Tag Archives: புற்றுநோய்

கதை சொல்லும் பென்சில் ✏️

வாட்ஸ் ஆப் கதை படிசீங்களா மக்களே ?

ஆப்பு வைக்கும் வாட்ஸ் ஆப்பு சில சமயங்கள்ல செம்ம மெசேஜ் கூட கொண்டுவரும்க!

அப்பிடித்தான் எனக்கும் ஒண்ணு வந்துது . கன்னடத்தில – போச்சு போ இனிமே கன்னடத்தில எழுதி கொல்ல போறியா னு நீங்க பதர்றது தெரியுது. இல்ல , கண்டிப்பா இல்ல .

நாம் சுணங்கி இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட message கள் நமக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றன. இதுதான் ஆத்மாவுடனான உரையாடலோ?

பென்சில் பாக்சில் உபயோகித்து தேய்ந்து போன பென்சில் ஒன்று, புது பென்சிலை வரவேற்கிறது. எனக்கு அனுபவத்தில் தெரிந்த விஷயங்கள. உனக்கு சொல்கிறேன் கேள் என்றது..

முதலாவதாக, நீ தனியாக செயல்படுவதில்லை . உன்னை ஒருவர் கையில் எடுத்தால் தான் செயல் பட முடியும்.

இரண்டாவது. உன்னுடைய வெளியில் இருக்கும் மர பாகத்தை காட்டிலும்

 

உள்ளே உள்ள lead (ஈயம்) தான்  மிக முக்யம்.

மூன்றாவது, நீ அவ்வப்போது, சீவப்படுவாய்…எப்போதெல்லாம் நீ மழுங்கி போகிறாயா அப்போதெல்லாம் நீ சீவப் படுவாய். தயாராக இரு.
நான்காவது,மிக முக்கியமானது, நீ எழுதும் போது  பிழைகள் ஏற்படும். கடைசியில் இருக்கும் ரப்பர் கொண்டு அழித்து விட்டு மீண்டும் எழுது.
இத்தனை நாளும்  எழுதி எழுதி தேய்ந்து போன பென்சில், புது பென்சிலுக்கு குடுக்கும் அறிவுரை மட்டும் இல்லை. வாழ்க்கை பாடம் நமக்கும் இருக்கு இதில். இந்த வாழ்க்கை பாடங்களை அவ்வப்போது மறப்பது தான் நம் துன்பத்திற்கும், நிம்மதி இல்லாமைக்கு காரணம்.
முதலாவதாக நீயாக எழுத முடியாது, ஒருவர் உன்னை கையில் எடுக்க வேண்டும். அவன் தான் பரமாத்மா. அவன் நம்மை தாங்குகிறான். நம்மை கையில் எடுத்து எழுதுகிறான். அவன் எழுத்து தப்பாது என்று நம்பு. அந்த பரமனின் கையில் நான் ஒரு ஆயுதம் என்பதை மறக்க கூடாது.  பகவத் கீதையில் பதினோராவது அத்தியாயத்தில் முப்பத்தி மூன்றாவது செய்யுளில், கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறான்,
நிமித்த மாத்திரம் ……
“எதிரில் மாண்டதாக நீ நினைப்பவர் எல்லோரும் என்னால் ஏற்க்கனவே வீழ்த்தப்பட்டனர். நீ எனது செயலுக்கு ஒரு கருவி ” என்று. ஹஸ்தினாபுரம் தர்மத்தினால் ஆளப் பட வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன் என்று.
போர் முடிந்த பின், அர்ஜுனன் கூறினானாம்  நான் தான் அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்று.பீமன் தான் அதை விட அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்றானாம். அதனால் கண்ணன் இருவரையும் போர்க் களத்திற்கு அழைத்து சென்றானாம். அங்கு கடோதகஜனின் மகன் பார்பரீகனை கண்டு,  அவனிடம் அர்ஜுனனின் அம்புகளை அதிகம் பார்த்தாயா, பீமனின் கதையை அதிகம் பார்த்தாயா என்று கண்ணன் கேட்க, கண்ணனின் சக்கரத்தை தான் நாலா பக்கமும் சுழல்வதை பார்த்தேன் என்றானாம், பார்பரீகன் . நம் வாழ்க்கையும் அதே தான் நண்பர்களே. “நான்” ” எனது” என்பதை அழித்து, “நீ” “உனது” என கண்ணன் காலடியில் சமர்ப்பித்து பாருங்கள், அந்த அனுபவம் பேரானந்தம். ராம நாமமும் சிவ நாமமும் இதற்க்கு தான். நம்மை நாமே ஞாபகப்படுத்திக்கொள்ள.
நம்,
சுகம் – துக்கம்
லாபம் – நஷ்டம்
ஜெயம் – அபஜெயம்
மான – அவமானம்
எல்லாம் அவன் அருளால் நடக்கிறது. அப்படியென்றால், இதில் என் பங்கு /பாத்திரம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் தாசன், அவர் ஸ்வாமி என்று உணர்வது தான் நம் பாத்திரம். நான் எனும் அஹம்காரம் இல்லாத போது , நாம் பணிவாகிறோம். இப்போது அமெரிக்காவில் இருப்பதில், நிறைய நேரம் கையில். பகல் பொழுதெல்லாம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அதில் முகுந்த மாலா கேட்ட போது , ஒரு புரந்தர தாசர் க்ரித்தியை குறிப்பிட்டார். இன்னு தய பாராதே தாசன மேலே …
அதில் ஒரு வரி,
நானு நன்னது எம்ப நரக தொலகே பித்து
நீனே கதி எந்து நம்பித தாசன மேலே
நான் என்னது என்ற எண்ணம் என்னை நரகத்தில் தள்ளியது , நீயே கத்தி என்று நம்பும் இந்த டடன் மேலே தயை வராதா ……
என்ன ஒரு வீரியமான வார்த்தைகள். கண்ணில் நீர் பெருகிக் கொண்டே இருக்கிறது

 

இரண்டாவது பாடம்  உன் வெளிப்புறத்தை விட உள்ளே உள்ள ஆத்மா  முக்கியம். நீ உடுக்கும் ஆடை யோ, உண்ணும் உணவோ, வசிக்கும் வீடோ, பொன்னோ பொருளோ நீ அல்ல. உன் அந்தராத்மாவும் அதில் நீ அனுபவிக்க கூடிய நிம்மதியும் தான் நீ. உள்ளே புழுக்கம் அதிகமாக இருந்து வெளியே நீ ஏ.சி யில் இருந்தால் என்ன பயன். சரி, இந்த நிம்மதி எங்கே கிடைக்கும் ? கடைகளில் கிடைக்க கூடிய வஸ்து  இல்லையே. விலை கொடுத்து வாங்கக்கூடியது இல்லையே. காசு பணம் இருந்தால் மருந்து வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது அல்லவா? இந்த நிம்மதியை வாங்க காசு பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். உன் பாத கமலங்களில் என்னை அறப்பணித்துவிட்டேன், காப்பாற்று என்று சரணாகதி அடைந்தால் போதும், அவன் தந்து விடுவான் இந்த நிம்மதியை.

மூன்றாவதாக…. நாம் அவ்வப்போது சீவப் படுகிறோம். எப்போதெல்லாம் மழுங்கி போகிறோமோ அப்போதெல்லாம் சீவப் படுகிறோம். விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தப்படுகிறோம். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்காதே.
நஷ்டங்கள் வரும்
உடல் நலம் கெடும்
அழுவோம்
துடிப்போம்
வருந்துவோம்
இதெல்லாம் யார்க்கு இல்லை ? ராமாவதாரத்தில், காட்டுக்கு சென்று அவர் படாத துன்பமா ? கிருஷ்ணாவதாரத்தில் அவர் பிறந்ததே, சிறைச்சாலையில். ராமகிருஷ்ணா பரமஹம்சர், எப்பேர்ப்பட்ட மஹான், அவருக்கு ஏன் புற்று நோய்  வந்தது.  எந்த ஒரு பிறப்பும் துக்கத்திலிருந்து தப்பிப்பதில்லை. இருவர் மட்டுமே இதற்க்கு விலக்கு , ஒன்று இன்னும் பிறவாத குழந்தை, இன்னொன்று, மடிந்து போனவர். கடலும், மலைகளும், ஆறுகளும், இருக்கும் வரை துக்கமும் இருக்கும். சுகமும் துக்கமும் மாறி மாறி வரும். சுவாமி விவேகானந்தரை ஒரு முறை ஒரு குரங்கு கூட்டம் தாக்க வந்ததாம். அவர் பயந்து ஓடாமல், நின்று, எதிர்கொண்டாராம். அவை அதை எதிர் பாராததால், மிரண்டு பின் வாங்கின. நம் பிராரப்த கர்மாக்களிலிருந்து தப்பிக்க முடியாது. என்னுடன் இரு பெருமாளே, என்னை கை பிடித்து கரை சேர்த்து விடு என்று அவன் காலை பற்றுங்கள்.
கடைசியாக தப்பு செய்வது மனித குணம் அதை மன்னிப்பது தெய்வ குணம். தப்பை திருத்திக்கொள்வது மிக முக்கியம். நாம் மன்னிக்க படவேண்டும் என்று ஆணித்தனமாக எண்ணும்  போது, மன்னிப்பதற்கு தயாராக இருப்பதும்  முக்கியம்.  கசப்பானவற்றை அழித்து விட்டு முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் நிம்மதிக்காகவாவது.

நீண்ட பதிவு. ஆனால்  நான் அனுபவித்ததை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையில், அந்த ஆடியோ பதிவில் வந்ததோடு, என் சரக்கையும் சேர்த்து உங்களுக்கு கொடுத்தேன். பொறுமையாக இது வரை படித்ததற்கு நன்றி.
கண்ணன் நம் எல்லோரையும் காக்கட்டும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண  கிருஷ்ண  ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே ……

 

சோதனை

என் கண்களில் நீர் முட்டிக்கொண்டு நிற்கிறது. தொண்டை குழியில் ஒரு அடைப்பு…

இயலாமை, கோபம், வருத்தம், நம்பிக்கை, பரிதவிப்பு, ஏமாற்றம், கருணை, எல்லாம் ஒரு சேர ஒரே சமயத்தில் என் மனதை ஆட்க்கொண்டு உலுக்கி எடுக்கிறது.

ஆனால் என் வயதின் காரணமோ, அல்லது நம்பிக்கையின் காரணமோ, அல்லது பக்குவத்தின் காரணமோ …. என்னை ஒரு புறம் சமாதான படுத்தவும் செய்கிறது.

சின்ன துன்பம் வந்தாலே துவண்டு விடுபவர்களின் மத்தியில் என் தோழி ஒரு பெரிய போராட்டத்தை ஐந்து வருடங்களாக போராடி வருகிறாள்.

முதல் முதலாக புற்று நோய் கண்டறிய பட்ட போது என் தோள்களில் சாய்ந்து அழுத அவளை
இதுவும் கடந்து போகும் என்று தேற்றினேனே..

புற்று நோய்க்கு சவால் விடுத்து தன் நம்பிக்கையை மட்டுமே முதலீடாக போட்டு நடக்கும் போராட்டம்.

தன் மகனுக்கு வேண்டியாவது தான் வாழ வேண்டும் என்று தனக்கு தானே உர்ச்சாகமளிதுக்கொண்டு வாழ்கிறாள்…
ஒரு மாதமாக கண் பார்வை இல்லை… உபயம்: நோயின் வீரியம்…

வாழ ஆசை.
உண்ண ஆசை
உடுக்க ஆசை
அலங்கரித்துக்கொள்ள ஆசை
நண்பர்களுடன் நேரம் செலவிட ஆசை.
பண்டிகைகளை விடாமல் அழகாக செய்ய ஆசை..

அதனால் தான் அந்நோய்க்கு உன்னிடம் இதனை ஆசையோ ?

சீக்கிரம் உன் பார்வை நேராகி, உன் உடல் நிலை தேறி
நீ இப்போது இருக்கும் கொடிய வேலிக்குள்ளிருந்து மீண்டு வர நான் ஓயாமல் அந்த கடவுளை பிரார்த்திக்கிறேன்…

உனக்கு பிடித்த தாளிச்சு கொட்டிய தயிர் சாதம் என் கையால் தயார் செய்து கொடுக்கிறேன்…
சீக்கிரம் வா………………..
என் இதயம் கனக்கிறது பெண்ணே..

என் பிரார்த்தனைகள் வீண் போகாது …..அவள் பிரார்த்தனைகளும் தான்….

பச்சை மிளகாய் கற்றுத்தந்த பாடம்……

தோழி, அக்கா , மாமி, ஆண்ட்டி …எப்பிடி கூப்பிடுவது அவர்களை?

பெயர் கீதா
புதிதாக எங்கள் அபார்ட்மென்டில் குடித்தினம் வந்திருக்கிறார்கள்.
தமிழ் பேசுவதால், ஒரு அலாதி அன்யோன்யம் ஏற்ப்பட்டு, நெருக்கமாக பழக ஆரம்பித்திருக்கிறோம்….
என்னை விட 13 வயது பெரியவர்கள்..பெரிய மகளுக்கு திருமணம் முடித்துவிட்டார்…
வெள்ளந்தியான மனசு, எல்லோரையும் வாய் நிறைய பாராட்டும் குணம், மற்றவர்களிடம் இருக்கும் திறமையை, வியந்து வியந்து பேசுகிறார்….
என்னையும் தான்…!!! [ அதானே பார்த்தேன், இல்லேனா நீ ஏன் அவரை பற்றி எழுத போகிறாய் என்று கேட்பவர்கள் கேட்கட்டும் ] ……
ஏதோ, சத் விஷயங்களும், சத்தான உணவையும் பரிமாறிக் கொண்டிருக்கிறோம் இந்த இரு வாரங்களாக.
நான் போட்டுக் கொடுத்த டப்பாவில், தான் நேற்று தயிர் வடை செய்து எடுத்து வந்திருந்தார் அவர்.
அருமையாக இருந்தது, மிதமான காரம், புளிப்பில்லாத தயிர், நல்ல அலங்காரம்….எல்லாம்…..
ஒன்று தின்றுவிட்டு, அடுத்ததை குற்ற உணர்வுடன் தட்டில் வைத்து, பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு,
” போனால் போகட்டும் இதெல்லாம் என்ன தினமுமா தின்ன கிடைக்கிறது ” என்று என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டு [????] அடுத்ததையும் வெட்டினேன்…
நடுவிலேயே, வாயில் ஒரு அரைபடாத பச்சை மிளகாய் துண்டு….. சரி தயிர் வடை தான் சாதுவாக இருக்கிறதே என்று, பச்சை மிளகாய் கடித்தது கடித்ததாகவே இருக்கட்டும் என்று மேலும் கடித்தேன் [ திமிரு தான் வேற என்ன ]?
விக்கி திக்கி, தண்ணீர் குடித்து ஒரு வழி ஆனேன்….
ஆனால், யோசித்து பார்த்தல், பச்சை மிளகாய் நல்ல பாடம் சொல்லிக்கொடுத்தது ……
சுவையான உணவின் நடுவில் நாவில் அகப்படும் பச்சை மிளகாய் போல தான் வாழ்க்கையில் சில சம்பவங்கள் இல்லையா…..?
எதிர்பாராத சமயத்தில், நம்மை கதி கலங்கக்செய்யும் நிகழ்வுகள்…..
அப்பிடி, கதி கலங்க செய்து, அதை எதிர்க்கொண்டு, மீண்டு எழுந்து, தன்னை சுதாரித்துக்கொண்டு, தன்னையும், தன்னை சுற்றி உள்ளவர்களையும் எதார்த்தமாக வாழச் செய்து,
உள்ளே அழுது, வெளியே சிரித்து …..இந்த ஜென்மத்திலேயே, இரண்டாம் முறை பிறந்து வாழ்ந்துக்கொண்டிருப்பவர்கள் நினைவுக்கு வந்தார்கள்…..
தோழி ஒருத்தி, தன தகப்பனாரின் எண்பதாவது வயது [ சதாபிஷேக ] வைபவத்திற்காக தயாராகிக்கொண்டிருந்த சமயம்,
தன பிள்ளையின் பள்ளியில் மீட்டிங் என்பதால், தன் கணவர் போவதாக சொன்னதால், தான் வேலைக்கு சென்றாள் ….
வீட்டிலிருந்து கிளம்பின கணவன், பொட்டலமாக திரும்பி வந்தான்…..
விபத்தில் விழுந்து விட்டான் என்று தெரிந்த நேரத்திலிரிந்து, அவன் பெற்றோருடனும், அவளுடனும், இருந்து
‘ ஏன் ஏன் இப்பிடி ஆகா வேண்டும் ” என்று யோசித்து யோசித்து, பதில் புரியாமல் போக…. அவர்களுக்கு, பலமாக இருப்பது மட்டுமே இப்போது நான் செய்ய வேண்டியது என்று தோன்றிற்று ….செய்தேன்….
பிள்ளைகள் இருவரும் சின்னன் சிறியவர்கள்….. மூத்தவள் ஆறிலும், மகன் இரண்டிலும்…..
ஆனால் எதுவும் நிற்கவில்லை…..காலம் ஓடிக்கொண்டிருக்கிறது….பிள்ளைகள் வளர்ந்து விட்டார்கள்…
அவளை பார்க்கும் போதெல்லாம் எட்டிப்பார்க்கும் மேலே சொன்ன கேள்வி…..ஆனால் அவளுக்கு தேவை என் அனுதாபம் இல்லை….. என் சப்போர்ட் தான்…
ஏதோ இன்று வரை கொடுத்துக்கொண்டிருக்கிறேன் அதை……..
இன்னொரு தோழி, தனக்கு எது வரக்கூடாது என்று அடிக்கடி சொல்வாளோ அதால் பாதிக்க பட்டு…. அழுது, புலம்பி, பிரார்த்தனை செய்து, இப்போது, நல்ல படியாக இருக்கிறாள்….
புற்று நோய் இன்று எல்லோர்க்கும் வருகிறது. எவ்வளவோ, விழிப்புணர்வு இருந்தாலும், நமக்கு நெருக்கமானவர்களுக்கு வந்தால், முகத்தில் அறைந்தார் போல் இருக்கிறது….
அப்படிதான் இருந்தது எனக்கும்….
என்ன சொல்லி தேற்றுவது அவளை???….புரியாமல் விழித்தேன்.
ஆனாலும், அவளை தேற்றுவதற்காக நான் தைரியமாக தான் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து, அவளை பார்த்து, கட்டிக்கொண்டு, [ கட்டி பிடி வைத்தியம் தான் வேறென்ன ???]
‘ஆச்சு முடிஞ்சு போச்சு, இனி புது பிறவி, நல்லதையே நினை…ஏதோ இப்போதே தெரிந்ததே, என்று சந்தோஷப்படு ” …. என்று கூறி தேற்றி …
நன்றாக உள்ளதாக, பழயபடி நீ வளைய வருவதாக நினதுக்கொள் ….விடாது, சிந்தனை செய் என்று கூறி….. கிரேயடிவ் விசுவலைசேஷன் பற்றி நிறைய பேசி, தைரியம் ஊட்டினேன் ….
கொஞ்சம் கொஞ்சமாக, தேறி, நடு நடுவே தளர்ந்து, பின் நிமிர்ந்து, திரும்பவம் சறுக்கி, திரும்ப எழுந்து….. இப்போது தன்னை தானே தூக்கி நிறுதிக்கொண்டிருக்கிறாள் …..
வைத்தியம் முடிந்து, பாப் தலையுடன் என்னை பார்க்க வந்த போது …மகிழ்ச்சியாக இருந்தது……..
அனால் இதில் வித்யாசப் பட்டவர்களும் உண்டு…..
காக்கைக்கு தன குஞ்சு பொன் குஞ்சு என்பது பழமொழிக்காக மட்டுமோ என்ற தோன்றும் அவளை பார்க்கும் பொது…..
ஆட்டிசம் என்னும் குறை பாடுடன் பிறந்த தன மகனை வெளி உலகத்திற்கு அறிமுகபடுத்தக் கூட வெட்க்கப்படுபவள் ….
எப்பிடி முடிகிறது…. நாமே நம் குழந்தையை இந்த கண்ணோட்டத்தில் பார்த்தால்….உலகம் எப்படி பார்க்கும்….ஏன் சிந்திக்கவில்லை அவள்…
தன்னை பற்றி அவனே சரியாக உணராததால், அவன் செய்கைகள் அசாதாரணமாக தான் இருக்கும்…. [தெரிந்திருந்தால் செய்வானா???]
அவனை உடலாலும் துன்புறுத்தி …தானும் தன்னை வேதனையில் ஆழ்திக்கொள்கிறாள் ………..
நாம் இறைவனால் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் …அதனால் தான் என்னை இந்த குழந்தைகளுக்கு தாயாக நியமித்திருக்கிறான் என்று ஏன் தோன்றவில்லை…
அவன் மட்டும் ‘ஸ்பெஷல் குழந்தை ‘ இல்லை ..இவளும் தான் ‘ஸ்பெஷல் தாய் ‘
தன்னால் முடிந்ததை அவனுக்கு புகட்டி… நல்லதே நினைத்தால் நல்லது நடக்கும் என்று ஏன் தோன்றவில்லை…..
என் கேள்விகளுக்கு பதில் கிடைப்பது கடினம்…….அவளுக்குள் நெகடிவிடி ஊறிவிட்டது……மாற்றிக்கொள்ளவும் தயாரில்லை…..
யாருக்குதான் பிரச்சனைகள் இல்லை… சின்னதும் பெரிசுமாக எவ்வளோ இருக்கின்றன…
எதற்கும் வாடாமல், தைரியமாக வாழ்க்கையை எதிகொள்வதில் இருக்கிறது சாமர்த்தியம்…
நான் எதையும் புதிதாக சொல்லவில்லை… சொன்னவர்களின் வார்த்தைகள் பசுமரத்து ஆணிபோல் பதிந்ததால், அதை நடை முறை படுத்துவதற்கு முற்படுகிறேன், வெற்றியும் அடைகிறேன் …..
கவிஞர் கண்ணதாசனின் வரிகளில் ………………..
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்ல
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்ஒவ்வொரு வார்த்தையையும் மனதில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்…………

பச்சை மிளகாயை கடித்தால் என்ன, ஒரு குலாப் ஜாமூனோ, மைசூர் பாக்கோ கிடைக்கமலா போய்விடும் ?
இது தான் நான் வாழ்க்கையை பார்க்கும் விதம்……..