புருவத்தில் உள்ள ரோமத்தில் ஒன்றிரண்டு வெள்ளி கம்பிகள் எட்டிப் பார்க்கின்றன.
தலையிலோ முக்கால் வாசிக்கு மேல் வெள்ளி.
உடலோ அறு பட்டு அறு பட்டு துவண்டு தொய்ந்து, தளர்ந்து விட்டது.
மனமோ கேட்கவே வேண்டாம்.
தன்னைத் தவிர எல்லோருக்காகவும்
கவலைப் பட்டு, பதறி, பிரார்த்தித்து, சிரித்து, அழுது, ஒரு வழியானது.
நடு வயது வரும்போது, நின்று நிதானித்து திரும்பி பார்த்தால் ஒரு வித அசதி.
ஐம்பதில் எண்பது வாழ்ந்தது போல் ஒரு அயர்ச்சி.
ஈடு கொடுக்க முடியாத வேகத்தில் ஓடும் வாழ்க்கை துணை.
ஓரமாக உட்கார்ந்து உணவை அசை போடும் மாடாய், அசை போடும் போது,வியப்பு எஞ்சுகிறது.
எப்படி இவ்வளவு தூரம் வந்தோம் என்ற கேள்வி எழுகிறது .
இவ்வளவு தான் என்றெண்ணும் போது,
இந்த மன தளர்வை உதற வேண்டும் என்று ஒரு எண்ணம்.
பித்துப் பிடிக்காமல் இருக்க
பிடித்ததை செய்ய வேண்டும்.
பிள்ளைகள் வளர்ந்து சிறகு விரித்தாயிற்று.
உயரே எழும்பி பறப்பதை ரசிக்கிறேன்.
சுய பச்சாதாபம் விஷம்.
தென்றல் மீண்டும் வீசியது
வீசிய தென்றலை ஜன்னல் திறந்து வரவேற்றேன்.
கண் மூடி, மூச்சை உள் இழுத்து, உடலெங்கும் பரவ விட்டு, பரவச பட்டு,
புத்துணர்வு பெற்றேன்.
புது உறவுகள், நட்புகள், சேர்ந்தன.
புதிதாய் விடியும் ஒவ்வொரு காலையும் பொன்னாக அமைந்தது.
தொலை பேசி தோழமை பாராட்டியது.
இளவட்டம் போல் எப்போதும் கையில் இருந்தது.
சோர்ந்த மனம் தெளிவு பெற்றது.
சிறிது காலத்தில் வீசிய தென்றல் கடந்து போனது
மீண்டும் காற்று போன பலூன் போல ஒரு காலம்.
உற்சாகம் எழுவதும் வீழ்வதுமாய் நாட்கள் நகர்கின்றன.
இறைவனை தவிர வேறெதுவும் நிரந்தரம் இல்லை.
கிருஷ்ணா உன்னை இன்னும் இருக பற்ற நல்ல புத்தியை கொடு 🙏🏽