கண்னா கருமை நிற கண்ணா…என்று விஜயகுமாரி 50 களிலோ 60 களிலோ ஒரு படத்தில் பாடுவார். தான் கருப்பாக பிறந்துவிட்டதற்காக தன்னை எல்லோரும் வெறுப்பதாக.
அழகாக பிறந்த வாழைக்காய் அன்று என் கையில் அகப்பட்டு இந்த பாடலை பாடியது.
எல்லா நாட்களும் ஒரு போல இருந்து விடுவதில்லை. ஆனால் எனக்கு பிடிவாதம் அதிகம்… எவ்வளவு கஷ்டமான நாளாக இருந்தாலும், மண்டையை தலையணையில் சாய்க்கும் போது எனக்கு நானே சொல்லிக் கொள்வது…
நாளைய பொழுது நன்றாக விடியும் !!!!
சரி…வாழக்காய்க்கு வருவோம்….
முதல் நாள் முழுவதும் ஏன் ஏன்… என்று அவ்வப்பொழுது விடை தெரியாது நடக்கும் சம்பவங்களில் ஒன்று நடந்து, மனம் முழுவதும் துக்கம் பரவி , கண்களை மூடினால் மனம் பதறி, புரண்டு புரண்டு, கனத்த மனதுடன் எழுந்து, சமைக்க முற்ப்படும்போது தாளித்து கொட்டிய உளுத்தம்பருப்பு ஒரு நொடியில் கருத்து, உள்ளே போக வேண்டிய வாழைக்காய், உள்ளே பாதி வெளியே பாதி என்று விழுந்து, என்னவோ போங்களேன்…. கறுத்து .. நன்றாக வேகாமல், என்னவெல்லாம் ஆக முடியுமோ அவ்வளவு ஆயிற்று…. அதையும் விடாமல் தின்றுவிட்டோம் என்பது வேறு கதை.
ஆனால், அது தானே யதார்த்தம் ?
சில நாட்கள் இப்படியும் இருக்கும். இன்று நான் என்ன சமைத்தேன் பாருங்கள் என்று எப்போதும் ஒரு போல அழகாக அமைத்த தட்டில் எல்லாம் அழகாகவே காட்ட முடியுமா?
ஒரு நாள் தீயிந்து விட்ட வாழைக்காயையும் காட்டுவோம் என்று தோன்றியது.
பக்குவம் இல்லாதவர்களுக்கு, சோஷியல் மீடியா தான் நிஜம் என்று நம்பத் தோன்றும் . எல்லாமே அழகாக, அலங்கரிக்கப்பட்ட புகைப்படங்கள்.
ஆனால் இப்போது சிலர் அவ்வப்போது தெரிவிக்கிறார்கள், இந்த சோஷியல் மீடியாவை தாண்டி நானும் சராசரி மனித இனம் தான், என் வாழ்விலும் ஏற்ற இறக்கங்கள் உள்ளன, கண்ணீரும் கவலையும் உள்ளது, நாங்களும் கணவன் மனைவி சண்டைகள் போடுவோம், எங்கள் குழந்தைகளுக்கும் உடல் நலம் கெடும்,எங்களுக்கும் அடி சருக்கும், எங்களுக்கும் மூட் அவுட் ஆகும்,எங்கள் வாழ்விலும் ரோஜாக்கள் முட்களுடன் தான் உள்ளன.
தீயிந்து போவதோ, துக்கம் வருவதோ, உடைந்து போவதோ, எல்லோர் வாழ்விலும் நடக்கும்.
ஆனால் 2 நாள் துக்கம் கொண்டாடிவிட்டு, எழுந்து வேலையை பார்க்க வேண்டியதுதான். உனக்கென்ன, சொல்லி விட்டாய்…என்கிறீர்கள்… கேட்கிறது.ஆனால் உண்மையை சொல்லுங்கள். நீங்களும் அதை தானே செய்தீர்கள்/ செய்கிறீர்கள்.
அதான் அதே தான்……என் பாட்டி, எங்கள் காலனி நாகராஜன் மாமா, போன வாரம் மகனையும் மருமகளையும் பரி கொடுத்த பெற்றோர், (கல்யாணம் ஆகி இரண்டே மாதம் ஆன ஜோடி, ஒன்றாக உயிரை விட்டன)கணவனை பறி கொடுத்த என் தோழி,எல்லோரும் தங்களை ஆசுவாச படுத்திக்கொண்டு எழுந்து நடக்கிறார்கள்.நம் எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் அவ்வப்போது ஒரு ரிமைண்டர் தேவை படுகிறது. மகான்கள் , வாழ்வியல் நிபுணர்கள் சொல்லாததை ஒன்றும் நான் சொல்லி விடவில்லை. ஆனால் என் எழுத்து உங்களில் ஒருவருக்காவது ஆறுதல் அளித்தால் அது என் பாக்கியம்.