Monthly Archives: திசெம்பர் 2012

புத்தாண்டு வாக்குறுதிகள்

images-1புத்தாண்டு வாக்குறுதிகள்…..நாம் அனைவரும் எடுத்துக்கொள்ளும் ஒன்று தான்…

ஆனால் கடைபிடிக்கிறோமா, இன்னும் சொன்னால் தாக்குப்பிடிக்கிரோமா என்றால்…..
ம்ம்ம்ம் …… என்று இழுப்போம் ….
ஆனால் அந்த டிசம்பர் கடைசி இரு தினங்களில், கண்டிப்பாக நினைவிற்கும் வந்தும் லிஸ்ட்டும்  போடுவோம்…… கடைபிடிக்காவிட்டால் என்ன, எண்ணமாவது  வந்ததே….
இன்று காலை செய்தித் தாளிலும் இந்த  விஷயம் வந்ததால்…. சிந்தித்துப்பார்க்க தோன்றியது…
நமது, பர்சனல் வாக்குறுதிகளை தாண்டி, யோசித்துப் பார்த்தல், நிறைய இருக்கிறது….
1.  நான் தினமும், தொலைக் காட்சி பெட்டியை சுவற்றில் இருக்கும் சுவிட்சில் அணைப்பேன் 
ரிமொடினால் அணைப்பதால், மின்சாரக் கசிவு இருந்துக்கொண்டே தான் இருக்குமாம்….
அதனால் இரவு படுக்க போகும் முன்பாவது, அணைத்துவிட்டு படுக்கலாமே…நமது கரண்ட் பில்லில் கணிசமான தொகையை குறைக்க உதவும்.
2. 100% சார்ஜ் ஆகா தேவையான அளவு மட்டுமே, எனது கைதொலைபேசியை சார்ஜ் செய்வேன் ….
சார்ஜில் போட்டு விட்டு தூங்கிவிடுகிறோம்….இதுவும், கரண்ட் கசிவு போலத் தான். வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியை விட, நமது கை தொலைபேசி அதிகமாக கரண்ட் சாப்பிடுமாம்.
3. கெய்செர் …வெந்நீர் தரும் சாதனம்…....
பத்து நிமிடங்கள் மட்டுமே, போட்டுவிட்டு, அணைக்க முயலாமே……..வாளியில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு குளிப்பதும் உதவும்….
இல்லையென்றால், சோப்பு போடும் போது, ஷவரை மூடி வைக்கலாம்.
( இதனால் தண்ணீர் சுட்டு, உங்கள் உடம்பை பதம் பார்த்தல் அதற்க்கு நான் பொறுப்பல்ல )
4. லிப்ட் ….(இதை பற்றி பேசாமல் இருக்க முடியுமா ?)
எனது குடியிருப்புக்கு ஒரு நாளில் ஒரு முறையாவது, படியில் ஏறிச் செல்வேன், இதனால், மின்சாரமும் மிச்சமாகும், உடம்பும் சிக்காகும்……( என்ன ஒரு ரைமிங் )!!!
நான்காவது மாடிக்கு கீழ் குடியிருப்பவரானால், ஒரு போதும் லிப்ட் உபயோகிக்காதீர்கள் !!!
உங்களை நீங்களே நேசிக்க தொடங்குவீர்கள்….. அவ்வளவு, அழகாக இருப்பீர்கள் உடம்பு தெம்பாக இருக்கும் போது .!!!!
5. தண்ணீர், தண்ணீர்,……..
பல் தேய்க்கும் போதும், சவரம் செய்யும்போதும், குழாயை மூடிவிடுங்களேன்…..
துணி கையால் துவைப்பதானால்…. சிக்கனமாக தண்ணீர் உபயோகிக்கவும்….
துணி துவைத்த நீரை, பாத்ரூம் தரையை கழுவுவதற்கும், flush  செய்வதற்கும் கூட பயன்படுத்தலாம்…..
6. SMS …..குறுஞ்செய்தி ……….
ஒருவரை தொலை பேசியில் அழைப்பதற்கு முன்பு, அந்த விஷயத்தை குறுஞ்செய்தியில் தெரிவித்தால் போதுமா / பதில் பெற்றால் போதுமா என்று எண்ணி விட்டு, செயல்படுங்கள்.
உங்கள் கைத்தொலை பேசியின் பில் உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும்.
இவை தவிர,
எண்ணை  பதார்த்தங்கள் சாப்பிடுவதை, கணிசமாக குறைதுக்கொள்வேன்,
வெளிச் சாப்பாட்டை குறைத்துக்கொள்வேன்,
இனிப்பு குறைப்பேன்,
தினமும், நடை பயிற்சி மேற்கொள்வேன்,
வெயிட் குறைய பாடு படுவேன்…….( நாம் படுவதை படுவோம், ஒரு வேளை, வெயிட்டும், உறுதி எடுத்துக்கொள்கிறதோ என்னவோ …..” குறையமாட்டேன் ” என்று )!!!!
எல்லோரிடமும் அன்பாக பேசுவேன், நடப்பேன்……
தினமும், அரை மணி நேரமாவது, நல்ல புத்தகங்களை படிப்பேன்…..
நேரத்திற்கு, மருத்துவ பரிசோதனைகளுக்கு செல்வேன், அலட்சியப்படுத்த மாட்டேன்…….
எனக்கு  தோன்றியவற்றை பட்டியலிட்டுள்ளேன்……
உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்களேன்…..
எல்லோருக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள் 
 

கணக்கும், கடுக்காயும்…….

கணித மேதை ராமானுஜமும் நானும் என்ற தலைப்பில் எழுதவேண்டும்a என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே, என் தோழி திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் எழுதி விட்டார்கள்……

www.ranjaninarayanan.wordpress.com

அவர்களின் ஒவ்வொரு வரியும் என் மனதில் ஓடிக் கொண்டிருந்ததாகவும், நான் பேசிக்கொண்டிருந்ததாகவும் இருந்தது !!!!

என்ன ஆச்சர்யம் இப்பிடிக் கூட ஒருவருடன் ஒருவர் எண்ணங்களில் ஒற்றுப் போக முடியுமா என்ன…

இருந்தாலும், என் கண்ணோட்டத்தில் அதே தலைப்பில் எனது எண்ணங்களை வெளியிட நினைத்தேன்.

ஆக பின் வரும் வரிகளில், எனது எண்ணங்கள் ….

ராமானுஜமும் நானும்……

எனக்கும் அவருக்கும் எட்டாத தூரம்……

அவர் மேதை…………. நான் பேதை…..

இருந்தாலும் அவரை பார்த்தும் அவரை பற்றி படித்தும் வியந்து போயிருக்கிறேன்.

கணக்கு ஏனோ என்னோடு நட்பு பாராட்ட மறுத்தது. ( மத்த பாடங்கள் என்ன வாழ்ந்தது என்று கேட்காதீர்கள் ) !!!!

ஆங்கிலம் மட்டும் பாசம் மேலிட ஈஷிக்கொண்டது……!!!

நான் தமிழை காதலித்தேன்…. !!!

எஞ்சியது, அறிவியல், பூகோளம், சரித்ரம்……அவை தூரத்து பங்காளிகள் போல் பட்டும் படாமலும் உறவு கொண்டன என்னிடம்…!!!!

கையே ஆயுதம் என் அம்மாவுக்கு … டீச்சர் வேறு…வலது கை பழக்கமுள்ளவர் தான் என்றாலும், நான் இடது கை பக்கம் உட்கார்ந்திருந்தாலும், செம்மையாக அடி வாங்குவேன்…அவ்வளவு சமத்து பாடம் படிப்பதில்…..

பாவம் எவ்வளவு பாடு பட்டார்கள் என்னோடு என்று இப்போது நினைத்து பார்க்கிறேன்.

ரொம்ப எதிர்ப்பார்ப்பு… ஈடு கொடுக்க என்னால் முடிய வில்லை.

நானும் எவ்வளவோ போரடிப் பார்த்தேன்.

statement sumsல் கணக்கு புரியும், போடத் தான் வராது…..

குட்டும், அடியும், ஒரு ஸ்டேஜுக்கு மேல் பழகி / மரத்து போனது….

அப்பா மட்டும், என்னையும் அம்மாவையும் ஒரு சேர சமாளிக்கப் பார்ப்பார்….

கொஞ்சம் கவனிச்சு படி என்று என்னையும்,

போனா போட்டம், அதுக்கு புரியராப்ல கொஞ்சம் மெதுவா சொல்லிக்கொடு என்று அம்மாவையும் சமாதானப் படுத்துவார்….

திக்கித் தடுமாறி, பத்தாவது …………………….fail ஆனேன்… ஆனால் கணக்கில் இல்லை.. அறிவியலில்….. ( கூத்து தானே….)!!!

சீ…. வெக்கமாயில்லை ? என்று கேட்கிறீர்களா …?

“இல்லை ” என்று பளிச்சென்று சொல்வேன்….

என் வெட்கப்பட வேண்டும்….

வாழ்க்கை ஒன்றும் அன்று முடிந்து விட வில்லையே….

அது ஒரு சின்ன சறுக்கல் …. அவ்வளவு தான்…

சறுக்கினால் என்ன உயிரா போய் விடும் ?

திரும்ப எழுந்தால் போச்சு….

சிம்பிள் ……

அப்படித்தான் நானும் எழுந்தேன் …வெறியுடன் படித்தேன்… ஒரு வருஷம் போனது போனது தான் ….ஆனால் முழு மூச்சுடன் படித்து 70% வாங்கினேன் அறிவியலில்…..

11வதில் அறிவியல் பாடம் தான் கொடுப்பேன் என்று பிடிவாதம் பிடித்தார்கள் என் பள்ளியில்…..

‘அடக் கடவுளே, ஏதோ மார்க் வாங்கி விட்டேன் என்பதற்காக அறிவியலை தொடரச் சொல்கிறார்களே ” என்ற கவலை…

வேண்டவே வேண்டாம் என்று ஒரு கும்பிடு போட்டு விட்டு commerce பக்கம் வந்தேன்…

அங்கேயும் கணக்கு…..

சரி காசிக்கு போனாலும் , பாவம் விடாதா…. என்னவோ சொல்வார்களே… அதை போல், என்னை கணக்கு அனகோண்டா பாம்பு போல் சுற்றி அழுத்தியது……

12இல் பொது பரிட்சையின் போது கண்ணீர் மல்க எழுதிக்கொண்டிருந்தேன்…….

கணக்குக்கு பிரியா விடை கொடுக்கும் தருணம் அல்ல….

ஒரு மண்ணும் தெரியவில்லை …அதனால்…..

எனக்கு அன்று வந்த மேற்பார்வையாளர் கண்களில் பரிதாபம் ….

ஏதோ என் அப்பா அம்மா செய்த புண்யம், மூதாதையர்கள் ஆசீர்வாதம், 72 மார்க் வாங்கி தப்பித்தேன்……70 பாஸ் மார்க்…..

அன்று போட்டேன் ஒரு முழுக்கு…….

பின் ஆங்கில இலக்கியம்…..முடித்து, கழுத்தை என்னவருக்கு நீட்டினால்….தெரிந்த, கணக்கு புலிக்கு நீட்டியிருக்கிறேன் கழுத்தை என்று…..

வேண்டாத தெய்வமில்லை….XX XY க்ரோமொசோன்கள் நல்ல படியாக வந்து, என் சந்ததிகள் கணக்கில் புலியாகவும், சிறுத்தயாகவும், இருக்க வேண்டுமே என்று….

என்னவரோ வாயாலேயே பெரிய்ய்ய்ய பெரிய்ய்ய்ய கணக்கெல்லாம் நொடியில் போடுவார்… வாய் பொளந்து கொண்டு பார்ப்பேன்.

ரசிப்பது தப்பில்லையே….எனக்கு நல்ல ரசனையுண்டு….!!!!!

இன்று வரை…எந்த சின்ன கணக்கு போட வேண்டும் என்றாலும், போட்டு விட்டு….’ சரிதானே ‘ என்று என்னவரிடம் ஒரு அப்ரூவல் வாங்கி கொள்கிறேன்…

மளிகை சாமான் வாங்கினாலும், காய்கறி வாங்கினாலும், கரெக்டாக சில்லறை வாங்கி வந்துவிடுவேன்…..

அப்பா என்ன ஒரு மேதை என்று நீங்கள் சொல்வது காதில் விழுகிறது….கணக்கு இல்லேனா வாழ்க்கை இல்லை என்று சொல்வது என்னால் ஒப்புக்கொள்ள முடியாது….

என் செல்வங்களில் ஒன்று கணக்கில் என்னை கொண்ட போது , உணர்ந்து, அவளுக்கு உற்சாகம் அளித்து, கணக்கு இல்லாத க்ரூப் எடுத்து படிக்க வைத்து,

சில பல ஏசல்களுக்கு பாத்திரமாகி …..உன்னைபோலவே அவளையும் ஆக்காதே…. என்று கூரினவர்களுக்கு மத்தியில்,

அந்த கஷ்டம் எனக்கு மட்டும் தான் தெரியும் என்று தோன்ற…அவளுக்கு பிடித்த பாடத்தில் சேர்த்துவிட்டேன்….

ஒரு கஷ்டமும் இல்லாமல் படிக்கிறாள் ….

என்னமோ …. யோசித்துப்பார்த்தால், கணக்கோ ஆங்கிலமோ அறிவியலோ….. எதில் புலியோ, பூனையோ… நல்ல மனிதனாக இருக்க வேண்டும் முதலில்….

தைரியம் வேண்டும். எதையும் தாங்கும் இதயம் வேண்டும்,

வெற்றியின் முதல் படி தோல்வி….. என்பார்கள்..அப்போ மற்ற படிகள் வெற்றிப் படிகள் தானே… ( இந்த கண்ணோட்டம் ரொம்ப முக்கியம்….. )

எத்தனை முறை விழுகிறோம் என்பது பெரிதல்ல, விழுந்த பின் எழுந்திருக்கிரோமா என்பது தான் கேள்வி…

இவை எல்லாவற்றையும் தாண்டி நமக்கென்று ஒரு வாழ்க்கை கடவுள் வடிவமைத்துள்ளான் என்ற நம்பிக்கை வேண்டும்…..

நமக்கு வராததை பிடித்துக்கொண்டு, மாங்கு மாங்கு என்று போராடிக்கொண்டிருப்பதை விட்டுவிட்டு, வருவதில், திறமையை காட்டலாமே….

ராமானுஜருக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள்……..

உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால்…..

Image‘ உன்னை அறிந்தால், நீ உன்னை அறிந்தால், உலகத்தில் போராடலாம்…….” என்று நண்பர் ஒருவரது கைத் தொலைபேசியில் ஒலிக்கும் அவரை கூப்பிடும் போது . சட்டென்று நம் மனதில், ஒட்டிக் கொள்ளும் புத்துணர்ச்சி…. 

“அட, ஆமாம் . எதுவுமே சாத்தியம் தானே என்று தோன்றும்…. “
அந்த பாடல் வரிகளுக்கு அவ்வளவு கனம்
 
நம் வீட்டு பில்டர் காப்பியை விட பெரிசா ஒண்ணும்  நன்றாக இல்லை என்று என் உறவுக்காரர் ஒருவர் சொல்வார்…
 
இருக்கலாம் ஆனால், இன்றைய தலைமுறை, விரும்பிச் செல்லும் இடமாகவும், விரும்பிக் அருந்துவதுமாக இருக்கிறது காப்பி.
அதான் , Cafe Coffee Day ..
எனக்கும் பிடிக்கும் அங்கே போய்  காப்பி குடிப்பதற்கு…..
நல்ல சூழ்நிலை. நுரை பொங்கும் cappuccino  காப்பி…நம்மோடு அதை அனுபவிக்கும் நண்பர்கள், உறவுகள்…. 
மனதுக்கு நல்ல புத்துணர்ச்சி தருகிறது…. 
எல்லாவற்றையும், சீ இது சரியில்லை, இது மோசம், என்ன வேண்டியிருக்கு என்கிற மனோபாவத்துடன் பார்க்காமல்….
ஒரு தடவை ருசித்து பார்ப்போமே, ரசித்து பார்ப்போமே, என்கிற கண்ணோட்டம் வேண்டும் வாழ்க்கையில். 
 
அப்பிடித்தான், அவசரமாக, ஒரு” டேக் அவே ” ( முன்னாடி இது ‘பார்சல் ” ) காப்பி ஒன்று வாங்கப் போனேன் இருதினங்களுக்கு முன்.
CCD யின் கதவை திறந்துக் கொண்டு சென்று, கவுன்டரில் இருந்த பையனிடம், 
“ஒன் கப்புச்சினோ ரெகுலர் டேக் அவே என்றேன். “
 
” கீழே பாருங்கள் என்று கையை காட்டினான்….”
கீழே மெனு கார்ட் இருந்தது….
” இல்லை வேண்டாம் ” என்று கூறிவிட்டு, என் ஆர்டரை மீண்டும் கூறினேன். 
 சைகையால், தனக்கு காதும் கேட்காது, வாயும் பேசாது என்றான் அந்த பையன். 
எதிர்பாராததால், ஒரே ஒரு க்ஷண நேரம் திகைத்தாலும், என்னை சுதாரித்துக்கொண்டு, 
ஓ  ஓகே , என்று கூரிவிட்டும் மெனு கார்டில், எனக்கு வேண்டியதை சுட்டி காட்டி, சின்ன கப் என்பதை சைகையில் காட்டி, டேக் அவே என்பதையும் சைகையில் காட்டினேன் .
 
ஐந்து நிமிடங்களில் ஆவியுடன் காபி என் கைகளில்…
ஒரு நிமிடம் என்று சைகை செய்த மற்றொருவன், மும் பக்கம் ஓடி வந்து, சக்கரை பொட்டலங்களும், டிஷ்யு பேப்பர், காபியை கலக்குவதற்கு ஒரு சின்ன குச்சியும் எடுத்து கொடுத்தான்…..
 
சாதரனமாக, ஆட்டோ காரர்கள், முகம் சுளிக்காமல், சில்லறை கொடுக்கும்போதும்,
ஹோடேல்களில் செர்வர்கள் நாம் சாப்பிட்ட தட்டை எடுக்கும்போதும், 
பெட்ரோல் பங்க்கில் என் ஸ்கூட்டரின் பெட்ரோல் டேன்க் மூடியை திறக்க  உதவும் போதும் 
ஏன், நான் ரோடை கிராஸ் பண்ணும்போது, வண்டியை நிறுத்தி ‘போங்கள் ‘ என்று சைகை செய்யும் முகம் தெரியாத மனிதருக்கும். கூட நன்றி சொல்ல மறக்காதவள், 
இந்த பையனை சும்மா விடுவேனா?
என்னுடைய அடையாள புன்னகை ஒன்றை வீசிவிட்டு…..( அவனுடைய confidence  குடுத்த உற்சாகம் )!
thank you ……… என்று கூறிவிட்டு வெளியே வந்தேன்…..
 
லொட லொட என்று பேசுபவர்கள் மத்தியில் ( பேசுவது பாதிக்கு மேல் அபத்தம், மற்றவர்களின் குறை காணல் , தற்பெருமை, மற்றவரை புண் படுத்துவது )
உயர்ந்து நின்றார்கள் இந்த இருவரும் .
அவர்களின், தன்னம்பிக்கை என்னை அசத்தியது. 
அவர்களை வேலைக்கு வைத்த  நிறுவனமும் என் பார்வையில் உயர்ந்தது .
சின்னதாக ஒரு பின்னடைவு வந்தாலே, கப்பல் மூழ்கினாற்போல் துவண்டு விடுபவர்கள், இவர்களை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும். 
வாழ்க்கை வாழ்வதற்கே.
யாருக்கும் எதுவும் சுலபமாக கிடைப்பதில்லை…கிடைத்தாலும் அதன் மதிப்பு நமக்கு தெரிய போவதில்லை…. 
போராட்டங்கள் நிறைந்ததுதான் வாழ்க்கை..
எதி நீச்சல் போடுங்கள், 
கரடு முரடான பாதைக்கு பிறகு concrete போட்ட ரோடு வரும் என்று நம்புங்கள்…..
நம்பிக்கை தான் எல்லாம் ( நகைக் கடை விளம்பரம் அல்ல !!!!)
 
 
நிலா பேசுவதில்லை 
அது ஒரு குறை இல்லையே….
குறை அழகென்று கொண்டால் 
வாழ்க்கையில் எங்கும் பிழையில்லையே……
 
கவிஞர் வைரமுத்துவின் நெஞ்சை மிக மிக ஆழமாக தொட்ட, கண்களில் நீர் முட்டச் செய்த, ஆத்மா திருப்தி அளித்த…..வரிகள்…..
 

மூட் நம்மை முடக்கக்கூடாது ..

sorrow faceஎவ்வளவு படித்தாலும், கேட்டாலும், உணர்ந்தாலும், கடைபிடிக்க முயற்சித்தாலும், நடு  நடுவே, சந்தர்ப்ப சூழ்நிலைகள் கை கொடுக்காமல் போனால்,

படித்ததும், கேட்டதும், உணர்ந்ததும், கடை பிடிக்க முயன்றதும் நம் கைவிட்டு போகிறது…
நமக்கு வேண்டப்பட்ட ஒருவர், நாம் நன்றாக அறிந்தவர், ஒரு வார்த்தை சொல்லி விட்டால், நாம் ஏன் இவ்வளவு பரிதவித்து போகிறோம்?
உடனே கோபமும், அழுகையும் பொத்துக்கொண்டு வருகிறதே ?
பழசையெல்லாம் கிண்டி கிளறி எடுக்கிறது மனசு
அந்த குப்பயோடேயே வருகிறது, சுய பச்சாதாபம் ….
‘நானாக்கம் இதெல்லாம் தாங்கின்டேன் ” என்று புலம்புகிறது மனசு….
“அதனாலென்ன, இன்று எல்லாம் நன்றாகத்  தானே இருக்கு”  என்று புத்தி ஒரு பக்கம் சமாதானம் கூறினாலும்,
” அதெப்படி, அப்பிடி ஒரு வார்த்தை என்னை பார்த்து சொல்லி விட்டார்கள் ” என்று திரும்ப திரும்ப வேதனையை பறைசாற்றுவதற்கு அங்கீகாரம் தேடுகிறது மனசு….
ஒரு நாள் முழுவதும் மூஞ்சி பரண் மேல் ஏறி உட்கார்ந்து கொள்கிறது.
எதிலும் ஈடுபட மறுக்கிறது
வருத்தப்படுவதையும், மூஞ்சி அறுந்து தொங்குவதையும் நியாயப்படுத்த தேடுகிறது மனசு….( அதில் ஒரு தனீ  சுகம் அந்த வேளையில் )
உண்டா இல்லையா ? மறைக்காமல் சொல்லுங்கள் !!!!!
வாய் விட்டு அழுதாலும், நண்பர்களை அழைத்து தொலை பேசியில் புலம்பித்  தீர்த்தாலும் அடங்குவதில்லை…
இப்போதெல்லாம் முகநூலில் ( facebook ) ஸ்டேடஸ் அப்டேட் (status update ) செய்தால் கூட தணிவதில்லை !!!!!
அதற்க்கான நேரம் குறைந்தது ( நம் பிடியில் விஷயம் இருந்தால் ) 24 மணி நேரம்…..
புயல் சின்ன அறிகுறி போல் …………..
சூறாவளியாக வீசிவிட்டு மெது மெதுவே சகஜ நிலைக்கு திரும்புகிறது.
நாம் கட்டுக்குள் கொண்டுவராவிட்டால் இன்னும் ஓரிரு தினங்கள் கூட நம்முடன் தங்கிவிட்டு போக தயார்தான்…..
ஆனால் அடித்து விரட்டவிட்டால், ஈஷிக்கொண்டு இருந்துவிடும்
அப்பறம் நாம் முன்னேறுவது எங்கிருந்து ???

இந்த தெரபி தேவைதானா ?????

இன்று காலை செய்தித்  தாளில் படித்த ஒரு விஷயம் என்னை சிந்திக்க வைத்தது.

யுக்ரேன் நாட்டில் ஒருவர், ‘ சவப் பெட்டி தெரபி ‘ தருகிறாராம்…
உங்கள் புருவங்கள் உயர்வது தெரிகிறது.!!!!
உயிருடன் இருக்கும் போதே சவப் பெட்டியில் படுக்க வேண்டும் என்றால் எப்பிடி இருக்கும் ?நினைத்து பாருங்கள். !!
அச்சமாகவும், அச்சான்யமாகவும்  இருக்கும் !!!!
ஆனால் யோசித்து பார்த்ததில், அட இது நம்மளை எவ்வளவு மேம்படுத்தும் என்று தோன்றியது.
நம் மதத்தில், நாம் நெற்றிக்க்கிட்டுக்கொள்ளும் பழக்கம் அதற்க்கு தான்…சாம்பலாகிய  விபூதியை பூசும் போது, உன் உடம்பும் ஒரு நாள் சம்பலாகப்போகிறது பார்த்து நடந்துகொள் என்று நினைவூற்றிக்கொள்வதர்க்கு …..
திருமான் காப்பும் அதே தத்துவத்தை தான்  கூறுகிறது…நீ மண்ணிலிரிந்து வந்தாய் மீண்டும் மண்ணிற்கு போவாய்…. என்று…
ஆனால் இன்று நெற்றிக்கு இட்டுக்கொள்வதும் குறைந்து விட்டது, அது கற்று கொடுக்கும் பாடமும் மறந்து விட்டது…
மண்ணின் மீது மனிதனுக்காசை 
மனிதன் மீது மண்ணுக்காசை 
மண் தான் கடைசியில் ஜெயிக்கிறது 
இதை மனம்தான் உணர மறுக்கிறது …..
 
என்ன ஆழ்ந்த அர்த்தபூர்வமான வரிகள் கவிஞர் வைரமுத்து அவர்களது…!!!!!!
நம் முன்னோர்கள் சொல்லிக்கொடுத்ததை விட்டுவிட்டால் இந்த மாதிரி தெரபியை தேடி ஓடலாம்…
நினைத்து பாருங்களேன்….
ஒரு பதினைந்து நிமிடம் படுக்க வேண்டுமாம் அந்த பெட்டியில்….
மூடியை திறந்து வைத்துக்கொள்வதும், மூடி வைத்துக்கொள்வதும் நமக்கு ‘சாய்ஸ் ‘ !!!!
அடா அடா என்ன ஒரு சாய்ஸ் !!!!
அந்த பதினைந்து நிமிடங்களுக்கு பிறகு, இறப்புக்கு பின் உள்ள வாழ்க்கைக்கு தயாராகி போகிறார்களாம் மனிதர்கள்….
அந்த நேரம் பெட்டியில் இருக்கும் வரை எல்லாம் நன்றாகத்தான் தோன்றும்….
வாழ்க்கை எவ்வளவு பெரிய பொக்கிஷம் …..
எவ்வளவு செய்ய வேண்டி உள்ளது …நாம் காலத்தை எப்படி விரயம்  செய்கிறோம்
ஏன் பந்துக்களுடம் சண்டை போடுகிறோம்….
ஏன் மற்றவர் மனது புண் படும்படி நடக்கிறோம் ……….
ஏன் உதவி செய்ய யோசிக்கிறோம் ………
ஏன் சின்ன விஷயங்களை ஊதி ஊதி (பலூன் வியாபாரி போல் ) பெரிதாக்கிக் கொள்கிறோம்…..
ஏன் நமக்கு கிடைத்த /நடந்த நல்ல விஷயங்களை விட்டுவிட்டு நடக்காததையும் கிடைக்கததையும் நினைத்து புலம்பி, அங்கலாய்த்து போகிறோம் ……….
எல்லாம் எல்லாம் தோன்றும்
சுய பரிசோதனை நடதிக்கொள்வோம்….
ஒரு தடவை பெட்டியிலிருந்து வெளியே வந்தோமானால், மனது இதெல்லாவற்றையும் மறந்து விடுகிறததா ? ……நினைக்க மறுக்கிறதா?
ஒருவரது, இறப்பிலும்,  சவ ஊர்வலத்திலும், ஈமக்க்ரியைகள் நடக்கும் போதும் இதெல்லாம் நமக்கு தோன்றும் …பிறகு..எதையும் நாம் நினைக்க விரும்புவதில்லை….
அது தான் ஸ்மசான வைராக்யமா ?

சந்தாரா …………..எப்பிடி முடிகிறது இவர்களால் ?????

வாரக் கிழமைகளிலோ, பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையோ, மாதத்தில் ஒரு முறையோ உபவாசம் இருக்கும் போதே, எங்கோ ஒரு மூலையில்,

” இன்று உபவாசம், இதை வாயில் போட்டுக்கொள்ள கூடாது ” என்று மனது எச்சரித்து, நச்சரித்துக்கொண்டே இருக்கிறது.
அன்ன, ஆகாரம் இல்லாமல் எப்படி இதனை நாள் இருக்க முடிகிறது ?
எனக்கு தெரிந்தவர் ஒருவரது மாமியார், தன்  சுயநினைவோடு எடுத்த முடிவு, என்னை உலுக்கியது.
நவம்பர் பதினாறாம் தேதி, ” உங்கள் பிரார்த்தனையுடன் வெற்றிகரமான ஏழாவது நாள் சந்தாரா என்று எழுதி அவரின் மாமியார் கட்டிலின் ஒரு மூலையில் சம்மணம் இட்டு உட்காந்திருப்பதை படம் பிடித்து எனக்கு அனுப்பியிருந்தார்.
அட, சந்தாராவா  …? இதென்ன என்று வலைதளத்தில் தேடிய போது , அதிர்ந்தேன் !
ஜைன மதத்தவர்களின்  சமய வழக்கங்களில் ஒன்று தான் இந்த சந்தாரா.
அதாவது, சாகும் வரை உண்ணாவிரதம்.
அவர்கள் சுய நினைவோடு எடுக்கும் முடிவு தான். இந்த பிறவியில், தனது கடமைகள் முடிந்து விட்டன என்று தோன்றினால், தான் இந்த முடிவை எடுக்க முற்படுகிறார்கள்
இது தற்கொலை கிடையாது ஏனெனில்  அது  க்ஷண நேரத்தில் எடுக்கும் முடிவு. இது ஆலோசித்து  எடுப்பது …
 
எவ்வளவு மனஉறுதி வேண்டும் இந்த முடிவுக்கு வருவதற்கு. பிறவி எடுத்ததன் பயன் முடிந்தால் இந்த முடிவுக்கு வரலாம் என அவர்கள் மதம் கூறுகிறது. அல்லது, நோயின் கடைசி கட்டத்தில் இருக்கும் ஒருவரும் இந்த முடிவை எடுக்கலாமாம். ஒரு வருடத்தில் இரனூருக்கும் மேல் பட்டவர்கள் இந்த சந்தாராவை மேற்கொள்கிறார்கள்.

இதற்க்கு இணையாக இந்து மதத்தில் ” ப்ரயோபவேசா ” அனுசரிக்கப்படுகிறது. அதே தத்துவம் தான், பொறுப்புகளை முடித்தவரும், வாழ்ந்தது போதும் என்று நினைப்பவரும், இந்த முடிவுக்கு வருவார்களாம்.
பரீக்ஷித் மகாராஜா இதை நடைமுறைபடுத்திய பொது, அவருக்கு பாகவத புராணத்தை விளக்கினாராம், வியாசரின் மகனான சுகன்.
இதெல்லாம் படித்து அசை போட்டுக்கொண்டிருக்கும் போதே அந்த அம்மையார் பதினொரு நாள் உண்ணாவிரதத்தை எட்டியிருந்தார்.
மெது மெதுவாக, நம் கண் முன்னே ஒருவர்  மரணத்தை தழுவுவது மயிர்க்கூச்சல் ஏற்படுத்துகிற விஷயம்.

உடல் நிலை சரியில்லாமல், நம் கண் முன்னே ஒருவர் மெல்ல மெல்ல உயிரை விடுவதே வேதனையாக இருக்கிறது…இதில், வேண்டுமென்றே இப்படி முடிவு செய்ய வேண்டுமானால், அவர்களின் மனோ திடத்தை என்னென்று சொல்வது. அவர்களின் மகள், மகன், கணவர், அவர்களின் மன நிலை என்னவாக இருக்கும் ? ஒரு வேளை  இப்பிடி ஒரு மனிதரோடு வாழ்ந்தவர்களும் நல்ல மன உறுதி படைத்தவர்களாக இருப்பார்களோ ?
என் தாயார் படுக்கையில் இருந்த பொது, முதல் சில வருடங்கள் அழுதேன், முட்டிக்கொண்டு கதறினேன், அவளின், தவிப்பை பார்க்க முடியாதவளாய்,
” அம்மாவை அழைசுக்கோ பெருமாளே ” என்று புலம்பியிருக்கிறேன்
பின் ஒரு நாள் திடீரென்று ஒரு ஞானோதயம் ….நான் யார், கடவுளுக்கு ஆணையிட….? என்று.
பின் சற்று தொலைவிலிருந்து பார்க்க தொடங்கினேன்….
” அது அவள் கர்மா அவள் அனுபவிக்கிறாள் ” என்று என்னை தேற்றிக்கொண்டேன்.
அவள் மூலம் இந்த உலகத்தில் வந்ததால், எனக்கு வலிக்கிறது. அவ்வளவு தான். மற்றபடி அவள் வலியை  நான் எந்த விதத்திலும் மற்ற முடியாது என்பது புரிந்தது.
என் கடமையை மட்டும் செய்து விட்டு மற்றவற்றை பெருமாளிடம் விட்டேன்.
அதெல்லாம் சொல்லுவது சுலபம் அனு ….கடைபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்று நீங்கள் சொல்வது என் காதில் விழுகிறது.
ஒப்புக்கொள்கிறேன் கஷ்டம் தான். ஆனால், முனைந்து, பழகிநோமானால், அதில் கிடைக்கும் நிம்மதி அனுபவித்தால்தான் புரியும்.
எனக்கு புரிந்தது. !
அம்மா என்னை விட்டு பிரிவதற்கு சில மணி நேரங்கள் முன்பு, அவளை, உச்சி முகர்ந்து, நான் சௌக்கியமாக இருப்பதையும், என் கணவர் அவள் கண்ட கனவு போல் நல்ல நிலைமையில் இருப்பதையும், என் மகள்கள் நன்றாக வளர்வதையும், நன்றாக படிப்பதையும் அவள் காதுகளில் கூறினேன்.
” அம்மா, நீ உன் கடமைகளெல்லாம் முடிச்சுட்டே, இந்த சரீரத்தை விட்டுட்டு கிளம்பு மா ” என்று கூறி முத்தமிட்டுவிட்டு, சற்று நேரம் அவளை பார்துக்கொண்டிருந்து விட்டு படுத்தேன். அடுத்த சில மணி நேரங்களில் அவள் உயிர் பிரிந்தது.
இதைத் தான், பகவன் கிருஷ்ணர்,
சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ
அஹம் தவா  சர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுசஹா 
 
என்கிறார்.
நேற்று சாயந்திரம் நாலே முக்கால் மணிக்கு, அந்த அம்மணி உயிர் நீற்றார் என்று என் தோழர் எனக்கு தகவல் அனுப்பினார் .
அல்ப விஷயங்களுக்காக, நாம் நம்மை சுற்றி உள்ளவர்களிடம் வெறுப்பு காட்டாமல் இருப்போமா ?

கூந்தல் கருப்பு….ஆஹா !!!

கூந்தல் கருப்பு….ஆஹா !!!

டையின்  சிறப்பு …ஓஹோ…!!!
நம்மில் பலர் ” டை”  போடுவதால் தான் கூந்தலின் நிறத்தை அப்பிடியே வைத்துக்கொண்டிருக்கிறோம்.
நரை முடி வயது முதிர்வதையும், வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தையும் குறிக்கும் என்ற காலம் போய் , முதிர்வதை, விரும்பாதவர்கள்/ ரசிக்காதவர்கள் அதற்க்கு கலர் அடிக்க துவங்கினார்கள்.
இளநரை ஒரு பெரும் பிரெச்சனை. இன்றைய டென்ஷன் கலந்த வாழ்க்கையில்,
( வாழ்வின் பெரும் பகுதி டென்ஷனில் தான் செலவழிகிறது ..நர்செரி  படிக்கும் குழந்தைக்கு கூட டென்ஷன் தான்.)
இளநரையை  மறைக்க தேவைபடுகிறது ‘டை’.
எது எப்படியோ,
எனக்கு எதற்கு இதெல்லாம்? என்றோ ஒரு நாள் நான் இப்படித் தானே தோற்றமளிக்கப்  போகிறேன் என்று சில மாதங்கள் டை பக்கமே போகாமல் இருந்தேன்.
என்னை நானாகவே ஏற்றுக்கொள்ளுங்கள் !! என்று கணவரிடமும், குழந்தைகளிடமும் தத்துவம் பேசினேன் !
முதலில் என்னை நானே ஏற்றுக்கொண்டேனா என்றால் 80% ஒப்புக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும்.
நீண்ட முடியும், இருபது நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டி இருப்பதும் அலுப்பை தந்தது…..
இடையிடையே, தலைமுடிக்கு டை போடாததால் இந்த உடை அணியமுடியவில்லையே ….இந்த நகை, ஜிமிக்கி இவையெல்லாம் அணிய முடியவில்லையே என்று சில பல தடைகள் வந்தது உண்மைதான்.
காதில் வைரத்தோடும் மூக்கில் வைர மூக்குத்தியும் நிரந்தரமாகிப் போயின …அழகாகத்தான் இருந்தது… அனால் ஜிமிக்கி அணிந்தால் பாந்தமாக இல்லாதது ஒரு குறை.. அவ்வளவு பிடிக்கும் ஜிமிக்கி…
” நீ உன் முடியை சர்ப் எக்ஸ்செலில்  தோய்த்தாயா ” என்ற ஒருவரது நாகரீகமில்லாத பேச்சு மனதை காயப்படுத்தியது.
இரண்டு நாட்கள் புலம்பிவிட்டு புறக்கணித்தேன் .
என்னைப்  பார்த்து பேசாமல், என் மண்டையையே பார்த்து பேசும் என்னவர் மேல் கோபம் கோபமாக வந்தது .
பார்த்தவுடன், ‘அய்யய்யோ , என்னாச்சு, டை போட நேரமில்லையா ‘ என்று கேட்பவர்களுக்கு, மெல்லிய சிரிப்பு ஒன்றை மட்டுமே, பதிலாக அளித்தேன்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விமர்சனம் தோழி ஒருத்தியிடமிருந்து,…
‘ வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையா ‘ என்றாள்
‘ ஏன் ஒன்றும்  இல்லையே   நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது என்றேன்…’
‘இல்லை …..டை போடுவதை கூட விட்டுவிட்டாயே என்று கேட்டேன் ‘ என்றாளே  பார்க்கலாம்…..!!!!!!
தூக்கி வாரி போட்டது எனக்கு… எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறார்கள் இந்த மனிதர்கள்….
சிலருக்கு விரிவாகவும்
சிலருக்கு சுருக்கமாகவும் ,
சிலருக்கு புன்னகைத்தும்
சமாளிதுக்கொண்டிருந்தேன்,
முதலிலிருந்தே என் குழந்தைகளின், ஏக போக, ஆதரவு….
‘ நீ இப்பிடித்தான் மா நன்னா இருக்கே ‘ என்று…
அனால் ஒவ்வொரு முறை, யாரேனும் விமர்சிக்கும் போது  வந்து அவர்களிடம் கூறக் கூற அவர்களுக்கு ஒரு சமயத்தில், சலிப்பாக இருந்தது….
‘ உனக்கு வேனும்னா  கலர் பண்ணிக்கோ மா ‘ என்று கூறத் தொடங்கினார்கள்….
மூன்று மாதங்கள் தாக்கு பிடித்தேன் …..அதற்க்கு மேல் முடியவில்லை…
சரி திரும்பவும் போட்டுப்பார்ப்போம் என்று முடிவு செய்து, மறுபடியும் துடங்கினேன் ..
ஆஹா….. என்ன ஒரு மாற்றம்…
எனக்கே நான் ப்ரெஷ்ஷாக  இருப்பது தெரிந்தது….( மறுபடியும் ஜிமிக்கி ) !!!!!
என்னவர் ஒரு பெரிய பெருமூச்சு விட்டார் …… ஒரு ஐம்பது வயசு வரைக்கும் போட்டுக்கோ ….அப்பறம் பாக்கலாம்…..!!!! ( இதெப்படி இருக்கு ….)
வெளியே இறங்கினால், நண்பர்களின் கண்களில் நிம்மதி….
பக்குவம் என்பது அவரவர் மனது சம்பந்தப்பட்ட விஷயம்
சரி, நாப்பத்தி மூணு வயசில், தொண்ணூறு வயது தோற்றமளிக்காமல் இருக்கலாமே என்று, தொடர்ந்து கலர் செய்ய தொடங்கிவிட்டேன்…..
மனப்பக்குவம் தொண்னூறு போல் உள்ளது என்ற நிம்மதியில் !!!!!!

பிறந்த நாள் வாழ்த்து

408144_369876636372193_370103795_nபளிச்சென்ற சிரிப்பு

ஆண்பிள்ளை போல் வெட்டப்பட்ட முடி,

நெஞ்சின் நடுவே. குறுக்கே. போடப்பட்ட பை .

வலது கையில் கடிகாரமும், இடது கையில் வளையல்களும்.

பேன்ட் சட்டை,

கழுத்தை ஒட்டி ஒரு மெல்லிய சங்கிலி.

அதில் தொங்கும் ஒரு அழகான பென்டன்ட் …

பார்ப்பவர்களின் கவனத்தை கண்டிப்பாய் ஈர்க்கும் கனிவான, தோழமையான கண்கள்….

இது தான் சுதா

தொலைவிலிரிந்தே அந்த அன்யோன்யத்தை உணர்ந்தேன்

மற்றொரு தோழி மூலம் அறிமுகமானபோது

‘ஹாய் ‘என்று என் கையை பிடித்து குலுக்கியது இன்றும் நினைவில் உள்ளது.

முதல் இரு சந்திப்புகளிலேயே, ஏதோ வலியை பற்றிய பேச்சு எழ yoko yoko வை எனக்கு அறிமுகப்படுத்தியவள்

உடல் வலிக்கு மட்டுமல்லாது. மன வலிக்கும் மருந்துண்டு அவளிடம் ….

அவளது ‘எனெர்ஜி ‘ஒரு தொற்று நோய் ….

அவளையும் அவள் நடவடிக்கைகளையும் தொடர்ந்தால் புரியும்

வாழ்க்கை வாழ்வதற்கே என்று….

அவள் இருக்கும் இடத்தில், சிரிப்புக்கு பஞ்சமே கிடையாது.

யாரைப்பற்றியும் புறம் கூறி நான் பார்த்ததில்லை.

நான்கு வருட இடைவெளிக்கு பிறகு பம்பாய் வந்த பொது தொலைபேசியில் என்னை அழைத்த மறு நிமிடம் ஒப்புக்கொண்டேன்

அவளை பொய் சந்திப்பதற்கு ……

அடுத்த ஒரு மணி நேரத்தில், அவள் தோழியின் வீட்டில் சந்தித்தப்போது ,

கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

‘கிளிங் ‘

என்று ஒரு சத்தம் ….

என்னை கை தொலைபேசியாகவும் அவளை சார்ஜெராகவும் நினைத்துக்கொள்ளுங்கள் ….

( சார்ஜிங் தொடங்கியதன் அறிகுறி தான் அந்த கிளிங் )

அடுத்த முறை பார்க்கும் வரை தாங்கும்…..

அப்பிடிப்பட்ட பெண்மணிக்கு, அஞ்சா நெஞ்சம் கொண்டவளுக்கு, மற்றவர்களின் நலன் விரும்புவளுக்கு

மற்றவர்களால் விரும்பப்படுபவளுக்கு, என் விசிறிக்கு, அவள் ரசிக்கும் என் தமிழில் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.