Tag Archives: பொழுதுபோக்கு

காதலின் தீபம் ஒன்று….

காதலின் தீபம் ஒன்று

ஏற்றினாளே என் நெஞ்சில்

ஊடலில் வந்த சொந்தம்

கூடலில் கண்ட இன்பம்

மயக்கமென்ன… காதல் வாழ்க !!!!

பஞ்சு அருணாசலம் எழுதி, இசை ஞானி மெட்டு போட, எஸ்.பி.பி தன் குரலால் என்னை /நம்மை இன்று வரை கிறங்கடிக்க, மிகை இல்லாத body language இல் ரஜினிகாந்த். தம்பிக்கு எந்த ஊரு படத்தில் இந்த காட்சி. பாடலின் தொடக்கம் சுமதி என்று மரத்தில் பொறிக்கப் பட்டிருக்கும் பெயருக்கு முத்தமிடுவது போல் துடங்கும். (1984 இல் வந்த படம். இன்று போல் கதாநாயகிகளை/ கதாநாயகன்களை கடித்து துப்புவதெல்லாம் அப்போது இல்லை என சொல்லலாம்).

அந்த பாடல் முழுவதுமே, பான்ட் பாக்கெட்டில் தன் கைகளை வீட்டுக்கு கொண்டு, இங்கும் அங்கும் நடந்து நடந்து பாடியிருப்பார் ரஜினி. மாதவியும் நிறைய யோசனையில் ஆழ்ந்து இருப்பார்.

ஒன்று தான் எண்ணம் என்றால்

உறவு தான் ராகமே…

அப்பிடி ஒரு காதல் இன்று பார்க்க முடியுமா ?

என்னை நான் தேடித் தேடி…உன்னிடம் கண்டுகொண்டேன்….

அடாடா… சூப்பர் வரிகள்…… ஆனால் இன்று…

அது சரி உனக்கென்ன வந்தது இன்று என்று நீங்கள் கேட்பதில் தவறில்லை. ஏங்க சுத்தி முத்தி எங்க பாத்தாலும் சிவப்பு கலர்… ஹார்ட்டு…. ரெட்டை மோதிரம்…சிவப்பு ரோஜா… அப்பறம் ஏங்க நா அதை பத்தி பேச மாட்டேன்.

ஆனா இதுக்கெல்லாம் முக்கியமான காரணம் இன்று காலை நடை பயிற்சிக்கு நான் போன போது கண்டு தொலைத்த கண் கொள்ளா காட்சிதாங்க….

பயிற்சியின் நடுவே 15 நிமிட தியானம் செய்வது வழக்கம்.

இன்றும் உட்கார்ந்தேன்…பக்கத்து பெஞ்சில் 3 யுவதிகள். அந்த காலை பொழுதிலும், நன்றாக ஒப்பனை செய்து கொண்டு, பளிச் பளிச்…..நடுவில் இருந்த பெண் மட்டும் முகம் காட்டாமல், வலது புறம் இருந்த பெண்ணின் தோள் மீது சாய்ந்திருந்தாள். அவளும் இவள் கன்னம் தட்டி சமாதான படுத்திக் கொண்திருந்தாள். சரி நம் வேலையை பாப்போம் என கார்டு எடுத்து காதில் சொருகி, தியான app ஐ தேடி, அதை ஆரம்பித்தேன்.

இதமான பெண் குரல்,சல சலக்கும் நீரோடையின் ஒலியுடன், பயிற்சியாளர் பெண்மணி எனக்கு, ஆணைகள் பிறப்பித்தாள்… மூக்கு வழியாக மூச்சை இழுத்து, வாய் வழியாக சில முறை விட்ட பின்பு, இதயத்தை தொட்டுக் கொண்டு, அதற்கு நன்றி சொல்ல சொன்னாள். அரை நூற்றாண்டாக அடித்துக் கொண்டிருக்கிறாய், யப்பா சாமி, நல்ல படியாக தொடர்ந்து அடி, இப்போதைக்கு நின்னு கின்னு தொலைக்காதே என்று செல்லமாக சொல்லிவிட்டு..பெண் பயிற்சியாளர் சொன்னது போல், சுய மேம்பாட்டு வரிகள்….

ஐ ஆம் ஹாப்பி

ஐ ஆம் ஹெலத்தி

ஐ ஆம் அட் பீஸ்…

எங்கத்த பீஸ்… பக்கத்தில் விசும்பல் சத்தம். நம்ம நடு நாயக பொண்ணு தாங்க. கண்ணை திறக்க கூடாது என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டு, உலா போன எண்ண ஓட்டங்களை, லகான் போட்டு, கட்டி இழுத்து வந்து மீண்டும்,

ஐ ஆம் ஹாப்பி…என்று ஆரம்பித்தால், சள சள என பேச்சு குரல். சரி இன்னக்கி தியானம் அம்பேல் என்று தெரிந்ததும், கண்ணை திறந்து பக்கத்தில் பார்த்தேன். அப்பிடியே தலை முடியில் பாத்தி கட்டி விட்டாற்போல ஒரு வெட்டு, அதுக்கு ஒரு கலர், (நான் சின்னவளாக இருக்கும்போது எண்ணெய் தடவ வழியில்லாமல் இருப்பவர்கள் தலை இப்படி தான் இருக்கும்… அது அப்போ ‘செம்பட்டை’ இப்போ ஹேர் கலரிங்). ஒரு விடலை… அழும் அந்த பெண்ணை சமாதான படுத்த கையை பிடித்து எழுப்பவதும், முகத்தை பார்க்க முற்படுவதுமாக. ஒரு வழியாக நம்ம ஹீரோயின் மனமிரங்கி கையை எடுத்து விட்டு தன் இருப்பிடம் விட்டு ஏழுந்தாள்.

யப்பே….சிவப்பு லிப்ஸ்டிக்… நன்றாக வெள்ளை பூச்சு முகத்தில்…

அட கொடுமையே… என்னவோ ரொம்ப வருத்தத்தில் இருக்கிறாள் என்று நினைத்ததெல்லாம், வீணானதே…

சும்மாவா…. அட பன்னி… அழுது என் தியானத்தை வேறு கலைத்தாயே…

அவன் கை கோர்த்துக்கொண்டு இன்னும் ரெண்டு பெஞ்சு தள்ளி போய் உட்கார்ந்தாள். கருமம்… ஒரு நீண்ட பெரு மூச்சு விட்டுவிட்டு இடத்தை காலி செய்தேன்.

காதல் மேல் எனக்கு வெறுப்பு இல்லை. இந்த வயதுக்கு வராத காதல்(அது காதல் தானா???) எரிச்சல் ஊட்டுகிறது. படிக்கும் பருவத்தில், ஏன் நல்ல நண்பர்களாக இருக்க கூடாது. நன்றாக படித்து, வேலையில் அமர்ந்து, சம்பாதித்து, தானும் பெருமை அடைந்து, பெற்றவர்களையும் பெருமை அடைய செய்து, எவ்வளவு இருக்கிறது…வெட்டி பொழுது போக்கும் இந்த விடலைகளை பார்த்தால் பத்திக் கொண்டு வருகிறது.

சமீபத்தில்தான் ‘ஊரி’ என்ற இந்திய ராணுவம் தொடர்பான படம் பார்த்தேன். இந்த செம்பட்டய கொண்டு மிலிடரயில் விட்டு விட வேண்டும். விடய காலையில் ஒரு பெண்ணிற்காக எழுந்து வந்தவனுக்கு, காலையில் மிலிட்டரி பள்ளியில் எழுந்து கிரௌண்டை சுத்தி ஓடுவது ஈஸி தானே…

பொறுப்பு என்ற ஒன்று இல்லை. இதில் ஆண் பெண் பேதமும் இல்லை.

சினிமாவில் காட்டுவது இல்லை வாழ்க்கை. ஏகப்பட்ட போராட்டங்கள் நிறைந்தது. பொறுப்புகள் கொண்டது. ஆணும் பெண்ணும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒரு தூண் போல நின்று, வாழ்க்கையை கொண்டு போக வேண்டியது. அந்த காதலில், பாசம், பரிவு, தியாகம், கோவம்,ஊடல்,கூடல்,தேடல், விட்டுக்கொடுத்தல், கண் முடித் தனமாக சப்பை கட்டுதல் இன்னும் இன்னும் எவ்வளவோ…

அந்த பொறுப்பற்ற ஜோடிகளை பார்த்த நொடியில் தோன்றியது தான் இந்த தலைப்பு.

எவ்வளவோ பாடல்கள் இருக்கும்போது ஏன் இந்த பாடல்… தெரியவில்லை. ஏளனமாக ஆக தான் இந்த தலைப்பை கொடுத்தேன்.

ஆனால் நல்ல காதல் வாழ்க.

காதலர் தின நல் வாழ்த்துக்கள்….