுளை வேண்டுகிறேன்.

தனக்கென்று ஒரு நண்பிகள் வட்டம். காலை அருகில் உள்ள கிரவுண்ட் இல் நாலு ரவுண்டு. வெளி உலகம் பார்த்தல் /புரிதல் அங்கு ஏற்படுகிறது. வாட்ஸாப்பில், யூ ட்யூபில், ஏதோ பார்த்துக் கொண்டு பொழுது போகிறது. மனதளவில் இளமை. அடுத்த தலைமுறை அவர்கள் பொறுப்பில் இயங்கட்டும். உடன் நிற்கின்றேன் என்கிற மனப்பான்மை. நாள் கிழமைகளை குறைவில்லாமல் கொண்டாடுவது. புதிதாக எதை பற்றி பேசினாலும், நிறைய கேள்விகள் கேட்டு தெரிந்து கொள்ள முயல்வது. பாஸ்டா,பிசா, நூடுல்ஸ் எல்லாம் டேஸ்ட் செய்யவும் ரெடி. தொகையல், கூட்டு, குழம்பு என்று வக்கணயாக, நல்ல காம்பினேஷன் சாப்பாடும் அவ்வளவே ரசிக்க முடியும்.

அவர் மைண்ட் ஐஸ் லைக் அ பாராசூட். இட் ஒர்க்ஸ் பெஸ்ட் வென் இட் இஸ் ஓபன் our mind is like a parachute. It works best when it is open.

கப்பூ எனக்கு தோழி, அம்மா, அத்தை,மாமி எல்லாம். இப்படி ஒரு மனுஷியை என் வாழ்க்கையில் கொண்டு வந்த கடவுளுக்கு நன்றி.

பெண்கள் தின நல்வாழ்த்துக்கள் !!!!

கபாலி, கற்பகாம்பாள்

கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?

அதிலிருந்து 2 வீடு தள்ளி தான் என்னோட வீடு…

உள்ளே நுழைந்தவுடன் கோவில் வீடு எண்2 என்று பதித்த ஒரு கல் இருக்கும். அதை தாண்டினால், ஒரு பெரிய நிலப் படியும் பெரிய கனமான கதவும்.

இப்பிடி சொல்லிக் கொண்டிருந்த பந்தம் கடந்த 9ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கபாலி கோவிலுக்கு சொந்தமான வீட்டில் என் அப்பா 50 வருடங்கள் முன் வாடகை தாரராக குடி போனார். அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் என் அம்மாவின் சீமந்தமாம்..

ஒட்டு வீடு தான். நீண்ட தாழ்வாரம், கூடம்,ரேழி, முற்றம்,புழக்கடை, வெராண்டா…..

இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

வீட்டின், ஓரோர் இடங்கள்.

அந்த பெரிய கதவில்

P.S.Ramaswamy

Mrs. Lakshmi Ramaswamy

என்று ஒரு போர்டு.

ஒரு முறை நான் சாக் பீஸில் என் பெயரையும் அதற்கு கீழே எழுதினேன். உறவினர் ஒருவர், என் மேல் ரொம்ப பாசமானவர், எனக்கு பிளாஸ்டிக் இல்

R.Anuradha IN/OUT 😊😊😊

டாக்டர் ரூம் வாசலில் இருக்குமே அது போல செய்து அன்பளிப்பாக கொடுத்தார்.

அதை தாண்டினால் ரேழி(அப்படினா???) எனக்கு தெரியாது… வீட்டில் ஒரு பகுதி அவ்வளவு தெரியும். அந்த ரேழியில் என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி போட்டோ. அதன் வலப் பக்கம், ஒரு ரூம். ஏன் அதை நாங்கள் first ரூம் என்று சொன்னோம்??🤔🤔🤔முதலில் வருவதாலோ? அந்த first ரூம் தான் எங்கள் ஹால், லிவிங் ரூம், பெட் ரூம் எல்லாம். அம்மாவும் அப்பாவும் தங்கள் இறுதி சுவாசத்தை விட்டதும் இங்கே தான். அதில் அம்மா அப்பாவின் ஒரு படம். அம்மாவும் அவர் தோழியும், அம்மாவின் பட்டம் பெற்ற படம், அம்மா மடிசாரில், இன்னும் சில தெய்வ படங்கள்.

அதை தாண்டினால் ஒரு இடம், 2 படி இறங்க வேண்டும். ஒரு சின்ன ரூம் போல…பாய் படுக்கை வைக்க. அங்கிருந்து ஒரு படி இறங்கினால் , வெட்ட வெளி மித்தம்(முற்றம்). கொடிகள் கட்டப் பட்டிருக்கும் துணிகள் காய போட. வலதுபுறம் ஒரு பெரிய குளியல் அறை. (மும்பையில் அது பெட் ரூம்!!!) அதில் 2 சிமென்ட் தொட்டிகள். துணி துவைக்கும் கல்…மூடாத தண்ணீர் வடியும் கால்வாய். (சாக்கடை என்றும் சொல்லலாம்)அதில் அந்த நாட்களில் பாய்லர் இருந்தது. வென்னீர் போட.

முத்தத்தின் ஒரு கோடியில், என் அப்பா எனக்காக வைத்த நித்யமல்லி செடி. பாதி முத்தத்திற்கு படர்ந்திருக்கும். நடுவே ஒரு ஆள் நுழைகிறார் போல ஒரு gap. ஒரு ஸ்டூல் போட்டு ஏறினால், நம் உடல் அந்த gap இல் நுழைத்துக் கொண்டு, பூக்களை பறிக்கலாம். அப்பப்பா….. எவ்வளவு பூ… இதை எழுதும்.போது கூட எனக்கு வாசனை அடிக்கிறது. என் பூ தொடுக்கும் ஆர்வம் இங்கிருந்து தான் தொடங்கியது. நீண்ட பின்னலில், எங்கள் வீட்டு நித்யமல்லி… அம்மாவின் கொண்டையில், காலில் வாழை நார் மாட்டி எசைத்த அரை வட்ட வேணி…

குளியலரையை அடுத்து ஸ்டோர் ரூம். குளித்து விட்டு உடை மாற்றவும், பல சரக்கு சாமான்( இந்நாள் grocery😁) வைக்கவும் கெஸ்ட் ரூம் எல்லாம் இது தான்.

அதை தாண்டினால் தாழ்வாரம். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் எனக்கு இங்கு உட்கார வைத்து தான் சாப்பாடு. அன்றும் இன்றும் எனக்கு அது தப்பாக படவில்லை.

அங்கிருந்து 2 படிகள் ஏறினால் சமயலறை. இன்றைய பெரிய மாஸ்டர் பெட் ரூம் அளவு. பூஜை அறையும் டைனிங் ஏரியா வும் எல்லாம் இதற்குள்.

தளிகை பண்ற உள்…(ஐயங்கார் வழக்கு சொல்)…

இந்த நாள் இனிய நாள் …

வழங்குபவர் தென்கச்சி சுவாமிநாதன்…

ட்ரான்சிஸ்டரில் கேட்டுக் கொண்டே எல்லா படங்களுக்கும் அம்மாவும் அப்பாவும், பவழமல்லி மாலை கோர்ப்பார்கள். (புழக்கடையில் பெரிய மரம்)கருவேப்பிலை மரமும் இருந்தது. இந்த த.உள்ளிலிருந்து பார்த்தால் வாசல் தெரியும். வாசலில் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு.தாழ்வாரத்தில்ருந்து வலப் பக்கமாக போனால் ஒரு சந்து போல வந்து புழக்கடையில் விரியும். அங்கு தான் டாய்லெட். 2007 வரை கதவு கூட இல்லாத கழிப்பறை. வெளியே வாளியில் தண்ணீர். யாரேனும் வரும் சத்தம் கேட்டால், உள்ளிருப்பவர் கணைக்க வேண்டும் 🤣🤣😂😂 கதவு இல்லாதது எனக்கு மட்டும் அல்ல என் பெண்களுக்கும் கூட அசௌகர்யமாக பட்டதில்லை.இது தான் எங்கள் வீட்டின் வரைபடம் !!!ஒன்ன பாக்காம ஒன் கையால மருந்து சாப்பிடாம போய்டுவேனோ… என்றும், இனிமே கை குழந்தையை தூக்கிண்டு பாம்பே லேந்து வந்து அலையாதே… நான் போய்ட்டேன்னு தகவல் வந்தப்பரம் வந்தா போறும் என்று சொன்ன அப்பாவும்,கற்பாகம்பாள் காலடில போகணும்,இனிமே நானும் ஒனக்கு ஒரு பொண்ணு தானே சீனு? என்று கேட்ட அம்மாவும்… இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை மிக மிக நிறைவானது. அவர்கள் பெற்ற நானும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். போதும் என்ற பொன்னான மனம் எனக்குள் விதைக்கப் பெற்றவள். வாடகை நிலுவை தொகை 5 லட்சத்து சொச்சமும் கட்டி விட்டு, வீட்டையும் கோவிலுக்கு திருப்பி கொடுத்துவிட்டு வரும் போது மனதில் எந்த வித சலனமும் இல்லை. மாறாக பெரும் நிம்மதி. யாரிடமும் காசு வாங்காமல், sub let செய்யாமல், அப்பா அம்மா பெயரை காப்பாற்றி விட்டேன். அதற்கு முழு நன்றி என் கணவருக்கு. அவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.கடந்த 9ஆம் தேதி , நர்த்தன விநாயகருக்கு ஒரு சதிர் காய் போட்டு விட்டு , கபாலிக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வீட்டை ஒப்படைத்தேன்.கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?அதிலிருந்து 2 வீடு தள்ளி என்னோட வீடு…….”.இருந்தது”#மைலாப்பூர் #கபாலி

சந்தாரா …………..எப்பிடி முடிகிறது இவர்களால் ?????

வாரக் கிழமைகளிலோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ, மாதத்தில் ஒரு முறையோ உபவாசம் இருக்கும் போதே, எங்கோ ஒரு மூலையில்,

” இன்று உபவாசம், இதை வாயில் போட்டுக்கொள்ள கூடாது ” என்று மனது எச்சரித்து, நச்சரித்துக்கொண்டே இருக்கிறது.
அன்ன, ஆகாரம் இல்லாமல் எப்படி இதனை நாள் இருக்க முடிகிறது ?
எனக்கு தெரிந்தவர் ஒருவரது மாமியார், தன்  சுயநினைவோடு எடுத்த முடிவு, என்னை உலுக்கியது.
நவம்பர் பதினாறாம் தேதி, ” உங்கள் பிரார்த்தனையுடன் வெற்றிகரமான ஏழாவது நாள் சந்தாரா என்று எழுதி அவரின் மாமியார் கட்டிலின் ஒரு மூலையில் சம்மணம் இட்டு உட்காந்திருப்பதை படம் பிடித்து எனக்கு அனுப்பியிருந்தார்.
அட, சந்தாராவா  …? இதென்ன என்று வலைதளத்தில் தேடிய போது , அதிர்ந்தேன் !
ஜைன மதத்தவர்களின்  சமய வழக்கங்களில் ஒன்று தான் இந்த சந்தாரா.
அதாவது, சாகும் வரை உண்ணாவிரதம்.
அவர்கள் சுய நினைவோடு எடுக்கும் முடிவு தான். இந்த பிறவியில், தனது கடமைகள் முடிந்து விட்டன என்று தோன்றினால், தான் இந்த முடிவை எடுக்க முற்படுகிறார்கள்
இது தற்கொலை கிடையாது ஏனெனில்  அது  க்ஷண நேரத்தில் எடுக்கும் முடிவு. இது ஆலோசித்து  எடுப்பது …
 
எவ்வளவு மனஉறுதி வேண்டும் இந்த முடிவுக்கு வருவதற்கு. பிறவி எடுத்ததன் பயன் முடிந்தால் இந்த முடிவுக்கு வரலாம் என அவர்கள் மதம் கூறுகிறது. அல்லது, நோயின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஒருவரும் இந்த முடிவை எடுக்கலாமாம். ஒரு வருடத்தில் இரனூருக்கும் மேல் பட்டவர்கள் இந்த சந்தாராவை மேற்கொள்கிறார்கள்.

இதற்க்கு இணையாக இந்து மதத்தில் ” ப்ரயோபவேசா ” அனுசரிக்கப்படுகிறது. அதே தத்துவம் தான், பொறுப்புகளை முடித்தவரும், வாழ்ந்தது போதும் என்று நினைப்பவரும், இந்த முடிவுக்கு வருவார்களாம்.
பரீக்ஷித் மகாராஜா இதை நடைமுறைபடுத்திய பொது, அவருக்கு பாகவத புராணத்தை விளக்கினாராம், வியாசரின் மகனான சுகன்.
இதெல்லாம் படித்து அசை போட்டுக்கொண்டிருக்கும் போதே அந்த அம்மையார் பதினொரு நாள் உண்ணாவிரதத்தை எட்டியிருந்தார்.
மெது மெதுவாக, நம் கண் முன்னே ஒருவர்  மரணத்தை தழுவுவது மயிர்க்கூச்சல் ஏற்படுத்துகிற விஷயம்.

உடல் நிலை சரியில்லாமல், நம் கண் முன்னே ஒருவர் மெல்ல மெல்ல உயிரை விடுவதே வேதனையாக இருக்கிறது…இதில், வேண்டுமென்றே இப்படி முடிவு செய்ய வேண்டுமானால், அவர்களின் மனோ திடத்தை என்னென்று சொல்வது. அவர்களின் மகள், மகன், கணவர், அவர்களின் மன நிலை என்னவாக இருக்கும் ? ஒரு வேளை  இப்பிடி ஒரு மனிதரோடு வாழ்ந்தவர்களும் நல்ல மன உறுதி படைத்தவர்களாக இருப்பார்களோ ?
என் தாயார் படுக்கையில் இருந்த பொது, முதல் சில வருடங்கள் அழுதேன், முட்டிக்கொண்டு கதறினேன், அவளின், தவிப்பை பார்க்க முடியாதவளாய்,
” அம்மாவை அழைசுக்கோ பெருமாளே ” என்று புலம்பியிருக்கிறேன்
பின் ஒரு நாள் திடீரென்று ஒரு ஞானோதயம் ….நான் யார், கடவுளுக்கு ஆணையிட….? என்று.
பின் சற்று தொலைவிலிருந்து பார்க்க தொடங்கினேன்….
” அது அவள் கர்மா அவள் அனுபவிக்கிறாள் ” என்று என்னை தேற்றிக்கொண்டேன்.
அவள் மூலம் இந்த உலகத்தில் வந்ததால், எனக்கு வலிக்கிறது. அவ்வளவு தான். மற்றபடி அவள் வலியை  நான் எந்த விதத்திலும் மற்ற முடியாது என்பது புரிந்தது.
என் கடமையை மட்டும் செய்து விட்டு மற்றவற்றை பெருமாளிடம் விட்டேன்.
அதெல்லாம் சொல்லுவது சுலபம் அனு ….கடைபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.
ஒப்புக்கொள்கிறேன் கஷ்டம் தான். ஆனால், முனைந்து, பழகிநோமானால், அதில் கிடைக்கும் நிம்மதி அனுபவித்தால்தான் புரியும்.
எனக்கு புரிந்தது. !
அம்மா என்னை விட்டு பிரிவதற்கு சில மணி நேரங்கள் முன்பு, அவளை, உச்சி முகர்ந்து, நான் சௌக்கியமாக இருப்பதையும், என் கணவர் அவள் கண்ட கனவு போல் நல்ல நிலைமையில் இருப்பதையும், என் மகள்கள் நன்றாக வளர்வதையும், நன்றாக படிப்பதையும் அவள் காதுகளில் கூறினேன்.
” அம்மா, நீ உன் கடமைகளெல்லாம் முடிச்சுட்டே, இந்த சரீரத்தை விட்டுட்டு கிளம்பு மா ” என்று கூறி முத்தமிட்டுவிட்டு, சற்று நேரம் அவளை பார்துக்கொண்டிருந்து விட்டு படுத்தேன். அடுத்த சில மணி நேரங்களில் அவள் உயிர் பிரிந்தது.
இதைத் தான், பகவன் கிருஷ்ணர்,
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் தவா  சர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹா 
 
என்கிறார்.
நேற்று சாயந்திரம் நாலே முக்கால் மணிக்கு, அந்த அம்மணி உயிர் நீற்றார் என்று என் தோழர் எனக்கு தகவல் அனுப்பினார் .
அல்ப விஷயங்களுக்காக, நாம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் வெறுப்பு காட்டாமல் இருப்போமா ?