Monthly Archives: மார்ச் 2023

மனம்…

புருவத்தில் உள்ள ரோமத்தில் ஒன்றிரண்டு வெள்ளி கம்பிகள் எட்டிப் பார்க்கின்றன.

தலையிலோ முக்கால் வாசிக்கு மேல் வெள்ளி.

உடலோ அறு  பட்டு அறு பட்டு துவண்டு தொய்ந்து, தளர்ந்து விட்டது.

மனமோ கேட்கவே வேண்டாம்.

தன்னைத் தவிர எல்லோருக்காகவும் 

கவலைப் பட்டு, பதறி, பிரார்த்தித்து, சிரித்து, அழுது, ஒரு வழியானது. 

நடு வயது வரும்போது, நின்று நிதானித்து திரும்பி பார்த்தால் ஒரு வித  அசதி. 

ஐம்பதில் எண்பது வாழ்ந்தது போல்  ஒரு  அயர்ச்சி. 

ஈடு கொடுக்க முடியாத வேகத்தில் ஓடும் வாழ்க்கை துணை. 

ஓரமாக உட்கார்ந்து உணவை அசை போடும் மாடாய், அசை போடும் போது,வியப்பு எஞ்சுகிறது. 

எப்படி இவ்வளவு தூரம் வந்தோம் என்ற கேள்வி எழுகிறது .

இவ்வளவு தான் என்றெண்ணும் போது, 

இந்த மன தளர்வை உதற வேண்டும் என்று ஒரு எண்ணம். 

பித்துப் பிடிக்காமல் இருக்க 

பிடித்ததை செய்ய வேண்டும்.

பிள்ளைகள் வளர்ந்து சிறகு விரித்தாயிற்று.

உயரே எழும்பி பறப்பதை ரசிக்கிறேன்.

சுய பச்சாதாபம் விஷம். 

தென்றல் மீண்டும் வீசியது 

வீசிய தென்றலை ஜன்னல் திறந்து வரவேற்றேன்.

கண் மூடி, மூச்சை உள் இழுத்து, உடலெங்கும் பரவ விட்டு, பரவச பட்டு, 

புத்துணர்வு பெற்றேன். 

புது உறவுகள், நட்புகள், சேர்ந்தன. 

புதிதாய் விடியும் ஒவ்வொரு காலையும் பொன்னாக  அமைந்தது.

தொலை பேசி தோழமை பாராட்டியது.

இளவட்டம் போல் எப்போதும் கையில் இருந்தது.

சோர்ந்த மனம் தெளிவு பெற்றது.

சிறிது காலத்தில் வீசிய தென்றல் கடந்து போனது

மீண்டும் காற்று போன பலூன் போல ஒரு காலம்.

உற்சாகம் எழுவதும் வீழ்வதுமாய் நாட்கள் நகர்கின்றன.

இறைவனை தவிர வேறெதுவும் நிரந்தரம் இல்லை.

கிருஷ்ணா உன்னை இன்னும் இருக பற்ற நல்ல புத்தியை கொடு 🙏🏽

அடி வயிற்றில் ஒரு சுழற்சி
தொண்டையில் ஒரு உருண்டை
கண்களில் மூட்டிக் கொண்டு நிற்கும் கண்ணீர்

ஒவ்வொரு தாய்க்கும் ,தாய் அமுதம் சுரக்கும் தந்தைக்கும் பிள்ளைகளை விட்டு பிரியும் தருணத்தில் ஏற்படும் உணர்ச்சி .

ஸ்டீரீங் வீல் பக்கதில் கை தொலைபேசியில் GPS வழி காட்டுகிறது. பின் சீட்டில் இருந்து கொண்டு எட்டி பார்க்கிறேன். 44 நிமிடங்கள் விமனனதளம் சென்றடைய என்கிறது. மனம் அதை 45ஆக ரவுண்டு ஆப் செய்து கொள்கிறது. ஏதோ பேசிக்கொள்கிறோம். ஒரு படபடப்பு மட்டும் இருந்து கொண்டே இருக்கிறது. மறுபடியும் பார்க்கையில் 10 நிமிடம் பின் 9,8,7,6,5 4,3,2,1. இறங்கும் இடம் வந்து இறங்கி, பெட்டிகளை வெளியில் எடுத்து வைத்து விட்டு கட்டிக் கொள்கிறேன் மகளை .
இரண்டு வாரங்கள் முன்பு இளையவளை பிரியும் போதும் இன்று மூத்தவளை பிரியும் போதும் கட்டிக்கொள்ளும் அந்த நொடியில்
மீண்டும் அவர்களை கர்ப்பத்தில் வைத்துக் கொண்டுவிட மாட்டோமா என்று தவிக்கிறேன்.

முடிந்தால் ஒவ்வொரு தாயும் செய்திருப்பாளே !

அனால் அதற்க்காக பெறவில்லையே !

பொங்கும் உணர்ச்சிகளை நன்றாக கையாண்டு, சிரித்து, சின்னதாக மென்மையாக புத்தி சொல்லி ( வேறென்ன வேளா வேளைக்கு சாப்பிட ) இறைவனை துணையிருக்க அழைத்துவிட்டு கையசைத்து விடை கொடுத்தேன்.
மீண்டும் பார்க்கும் வரை கைத்தொலை பேசியும் கணினியும் துணை !
நான் அழுது பிள்ளைகளை பலவீனமாக்க மாட்டேன் என்று எனக்கு நானே உறுதி கொண்டேன் மூத்தவள் பிறந்த போதே !இன்று வரை வெற்றி. போக போக எப்படியோ தெரியாது.

பயணங்கள் முடிவதில்லை
அஞ்ஞானங்கள் விடுவதில்லை
மனங்கள் அடங்குவதில்லை
ஆனால் அடங்கித் தான் ஆக வேண்டும் . நமக்காகவும் பிள்ளைகளுக்காகவும்.
புத்தியை வேறு விதமாக மாற்ற பழகுங்கள் . என் கையில் படிக்க புத்தகமும், ஸ்வெட்டர் போடுவதற்கு நூலும் ஊசியும் இருக்கு.