Monthly Archives: ஜனவரி 2013

கதை கேளு கதை கேளு…..

?Image ஊரில் ஒரு அரசன். அவனுக்கு ஒரு கண்ணும் ஒரு காலும் குறைபாடுடன் இருந்ததாம். 

அந்த ஊரில் இருந்த கலைஞர்களை கூப்பிட்டு தன்னை ஒரு அழகான சித்திரத்தில் வடிக்க சொன்னானாம் அரசன். 
ஒருவரும் முன் வரவில்லை. குறைபாடுடன் இருக்கும் ஒருவனை எப்படி அழகாக காட்ட முடியும் என்று தயங்கினார்கள். 
ஆனால் ஒரு கலைஞன் மட்டும் முன் வந்து தான் வரைவதாக கூறி, ஒப்புக்கொண்டதோடு இல்லாமல், அதி அற்புதமாக வரைந்தும் காட்டினானாம் . எல்லோருக்கும் ஒரே ஆச்சர்யம்.
 
அவன் வரைந்ததை பார்த்தபோது, ஒரு வேட்டைக்கான இலக்கை நோக்கி, ஒரு கண்ணை மூடிக்கொண்டும், ஒரு காலை மடித்துக்கொண்டும் இருப்பது போல் வரைந்திருந்தானாம். 
 
சின்ன கதை தான் என்றாலும் நம் கண்களை திறக்கிறது அல்லவா ?
நாமும் ஏன், இந்த கண்ணோட்டத்தோடு மற்றவரை பார்க்கக் கூடாது.ஒருவரின் குறைகளை தவிர்த்து, நிறைகளை சீர்தூக்கி, ஏன் பார்க்க மறுக்கிறோம் ?
நாம் எல்லா விதத்திலும், நிறைவானவர்கள் என்று ஒரு மிதப்பு !!!!!
அதனாலேயே, மற்றவர்களை குறைத்து இடை போடுகிறோம். இது நம் முகத்தை கழுவுவதை விடுத்து கண்ணாடியை துடைப்பது போல. 
 
பார்வையற்றவர்களை, ‘குருடு ‘
காது கேட்காதவர்களை, ‘செவிடு ‘
நடக்க முடியாதவர்களை ‘நொண்டி ‘
பேச முடியாதவர்களை ‘ஊமை ‘ 
ச்சீ ………எவ்வளவு கொடூரமாக இருக்கிறது எழுதுவதற்கு கூட…….
என் தாயார், சொல்லிக்கொடுத்த பாடங்களில் முதன்மையானது, இந்த வார்த்தைகளை உபயோகிக்க கூடாது என்பது தான். பொங்கி எழுந்து விடுவார், உபயோகித்தால். அதையே தான் நானும் என் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுத்திருக்கிறேன் 
 
குறை இல்லாதவர்கள் யார். ?
அங்கஹீனங்கள் மட்டும் தான் குறையா ?
என் மகளின் கல்லூரியில் ஒரு ஆசிரியர் சொன்னார், குறை என்று பார்த்தால், ஒருவர் மூக்குக் கண்ணாடி போட்டுக்கொள்வது கூட குறை தான். 
சரிதானே…..
இருவது, முப்பது ஆயிரங்களுக்கு ஃபரேம் வேண்டுமானால் வாங்கிக் கொள்ளலாம் …ஆனால் பார்வையில் குறை இருப்பதால் தானே கண்ணாடி. ?
 
நான் என் செல்வங்களுக்கு அடிக்கடி வலியுறுத்துவது, அதுதான் ஒருவரது, கையில் உள்ள ஐந்து விரல்களே, ஒரே மாதிரி இல்லாத போது, ஒருவர் போல் மற்றொருவர் எப்படி இருக்க முடியும்? 
கடவுள், ஒவ்வொருவரையும், தனித் தன்மையுடன் படைத்திருக்கிறான். அவரது படைப்பை குறை கூறும் அளவிற்கு நாம் என்ன அவ்ளோ பெரிய மனிதர்களா ?
 
இனியாவது, மற்றவரை பற்றி பேசும்போது, விவரிக்கும் போது , ஒரு நொடி யோசித்துவிட்டு நம் திருவாய் மலர்வோமா ?????

அஷ்டவிநாயக்…..பாகம் இரண்டு *

இனிய இரவு தூக்கத்திற்கு பிறகு, காலை, குளித்து முடித்து, சிற்றுண்டி சாப்டுவிட்டு, புறப்பட்டோம், லேன்யாத்ரி என்ற கோயிலை நோக்கி.
ஒரு ஒன்றரை மணி நேர பிரயாணத்திற்கு பிறகு, லேன்யாத்ரியை அடைந்தோம்,
சரி நேற்று நான்கு கோயில்கள் முடித்துவிட்டோமே, இன்று இரண்டு தானே என்று சாவகாசமாக, வழியில் கண்ட வயல்களில் எல்லாம் நிறுத்தி, என் மகள் புகைப்படம் எடுக்க, நாங்கள் இயற்கையை ரசிக்க என்று நிதானமாக, கோவிலை அடைந்தோம்…
சற்று கடை தெருவை தாண்டி சென்றால், டிக்கெட் வங்கிக் கொண்டு மேலே போக வேண்டியிருந்தது…..
நிமிர்ந்து பார்த்தால் …………….பார்த்தால் என்ன…………..எங்கோ மலை உச்சியில் இருக்கு கோயில்…..
ஆஹா………முடியுமா நம்மால், என்று ஒரு சின்ன தயக்கம்.
டோலி வசதியும் உள்ளது….500/- ரூபாய் என்று எழுதி போட்டிருக்கிறார்கள்
” நீ வேணுமானால், அதில் வருகிறாயா என்று நாத்தனார் கணவர் கேட்டார்,……
வேண்டாம் அத்தி …..இன்னிக்கி நடக்க முடிகிறதே, நடந்தே வரேன்” என்று கூறினேன்.
முடியும் அனுராதா, தயங்காதே ஏறு என்கிறது, உள்மனது ….. ஒரு பக்கம் பாதி போன பின்பு முடியாவிட்டால்….மற்றவர்களுக்கும் வருத்தமாக இருக்குமே என்று….
சில விஷயங்கள் ரொம்பவும் யோசிக்க கூடாது….. மனதை ஒருமுகப்படுத்தி, பிள்ளையாரப்பா நீ தான் துணை என்றி கூறிவிட்டு ஏறத் தொடங்கினேன்…..
திருப்தி மலையில் நடந்து செல்லும்போது ஓரிடத்தில், ‘முழங்கால் முடிச்சு ‘ என்று ஒரு இடம் வருமாம்….இந்த மலையோ பூராவுமே, முழங்கால் முடிச்சு தான். சரியாய் 90 டிகிரி மடக்க வேண்டியுள்ளது கால்களை…… நல்ல பயிற்சி….
தஸ், புஸ் என்று மூச்சு வாங்கிக்கொண்டு ஒரு முக்கால் மணி நேரத்தில் மேலே பொய் சேர்ந்தோம்…… நல்ல தரிசனம்….
இங்கு இருக்கும் மூர்த்தி கிரிஜாத்மாஜ் ……..
குக்குடி என்ற ஆற்றங்கரையில் அமைந்திருக்கிறது இந்த கோயில்.
கிரிஜாத்மாஜ் என்றால் கிரிஜாவின் மகன் என்று அர்த்தமாம்.
விநாயகர் தனக்கு மகனாக வேண்டும் என்பதற்காக பார்வதி தேவி பன்னிரண்டு வருடங்கள் தவம் இருந்தாராம் இந்த மலையில்.
அவரது பக்தியை மெச்சி, பத்ரபாத சுத்த சதுர்த்தி அன்று அவர் முன் தோன்றி அவருக்கு அந்த வரத்தை அளித்தாராம்

அருமையான காட்சி மேலிருந்து…..தரிசனம் முடித்து, இறங்குவதற்கு தயாரானோம் …
ஏறுவதை விட இறங்குவது சற்று ஸ்ரமமாக இருந்தது…. கைப்பிடி வேறு இல்லை… உடம்பை பாலன்ஸ் செய்துக்கொண்டு ஜாகிரதையாக இறங்கினேன்….
வழியில், ஆஞ்சநேய சுவாமியின் விளையாட்டு வேறு…. எல்லோர் கையிலும் உள்ள பிளாஸ்டிக் பையை பிடித்து இழுத்து, சேட்டை செய்துக்கொண்டிருந்தார்.
நான் படிகளை எண்ணிக்கொண்டே இறங்கினேன்…..
அட……ஆச்சு கடைசி படி….. 272…… என்ன ஒற்றுமை, அண்ணனுக்கும் தம்பிக்கும் ஒரே நம்பர் என்றேன் என்னவரிடம்….
அதான் மலேசியாவின் பாத்து குகையில் உள்ள முருகன் கோவிலிலும் 272 படிகள் தான்…..
கீழே இறங்கி, நல்ல வெள்ளரிக்காயில் உப்பு மிளகாய்பொடி போட்டு வாங்கி கொடுத்த கணவரை மனமார வாழ்த்தினேன்!!!!!!!!!
வெளியே வந்து, ஒரு சின்ன ஹோடேலில், அந்த இடத்திற்கு உரிய, “பர்லி வாங்கி” எனும் எண்ணை கத்திரிக்காய் கறியும், “ஷேவ் பாஜி ” எனும், காராசேவில் செய்த ஒரு கறியும், சப்பாத்தியும் நல்ல நீர் மோரும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்

புனெவிலிரிந்து 85 கீ.மீ தூரத்தில் உள்ளது ஒசர் எனும் ஸ்தலம்.
இங்குள்ள விநாயகரின் பெயர், விக்னேஷ்வர். இவரை தரிசித்தால், நம் கஷ்டங்கள் எல்லாம் விலகும் என்பது நம்பிக்கை.
விஞாசுரன் எனும் அசுரன் முனிவர்களுக்கு தொல்லை கொடுதுக்கொண்டிருந்தானாம். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி விக்னேஸ்வரர் அவனிடன் போரிட முற்ப்பட விஞாசுரன் அவரிடம் சரணடைந்து, இனி தொல்லை தராமல் நல்ல பிள்ளையாக இருப்பதாக சொன்னானாம்.
அதை கொண்டாடும் விதமாக, கணேஷ் சதுர்த்தி அன்று விக்னேஸ்வறரை பிரதிஷ்டை செய்து பூஜிதார்களாம்.

இதை முடித்துக்கொண்டு ஹோட்டல் ரூமிற்கு வந்து இளைப்பாறி….தூங்கிவிட்டோம்.
மறுநாள் காலை இரண்டு கோயில்கள் முடித்துக்கொண்டு, வீடு திரும்ப திட்டம்.

மறு நாள் காலை, பாலி என்ற இடம் நோக்கி புறப்பட்டோம். இந்த கோயில் மும்பையில் நாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து ஒரு மணி நேர பிரயாணம் தான் என்பதால், நாங்கள் அடிக்கடி செல்லும் கோயில்.
இங்குள்ள மூர்த்தி பல்லாலேஷ்வர் .
கணபதியின் பக்ததரின் பெயரில் பிரசித்தி பெற்ற ஒரே கோவில் இதுதான்
கல்யான் என்கிற வியாபாரிக்கும், அவரது மனைவி இந்துமதிக்கும் பிறந்த பிள்ள பல்லால். அவன் தன நண்பர்களுடன், பூஜை பூஜை விளையாடுவானாம். (இந்த காலத்து குழந்தைகள் விளையாடுவதே இல்லை… அது வேறு விஷயம்.)
அப்படி ஒரு நாள் குழந்தைகள் யாவரும், ஊருக்கு சற்று வெளியே போன பொது, ஒரு பெரிய கல் ஒன்றை கண்டதும், இதையே நாம் கணபதியாக நினைத்து விளையாடுவோம் என்று தீர்மானித்து, விளயடிக்கொண்டிருந்தார்களாம். நேரம் போனது தெரியாமல் விளையாட மற்ற பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேட, பல்லால் காரணமாக தான் அவர்கள் வீடு வரவில்லை என்பதை கல்யான் காதில் போட்டார்களாம்.
கோபமுற்ற கல்யான், தன் மகனை அடிக்க தடி ஒன்றை எடுத்துக்கொண்டு கிளம்பினாராம். அங்கு சென்றால், பல்லால் பக்தியில் மூழ்கி இருந்தானாம்.
கோபத்தில், அவன் பூஜித்த கல்லை தூக்கி எரிந்து விட்டு அவனை ஒரு மரத்தில் கட்டிவிட்டு வீடு திரும்பினாராம் தந்தை
பசி மயக்கத்தையும் பொருட்படுத்தாமல், கணபதியை த்யானம் செய்த பல்லால், மயங்கி விழுந்தானாம்.
ஒரு முனிவரின் ரூபத்தில் வந்த விநாயகர் அவனை விடுவித்து, அவனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்க, பல்லால் அவரை அங்கேயே தங்கச் சொன்னானாம்.
அங்கு அவரை துதிக்க வரும் பக்தர்களின் குறை தீர்க்க வேண்டினானாம்.
அதற்க்கு கடவுள், என்பெயருக்கு முன்னால் உன் பெயரை சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறி, பல்லாலேஷ்வர் ஆனார்.
பல்லாலின் தந்தை விட்டெரிந்த, கல் முதலில் தொழப் படுகிறது. அவர் ‘துந்தி விநாயகர்.’ இந்த விக்ரஹமும் சுயம்பு தான்.

அவரை நன்றாக தரிசித்த பிறகு, வெளியே இருக்கும் கடைகளில், அவல் அப்பளம், பூண்டு சட்னி, சில மராட்டிய வகை ஊறுகாய்கள் இவை வாங்குவது வழக்கம் ….வாங்கிக்கொண்டு, கடைசி விநாயகரை தரிசிக்க கிளம்பினோம்

அடுத்து மஹட் இங்குள்ள மூர்த்தி வரத விநாயகர். தம்மை நாடி வரும் பக்தர்களின், குறை தீர்த்து அவர்களுக்கு வேண்டும் வரம் அளிப்பவர்
அருகில் உள்ள ஏரியில் 1690 AD யில் கிடைத்ததாம் இந்த விக்ரஹம்.
சுபேதார் ராம்ஜி மகாதேவ் என்பவர் இந்த கோவிலை 1725AD யில் நிர்மாநித்தாராம்.
இதன் அருகில், நம் தமிழ் நாட்டு கோயில்களில் இருப்பது போல் அழகான குளம் ஒன்று இருக்கிறது.

நல்ல படியாக, 8 வினாயகர்களையும் தரிசித்த திருப்தியோடு, வீடு வந்து சேர்ந்தோம் ……

அஷ்டவிநாயக் ….பாகம் ஒன்று

மும்பையில் வசிக்க தொடங்கி, இருவது வருடங்கள் ஆகிவிட்டாலும், ‘ அஷ்ட விநாயக் ” யாத்திரை சமீபத்தில் தான் கைகூடியது…..

அஷ்ட விநாயக் என்பது எட்டு விநாயகர் கோயில்களின் தரிசனம். எட்டு கோயில்களில் உள்ள மூர்த்திகளும் சுயம்பு மூர்த்திகள். இவற்றில் ஆறு கோயில்கள் புனேயிலும், இரண்டு ‘ராய்கட் ‘ வட்டாரத்திலும் உள்ளன….
மும்பையிலிரிந்து நிறைய டூர் நிறுவனங்கள் இந்த அஷ்ட விநாயக் யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
என்னவருக்கு, கார் ஓட்டுவது ‘passion’ என்பதால், நாங்கள் எங்கள் வண்டியிலேயே புறப்பட்டோம்.

அட, ஆமாங்க கண்டிப்பா உண்டு……மிளகாய் போடி தோய்த்த இட்லி இல்லாமல் ஒரு வெளியூர் பிரயாணமா ?
நானும் செட் செட்டாக, தோய்த்து அடுக்கி எடுத்துக்கொண்டு, என் நாத்தனார், அவர் கணவன், என் பெண், கணவருடன் கிளம்பினேன்…..
உங்களையெல்லாம் மனதில் சுமந்துக்கொண்டு…..
நல்லபடியாக, யாத்திரையை முடித்து, உடனே அதை பற்றி எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற நினைவு தொடக்கத்திலிருந்தே மனதில் இருந்தது….

சாஸ்திரப் பிரகாரம் அஷ்ட விநாயக் தரிசனத்திற்கு புறப்படுபவர்கள், முதலில் தரிசிக்க வேண்டியது ” மோர்காவ் ”

சாஸ்திர படி, அஷ்ட வினாயகர்களையும், இந்த வரிசையில் தான் தரிசிக்க வேண்டுமாம்.
முதலில், மோர்காவில் உள்ள மோரேஷ்வர்
அடுத்து, சித்தடேக்கில் உள்ள சித்திவிநாயக்
பாலியில் உள்ள பல்லாலேஷ்வர்,
மஹடில் உள்ள வராத விநாயக்
தேஊர்ல் உள்ள சிந்தாமணி,
லேன்யாத்ரி மலை மேல் உள்ள கிரிஜாத்மஜ்
ஒசர் எனும் இதத்தில் உள்ள ஸ்ரீ விக்னேஷ்வர்
ராஞ்சன்காவில் உள்ள மகாகணபதி

இவற்றை முடித்துக்கொண்டு மீண்டும் மொறேஷ்வரை தரிசனம் செய்ய வேண்டுமாம். அப்போது தான் யாத்திரை பூர்த்தியானதாக கூறுகின்றனர்.

மும்பையிலிரிந்து, புறப்பட்டு நேராக ‘ மோர்காவ் ‘ என்ற இடத்தை அடைந்தோம் …மோர் என்றால், மயில்…. அங்கிருக்கும் கணபதியின் திருநாமம் ‘மோரேஷ்வர் ‘ அல்லது ‘மயூரேஷ்வர் ‘
மயில் மீது அமர்ந்து சிந்து என்கிற அரக்கனை வீழ்த்தியதால் இவருக்கு மயூரேஷ்வர் என்று பெயர். இந்த ஊரின் வடிவம், ஒரு காலத்தில் மயில் போன்று இருந்ததாலும், இங்கு மயில்களின் கூடம் அதிகம் இருந்ததாலும் இந்த ஊருக்கு மோர்காவ் என்று பெயர் ஏற்பட்டது . மோர் என்றால் மயில், gaon என்றால் கிராமம் …
அருமையான தரிசனம் கிடைத்தது, அந்த கோயிலில் ஒரு பலகையில், ‘இங்கு VIP தரிசனம் கிடையாது ‘ என்று எழுதி வைத்திருந்தார்கள்…..
எங்களுக்கு ஒரே ஆச்சர்யம், மகிழ்ச்சி….மராட்டியர்களை நான் புரிந்துகொண்ட வரையில், ரொம்பவும் எளிமையானவர்கள்.
அனாவச்யமாக, ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு, இடித்துக்கொண்டு போகவில்லை. வரிசையில், அமைதியாக தங்கள் முறைக்காக காத்திருந்தனர்.
சிலர் ‘கண்பதி பப்பா மோரியா ‘ என்று அழைத்துக்கொண்டிருந்தனர் ….. எளிமையான பக்தி….

அடுத்து, புனெயிலிரிந்து, கிழக்கில் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புனே – சோலாபூர் மார்கத்தில், உள்ள ‘சித்தடேக் ‘இங்குள்ள மூர்த்தி ‘சித்தி விநாயக் ‘
மது கைடபர்களை வெல்லுவதர்க்காக மஹா விஷ்ணு, சித்தடேக் மலை மேல் இருக்கும் விநாயகரை துதித்தாக சரித்திரம்
இங்கு தான் ப்ருஷந்தி என்ற முனிவரும், வியாச முனிவரும் தவம் புரிந்து, சித்தி அடைந்தார்களாம் .
இந்த கோயில் வடக்கு முகமாக அமைந்திருக்கிறது. பேஷ்வா மன்னர்களால் கட்டப்பட்டது. அஹமத்நகர் district இல் உள்ள கர்ஜத் தாலுக்காவில் ‘பீமா’ ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது இந்த கோயில். இதன் சுற்றுப்புற சூழல் மிக அருமையாக உள்ளது…..எங்கும் பசுமை ..
போகும் வழியில், ஓரிடத்தில் நிறுத்தி, அதாங்க….இட்லி மிளகாய் பொடியை ஒரு கட்டு கட்டினோம் … என் நாத்தனார், வெந்தய கீரை சப்பாத்தியும் தக்காளி தொக்கும் கொண்டு வந்திருந்தார்….
பெட் சீட் ஒன்றை விரித்துக்கொண்டு, கடையை விரித்தோம்……
சாப்பிட்டு முடித்து, சற்று கை கால்களை நெட்டி முறித்து, (என்னமோ நாங்கள் தான் ஒட்டினாற்போல )!!!! ரிலாக்ஸ் செய்துக்கொண்டு கிளம்பினோம்.

அடுத்து ‘ராஞ்சன் காவ் ‘…இது தான் கடைசியாக பார்க்கவேண்டிய கோயில் என்றாலும் நேரத்தை மிச்சப் படுத்துவதற்காகவும், அலுவலகத்தில் லீவ் இல்லாத காரணத்தினாலும் நாங்கள் ஷார்ட் கட் செய்தோம்….
இங்குள்ள கணபதியின் பெயர் ‘ஸ்ரீ மகாகனபதி ‘
.இந்த இடத்தில் தான் சிவபெருமான் கணபதியை துதித்து த்ரிபுராசுரன் என்ற அரக்கனை கொன்றாராம்.
கிழக்கு முகமாக அமைந்திருக்கும் இந்த கோயிலின் நுழைவாயில் மிக விஸ்தாரமாக உள்ளது. சந்நிதியின் வாசலில், ஜெய விஜயர்களின் மூர்த்திகளும் உள்ளன…
சூரியனின் கிரணங்கள் நேராக விக்ரஹத்தின் மேல் விழுவது போல் வடிவமைக்கப் பட்டிருக்கிறது இந்த கோயில்.

இங்கிருந்து புறப்பட்டு, தேஊர் என்ற இடத்திற்கு பயணமானோம்.
இங்குள்ள மூர்த்தியின் பெயர், ‘சிந்தாமணி ‘
இங்கு வரும் பக்தர்களின் கவலைகளை தீர்த்து, மன சாந்தியை அளிப்பவர் இவர்.
புராணத்தின் கூற்றில், கபில மகாரிஷியிடமிருந்து, குணா என்கிற இளவரசன் ஒரு சிந்தாமணி ஆபரணத்தை களவாடினானாம். அதை இங்குள்ள கணபதி கபிலருக்கு மீட்டுத் தந்தாராம்.ஆனால் அதை திரும்ப வாங்க மறுத்து விட்டாராம் கபில மகரிஷி. ஆனால் விநாயகரை சிந்தாமணி என்று அழைத்தாராம். இவையாவும், ஒரு கதம்ப மரத்தடியில் நிகழ்ந்ததால், இந்த இடத்திற்கு ‘கதம்ப நகர் ‘ என்று ஒரு பெயரும் உண்டு.
இன்னொரு புராண கூற்றின் படி, ஒரு முறை ப்ரம்ஹ தேவன் மன உளைச்சலுக்கு ஆளான பொது, கணபதியை வேண்டினாராம், அவரும், அவரின் சிந்தைகளை தெளிவுபடுத்தியதால், சிந்தாமணி ஆனார்.

நாங்கள் இன்று தரிசித்த கோயில்கள் எல்லாமே, நாள் முழுவதும் திறந்திருந்தன.
பிரசாதம், சந்நிதியில் கிடைக்கும், தேங்காய் துண்டங்களும், சக்கரை கட்டிகளும் தான். அனால் வெளி ப்ரஹாரத்தில், கொழக்கட்டை போன்ற பிரசாதங்கள் சில கோயில்களில் கிடைத்தன.
ஓரிடத்தில், டீ , காபி கூட கிடைத்தது.
தாங்கும் வசதிகள் என்று பார்த்தல், எல்லா கோயில்களுக்கு வெளியேயும் லாட்ஜ்கள் இருக்கின்றன.. நாங்கள் அங்கு தங்காததால், எவ்வளவு ஆகும் என்று கூற முடியவில்லை.
சாப்பிடுவதற்கு, நல்ல ஹோடேல்களும் ஆங்காங்கு உள்ளன.

இந்த நான்கு கோயில்களை முடித்துக்கொண்டோம் முதல் நாள். நிறைவாக இருந்தது…அன்று ஒரு செவ்வாய் கிழமை ஆதலால், எல்லா கணபதி கோயில்களிலும், ஓரளவு கூட்டம். செவ்வாய் கிழமை கணபதிக்கு விசேஷமான நாளாக பின்பற்றப் படுகிறது . நான்கு கோயில்கள் முடித்துவிட்ட திருப்தியில், ஹோட்டல் ரூமில் வந்து, நல்ல நினைவுகளுடனேயே, நித்திரையில் ஆழ்ந்தோம்.

நீங்களும் இளைபாருங்கள்……
நான் மீண்டும் மற்ற நான்கு கோயில்களின் தொகுப்பினை தயார் செய்துக்கொண்டு உங்களை சந்திக்கிறேன்.

யாத்திரை தொடரும் …………….(ஒரு சீரியல் எபக்ட் கொடுக்க தான் )

இன்றும் என்றும்

எல்லோர்க்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…..

கோவிலுக்கு சென்று வந்தீர்களா ?

நல்ல துடக்கமாக அமைய எனது வாழ்த்துக்கள்.

மக்கள் யாவரும், ஒருவருடன், ஒருவர் அன்புடனும், நட்புடனும்  பொறுமையுடனும், வாழ வேண்டுவோம்.

வீட்டில் எல்லோருடனும், நட்புடனும், அன்யோன்யதுடனும் பழகுவோம்….

உடல் நலத்திற்கு முக்யத்துவம் கொடுப்போம், வருடாந்திர செக் அப் செய்யவேண்டியதை நேரத்திற்கு செய்வோம். அலட்சியப் படுத்தாதீர்கள்.

முடிந்தால், ஒரு குழந்தைக்காவது, இலவசமாக, பாடம் சொல்லிக்கொடுக்கலாம்.

நேரத்தை திட்டமிட்டு, செயல் படுத்தலாம்.

ஆன்மீக சிந்தனைகளை வளர்த்துக்கொள்ளலாம்.

எனக்கு தெரிந்த ஒருவர் வாரம் ஒரு முறை மௌன விரதம் இருப்பார்…..( அரை  நாள் கூட முடியுமா என்னால் என்று தெரியவில்லை.)ஆனால் இருந்தால் எனக்கும் நல்லது, என்னை சுற்றி இருப்பவர்களுக்கும் நல்லதோ என்னமோ !!!!!மௌன விரததன்று இங்கு வலைபதிவில் கொட்டித் தீர்க்க வேண்டியதுதான். !!!!!!!!!!!!!!!!!!!!!

தினமும் சிறிது நேரமாவது புத்தகம் படிக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொள்ளலாம்.

ஆக, இந்த ஆண்டில், தன்னம்பிக்கையுடனும், தைர்யத்துடனும், மன உறுதியுடனும், இருந்து, நமக்காகவும்,பிறர்காகவும் வாழ்வோமே..!!!!!