Tag Archives: யதார்த்தம்

மனம்…

புருவத்தில் உள்ள ரோமத்தில் ஒன்றிரண்டு வெள்ளி கம்பிகள் எட்டிப் பார்க்கின்றன.

தலையிலோ முக்கால் வாசிக்கு மேல் வெள்ளி.

உடலோ அறு  பட்டு அறு பட்டு துவண்டு தொய்ந்து, தளர்ந்து விட்டது.

மனமோ கேட்கவே வேண்டாம்.

தன்னைத் தவிர எல்லோருக்காகவும் 

கவலைப் பட்டு, பதறி, பிரார்த்தித்து, சிரித்து, அழுது, ஒரு வழியானது. 

நடு வயது வரும்போது, நின்று நிதானித்து திரும்பி பார்த்தால் ஒரு வித  அசதி. 

ஐம்பதில் எண்பது வாழ்ந்தது போல்  ஒரு  அயர்ச்சி. 

ஈடு கொடுக்க முடியாத வேகத்தில் ஓடும் வாழ்க்கை துணை. 

ஓரமாக உட்கார்ந்து உணவை அசை போடும் மாடாய், அசை போடும் போது,வியப்பு எஞ்சுகிறது. 

எப்படி இவ்வளவு தூரம் வந்தோம் என்ற கேள்வி எழுகிறது .

இவ்வளவு தான் என்றெண்ணும் போது, 

இந்த மன தளர்வை உதற வேண்டும் என்று ஒரு எண்ணம். 

பித்துப் பிடிக்காமல் இருக்க 

பிடித்ததை செய்ய வேண்டும்.

பிள்ளைகள் வளர்ந்து சிறகு விரித்தாயிற்று.

உயரே எழும்பி பறப்பதை ரசிக்கிறேன்.

சுய பச்சாதாபம் விஷம். 

தென்றல் மீண்டும் வீசியது 

வீசிய தென்றலை ஜன்னல் திறந்து வரவேற்றேன்.

கண் மூடி, மூச்சை உள் இழுத்து, உடலெங்கும் பரவ விட்டு, பரவச பட்டு, 

புத்துணர்வு பெற்றேன். 

புது உறவுகள், நட்புகள், சேர்ந்தன. 

புதிதாய் விடியும் ஒவ்வொரு காலையும் பொன்னாக  அமைந்தது.

தொலை பேசி தோழமை பாராட்டியது.

இளவட்டம் போல் எப்போதும் கையில் இருந்தது.

சோர்ந்த மனம் தெளிவு பெற்றது.

சிறிது காலத்தில் வீசிய தென்றல் கடந்து போனது

மீண்டும் காற்று போன பலூன் போல ஒரு காலம்.

உற்சாகம் எழுவதும் வீழ்வதுமாய் நாட்கள் நகர்கின்றன.

இறைவனை தவிர வேறெதுவும் நிரந்தரம் இல்லை.

கிருஷ்ணா உன்னை இன்னும் இருக பற்ற நல்ல புத்தியை கொடு 🙏🏽

ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் ……

ஓட ஓட ஓட தூரம் கொறயல னு தனுஷ் ஒரு படத்துல பாடுவாரே அது போல தான் நம்ம எல்லார் வாழ்க்கையும் போன வருஷம் வரை இருந்தது. ஆனா ஒரு ஒரு கல்லையும் பொருக்கி , சரியா தூக்கி போட்டு பிடிச்சு, கைல பாலன்ஸ் பண்ணி நிறுத்தி , என் போன வருஷ வாழ்க்கையை வீடியோ வா டிசம்பர் கடைசில அமெரிக்காவுல பதிவு பண்ணிருக்கேன் பாருங்க !

ஏதோ முப்பத்தி ஒண்ணாம் தேதியோட எல்லாம் முடிஞ்சிட்டாப்ல ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன் ‘ னு வரப்புல சந்தோஷமா கத்திகிட்டே வர கதாநாயகி போல நாமும் 2021 ல ஆதி எடுத்து வெச்சிருக்கோம். பாப்போம்

ஆட்றா ராமா னு கோல் எடுத்தா ஆட்ற கொரங்கு போல நம்மள நல்லா தான் ஆட்டி வெச்சுது கொரோனா. ஆனா “நாமெல்லாம் யாரு ? ஹஹ என்கிட்டயேவா” (வடிவேலு குரல் ல படிங்க ப்ளீஸ் ). வருஷ ஆரம்பத்துல போட்ட சடன் பிரேக் ஓட சரி, அதுக்கப்பறம் வேணுங்கற அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிகிட்டு, சீட்பெல்ட் இழுத்து க்ளிக்கிட்டு, வாழ்க்கை வண்டிய டாப் கியர்ல போட்டு இண்டு இடுக்கு சந்து பொந்து ஹய்வே, எல்லாத்துலயும் ஒட்டி வந்து சேந்திட்டமே.

பொலம்பலோ அழுகையோ, பிடிச்சுதோ பிடிக்கலீயோ ரசிச்சுதோ ரசிக்கலையோ வீட்டோட கிடந்தோம். ஆபீஸ் வேலைய (ஷார்ட்ஸ் மற்றும் நைட்டியில் ) பாத்துகிட்டே சைகைல காப்பி ப்ளீஸ் னு கேட்டோம், ப்ளூ டூத் ல மீட்டிங். அட்டென்ட் பண்ணிகிட்டே பாத்திரம் தேச்சோம், ஆடியோ மட்டும் ஆன் ல வெச்சுகிட்டு துணி மடிச்சோம், காய்கறி வெட்டினோம், மாவு பெசஞ்சோம், இன்னும் எவ்வளவோ

மக்களே, மேலே கூறியது எல்லாம் என் விருப்பம் மற்றும் கற்பனை. ( எங்க வீட்ல அப்பிடி எல்லாம் எதுவும் நடக்கலை ) பெட் ரூம் ஆபீஸ் ரூம் ஆகா மாறியது, வாட்ஸ் ஆப் ல செய்தி – தண்ணி கொண்டு வா / காப்பி வேண்டும் / மீட்டிங் ல போறேன் மூச்சு பலமா சத்தமா விட்டு தொலைக்காதே பாஸ் கு கேக்கபோகுது , நெட் பிளிக்ஸ் பாக்காதே எனக்கு நெட் ஸ்பீட் கம்மியாகுது, wifi off பண்ணிக்கோ சாப்பாடு இப்போ இல்ல, கொறிக்க என்ன இருக்கு, 4.40 லேந்து ஒரு 20 நிமிஷம் Free அதுக்குள்ள ஏதானும் வேலை இருந்தா சொல்லு இப்படி ஒரு டென்ஷன் லேயே பொழுது கழிச்சோம்.

வயசானவங்க அவங்க உடல் நிலை, ஆஸ்பத்திரி னு நிறைய ஸ்பீட் பிரேக்கர்ஸ். மல்யுத்த பயில்வான் கூண்டுக்குள்ள தொடையை தட்டி அடுத்த ரவுண்டு கு ரெடி ஆவாரே அதே மாதிரி தான்க நானும் போன வருஷம் முழுக்க ஓட்டினேன். அப்பிடி இப்பிடி அடி ஓதை எல்லாம் வாங்கி ஒரு வழியா refree என் கைய புடுச்சு தூக்கி “இவர் ஓரளவு வெற்றி பெற்றார் ” னு. அறிவிச்சாப்ல எனக்கு ஒரு காட்சி தெரிஞ்சது !

நல்ல விஷயங்கள் நடக்காமல் இல்லங்க ! நம்ம கொரோனா சார் கு என் மேல பாசம் ரொம்ப அதிகமாகி வா அம்மணி சொர்கத்தை காட்றேன் னு கூப்டாரு !நான் தான் நல்ல வார்த்தை சொல்லி, நயமா பேசி விடுங்க பாஸ் பெறகு பாத்துக்கறேன் சொல்லி ICU லேர்ந்து நன்றியோடு விடை பெற்று வந்தேன். இதை விட நல்ல விஷயம் இருக்குமான்னு தெரியல . மகள்கள் அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகறாங்க பெரியவர்கள் உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வந்தார்கள்.

எல்லோருக்காகவும் பிரார்த்தனை, ஒரு நாளும் தளர்வறியா மனம் வேண்டும் ! அது ஒன்னு இருந்தா எல்லாத்தையும் ஒரு கை பாக்கலாமே !

கதை சொல்லும் பென்சில் ✏️

வாட்ஸ் ஆப் கதை படிசீங்களா மக்களே ?

ஆப்பு வைக்கும் வாட்ஸ் ஆப்பு சில சமயங்கள்ல செம்ம மெசேஜ் கூட கொண்டுவரும்க!

அப்பிடித்தான் எனக்கும் ஒண்ணு வந்துது . கன்னடத்தில – போச்சு போ இனிமே கன்னடத்தில எழுதி கொல்ல போறியா னு நீங்க பதர்றது தெரியுது. இல்ல , கண்டிப்பா இல்ல .

நாம் சுணங்கி இருக்கும் நேரத்தில் இப்படிப் பட்ட message கள் நமக்கு ஒரு நம்பிக்கையை தருகின்றன. இதுதான் ஆத்மாவுடனான உரையாடலோ?

பென்சில் பாக்சில் உபயோகித்து தேய்ந்து போன பென்சில் ஒன்று, புது பென்சிலை வரவேற்கிறது. எனக்கு அனுபவத்தில் தெரிந்த விஷயங்கள. உனக்கு சொல்கிறேன் கேள் என்றது..

முதலாவதாக, நீ தனியாக செயல்படுவதில்லை . உன்னை ஒருவர் கையில் எடுத்தால் தான் செயல் பட முடியும்.

இரண்டாவது. உன்னுடைய வெளியில் இருக்கும் மர பாகத்தை காட்டிலும்

 

உள்ளே உள்ள lead (ஈயம்) தான்  மிக முக்யம்.

மூன்றாவது, நீ அவ்வப்போது, சீவப்படுவாய்…எப்போதெல்லாம் நீ மழுங்கி போகிறாயா அப்போதெல்லாம் நீ சீவப் படுவாய். தயாராக இரு.
நான்காவது,மிக முக்கியமானது, நீ எழுதும் போது  பிழைகள் ஏற்படும். கடைசியில் இருக்கும் ரப்பர் கொண்டு அழித்து விட்டு மீண்டும் எழுது.
இத்தனை நாளும்  எழுதி எழுதி தேய்ந்து போன பென்சில், புது பென்சிலுக்கு குடுக்கும் அறிவுரை மட்டும் இல்லை. வாழ்க்கை பாடம் நமக்கும் இருக்கு இதில். இந்த வாழ்க்கை பாடங்களை அவ்வப்போது மறப்பது தான் நம் துன்பத்திற்கும், நிம்மதி இல்லாமைக்கு காரணம்.
முதலாவதாக நீயாக எழுத முடியாது, ஒருவர் உன்னை கையில் எடுக்க வேண்டும். அவன் தான் பரமாத்மா. அவன் நம்மை தாங்குகிறான். நம்மை கையில் எடுத்து எழுதுகிறான். அவன் எழுத்து தப்பாது என்று நம்பு. அந்த பரமனின் கையில் நான் ஒரு ஆயுதம் என்பதை மறக்க கூடாது.  பகவத் கீதையில் பதினோராவது அத்தியாயத்தில் முப்பத்தி மூன்றாவது செய்யுளில், கண்ணன் அர்ஜுனனிடம் கூறுகிறான்,
நிமித்த மாத்திரம் ……
“எதிரில் மாண்டதாக நீ நினைப்பவர் எல்லோரும் என்னால் ஏற்க்கனவே வீழ்த்தப்பட்டனர். நீ எனது செயலுக்கு ஒரு கருவி ” என்று. ஹஸ்தினாபுரம் தர்மத்தினால் ஆளப் பட வேண்டும் என்று நான் முடிவு செய்து விட்டேன் என்று.
போர் முடிந்த பின், அர்ஜுனன் கூறினானாம்  நான் தான் அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்று.பீமன் தான் அதை விட அதிகமானவர்களை வீழ்த்தினேன் என்றானாம். அதனால் கண்ணன் இருவரையும் போர்க் களத்திற்கு அழைத்து சென்றானாம். அங்கு கடோதகஜனின் மகன் பார்பரீகனை கண்டு,  அவனிடம் அர்ஜுனனின் அம்புகளை அதிகம் பார்த்தாயா, பீமனின் கதையை அதிகம் பார்த்தாயா என்று கண்ணன் கேட்க, கண்ணனின் சக்கரத்தை தான் நாலா பக்கமும் சுழல்வதை பார்த்தேன் என்றானாம், பார்பரீகன் . நம் வாழ்க்கையும் அதே தான் நண்பர்களே. “நான்” ” எனது” என்பதை அழித்து, “நீ” “உனது” என கண்ணன் காலடியில் சமர்ப்பித்து பாருங்கள், அந்த அனுபவம் பேரானந்தம். ராம நாமமும் சிவ நாமமும் இதற்க்கு தான். நம்மை நாமே ஞாபகப்படுத்திக்கொள்ள.
நம்,
சுகம் – துக்கம்
லாபம் – நஷ்டம்
ஜெயம் – அபஜெயம்
மான – அவமானம்
எல்லாம் அவன் அருளால் நடக்கிறது. அப்படியென்றால், இதில் என் பங்கு /பாத்திரம் என்ன என்று நீங்கள் கேட்கலாம். நான் தாசன், அவர் ஸ்வாமி என்று உணர்வது தான் நம் பாத்திரம். நான் எனும் அஹம்காரம் இல்லாத போது , நாம் பணிவாகிறோம். இப்போது அமெரிக்காவில் இருப்பதில், நிறைய நேரம் கையில். பகல் பொழுதெல்லாம் திரு. துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் உபன்யாசம் கேட்டுக் கொண்டே இருக்கிறேன். அதில் முகுந்த மாலா கேட்ட போது , ஒரு புரந்தர தாசர் க்ரித்தியை குறிப்பிட்டார். இன்னு தய பாராதே தாசன மேலே …
அதில் ஒரு வரி,
நானு நன்னது எம்ப நரக தொலகே பித்து
நீனே கதி எந்து நம்பித தாசன மேலே
நான் என்னது என்ற எண்ணம் என்னை நரகத்தில் தள்ளியது , நீயே கத்தி என்று நம்பும் இந்த டடன் மேலே தயை வராதா ……
என்ன ஒரு வீரியமான வார்த்தைகள். கண்ணில் நீர் பெருகிக் கொண்டே இருக்கிறது

 

இரண்டாவது பாடம்  உன் வெளிப்புறத்தை விட உள்ளே உள்ள ஆத்மா  முக்கியம். நீ உடுக்கும் ஆடை யோ, உண்ணும் உணவோ, வசிக்கும் வீடோ, பொன்னோ பொருளோ நீ அல்ல. உன் அந்தராத்மாவும் அதில் நீ அனுபவிக்க கூடிய நிம்மதியும் தான் நீ. உள்ளே புழுக்கம் அதிகமாக இருந்து வெளியே நீ ஏ.சி யில் இருந்தால் என்ன பயன். சரி, இந்த நிம்மதி எங்கே கிடைக்கும் ? கடைகளில் கிடைக்க கூடிய வஸ்து  இல்லையே. விலை கொடுத்து வாங்கக்கூடியது இல்லையே. காசு பணம் இருந்தால் மருந்து வாங்கலாம், ஆரோக்கியத்தை வாங்க முடியாது அல்லவா? இந்த நிம்மதியை வாங்க காசு பணம் வேண்டாம். மனம் இருந்தால் போதும். உன் பாத கமலங்களில் என்னை அறப்பணித்துவிட்டேன், காப்பாற்று என்று சரணாகதி அடைந்தால் போதும், அவன் தந்து விடுவான் இந்த நிம்மதியை.

மூன்றாவதாக…. நாம் அவ்வப்போது சீவப் படுகிறோம். எப்போதெல்லாம் மழுங்கி போகிறோமோ அப்போதெல்லாம் சீவப் படுகிறோம். விழும்போதெல்லாம் தூக்கி நிறுத்தப்படுகிறோம். எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று கேட்காதே.
நஷ்டங்கள் வரும்
உடல் நலம் கெடும்
அழுவோம்
துடிப்போம்
வருந்துவோம்
இதெல்லாம் யார்க்கு இல்லை ? ராமாவதாரத்தில், காட்டுக்கு சென்று அவர் படாத துன்பமா ? கிருஷ்ணாவதாரத்தில் அவர் பிறந்ததே, சிறைச்சாலையில். ராமகிருஷ்ணா பரமஹம்சர், எப்பேர்ப்பட்ட மஹான், அவருக்கு ஏன் புற்று நோய்  வந்தது.  எந்த ஒரு பிறப்பும் துக்கத்திலிருந்து தப்பிப்பதில்லை. இருவர் மட்டுமே இதற்க்கு விலக்கு , ஒன்று இன்னும் பிறவாத குழந்தை, இன்னொன்று, மடிந்து போனவர். கடலும், மலைகளும், ஆறுகளும், இருக்கும் வரை துக்கமும் இருக்கும். சுகமும் துக்கமும் மாறி மாறி வரும். சுவாமி விவேகானந்தரை ஒரு முறை ஒரு குரங்கு கூட்டம் தாக்க வந்ததாம். அவர் பயந்து ஓடாமல், நின்று, எதிர்கொண்டாராம். அவை அதை எதிர் பாராததால், மிரண்டு பின் வாங்கின. நம் பிராரப்த கர்மாக்களிலிருந்து தப்பிக்க முடியாது. என்னுடன் இரு பெருமாளே, என்னை கை பிடித்து கரை சேர்த்து விடு என்று அவன் காலை பற்றுங்கள்.
கடைசியாக தப்பு செய்வது மனித குணம் அதை மன்னிப்பது தெய்வ குணம். தப்பை திருத்திக்கொள்வது மிக முக்கியம். நாம் மன்னிக்க படவேண்டும் என்று ஆணித்தனமாக எண்ணும்  போது, மன்னிப்பதற்கு தயாராக இருப்பதும்  முக்கியம்.  கசப்பானவற்றை அழித்து விட்டு முன்னேறிக் கொண்டே இருங்கள். உங்கள் நிம்மதிக்காகவாவது.

நீண்ட பதிவு. ஆனால்  நான் அனுபவித்ததை நீங்களும் அனுபவிக்க வேண்டும் என்கிற ஆசையில், அந்த ஆடியோ பதிவில் வந்ததோடு, என் சரக்கையும் சேர்த்து உங்களுக்கு கொடுத்தேன். பொறுமையாக இது வரை படித்ததற்கு நன்றி.
கண்ணன் நம் எல்லோரையும் காக்கட்டும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண  கிருஷ்ண  ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே ……

 

பழையன கழிதல்….

போகி பண்டிகை…

பழயன கழித்து, புதியன புகவேண்டிய நாள்.

பழைய பொருட்கள் மட்டுமில்லாமல்,

பழைய வெறுப்புகள், காழ்ப்புகள், வருத்தங்கள், புகார்கள், எல்லாவற்றையும் கழிப்போம். அதற்காக பிடி விட்டு போன(பிடிக்காமல் போவது வேறு) உறவுகளையும், நட்புகளையும் தேடிப் போய் புதுப்பியுங்கள் என்று சொல்லவில்லை. நடந்த சம்பவத்தை, மனதிலிருந்து நீக்கி விட்டு, முன்னே செல்லுங்கள் என்று சொல்கிறேன்.

ஒரு விதமான மனச்சிறையில் நாம் வாழ்கிறோம். எந்நேரமும் ஏதோ ஒன்றை பற்றி சிந்தனை. (நான் கோட்டை கட்டுவதில் புலி). ஒரு கோட்டை இடிந்து இடிந்து வீழ்கிறது. ஆனாலும், தொட்டில் பழக்கம் பாருங்கள்… மாற்றிக் கொள்ள சிரமமாக இருக்கிறது. ஆனால் கொஞ்சம் முன்னேறி வருகிறேன்.

அந்த ஓவர் தின்கிங் (கோட்டை கட்டும்) பழக்கத்தை இந்த போகியில் நான் கழிக்க போகிறேன்.

சில உறவுகளும், நட்புகளும், என்னை சுலபமாக எண்ணி விட்டார்கள். அவர்களுக்கும் குட் பை….

சிலரது நடவடிக்கைகளுக்கு நான் பொறுப்பு என்ற எனது எண்ணத்திற்கு டாடா காட்டி விட்டேன்.

நீ ரொம்ப ……நல்லவ எவ்ளோ அடிச்சாலும் தாங்கர…என்ற என் பற்றிய அபிப்ராயத்தை, நான் முதலில் கழிக்கிறேன்.

எனக்கும் வலிக்கும்…

50 வயதில் ஒரு சில இடங்களிலாவது என்னை நான் எனக்காக முன்னுரிமை கொடுத்தக் கொள்ள போகிறேன்.

பொருள் சேகரிக்கும் பழக்கத்தை கழிக்க போகிறேன். Minimalism வாழ்க்கைக்கு மிகவும் தேவை.

To live in the present …நிகழ் காலத்தில் வாழ்வது மிக அவசியம். கடந்த காலத்தை என்னை பாதிக்க நான் அனுமதிக்கவில்லை. ஆனால், எதிர் காலம் கொஞ்சம் என்னை ஆட்படுத்துகிறது. அதுவும் தானாக நடக்கும் என்ற எண்ணத்தை வலுப்படுத்த வேண்டும். அந்த எதிர் கால கவலையை கழிக்க போகிறேன்.

உடல் உபாதை கொடுக்கும் பயத்தை காய் விட்டு அதற்க்கான தீர்வை கண்டுபிடித்து, செயல்பட போகிறேன். இரெண்டு மாதமாக செயல் படுத்திக்கொண்டிருக்கிறேன். (இங்கும் ஓவர் தின்கிங் தான் என் பிரச்சனை).

நீங்களும் மனதிலும், உடலிலும் உள்ள எதிர்மறைகளை நீக்கி, ஆரோக்கியமாக இருக்க வாழ்த்துக்கள்.

போகி மற்றும் பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.

கபாலி, கற்பகாம்பாள்

கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?

அதிலிருந்து 2 வீடு தள்ளி தான் என்னோட வீடு…

உள்ளே நுழைந்தவுடன் கோவில் வீடு எண்2 என்று பதித்த ஒரு கல் இருக்கும். அதை தாண்டினால், ஒரு பெரிய நிலப் படியும் பெரிய கனமான கதவும்.

இப்பிடி சொல்லிக் கொண்டிருந்த பந்தம் கடந்த 9ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கபாலி கோவிலுக்கு சொந்தமான வீட்டில் என் அப்பா 50 வருடங்கள் முன் வாடகை தாரராக குடி போனார். அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் என் அம்மாவின் சீமந்தமாம்..

ஒட்டு வீடு தான். நீண்ட தாழ்வாரம், கூடம்,ரேழி, முற்றம்,புழக்கடை, வெராண்டா…..

இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

வீட்டின், ஓரோர் இடங்கள்.

அந்த பெரிய கதவில்

P.S.Ramaswamy

Mrs. Lakshmi Ramaswamy

என்று ஒரு போர்டு.

ஒரு முறை நான் சாக் பீஸில் என் பெயரையும் அதற்கு கீழே எழுதினேன். உறவினர் ஒருவர், என் மேல் ரொம்ப பாசமானவர், எனக்கு பிளாஸ்டிக் இல்

R.Anuradha IN/OUT 😊😊😊

டாக்டர் ரூம் வாசலில் இருக்குமே அது போல செய்து அன்பளிப்பாக கொடுத்தார்.

அதை தாண்டினால் ரேழி(அப்படினா???) எனக்கு தெரியாது… வீட்டில் ஒரு பகுதி அவ்வளவு தெரியும். அந்த ரேழியில் என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி போட்டோ. அதன் வலப் பக்கம், ஒரு ரூம். ஏன் அதை நாங்கள் first ரூம் என்று சொன்னோம்??🤔🤔🤔முதலில் வருவதாலோ? அந்த first ரூம் தான் எங்கள் ஹால், லிவிங் ரூம், பெட் ரூம் எல்லாம். அம்மாவும் அப்பாவும் தங்கள் இறுதி சுவாசத்தை விட்டதும் இங்கே தான். அதில் அம்மா அப்பாவின் ஒரு படம். அம்மாவும் அவர் தோழியும், அம்மாவின் பட்டம் பெற்ற படம், அம்மா மடிசாரில், இன்னும் சில தெய்வ படங்கள்.

அதை தாண்டினால் ஒரு இடம், 2 படி இறங்க வேண்டும். ஒரு சின்ன ரூம் போல…பாய் படுக்கை வைக்க. அங்கிருந்து ஒரு படி இறங்கினால் , வெட்ட வெளி மித்தம்(முற்றம்). கொடிகள் கட்டப் பட்டிருக்கும் துணிகள் காய போட. வலதுபுறம் ஒரு பெரிய குளியல் அறை. (மும்பையில் அது பெட் ரூம்!!!) அதில் 2 சிமென்ட் தொட்டிகள். துணி துவைக்கும் கல்…மூடாத தண்ணீர் வடியும் கால்வாய். (சாக்கடை என்றும் சொல்லலாம்)அதில் அந்த நாட்களில் பாய்லர் இருந்தது. வென்னீர் போட.

முத்தத்தின் ஒரு கோடியில், என் அப்பா எனக்காக வைத்த நித்யமல்லி செடி. பாதி முத்தத்திற்கு படர்ந்திருக்கும். நடுவே ஒரு ஆள் நுழைகிறார் போல ஒரு gap. ஒரு ஸ்டூல் போட்டு ஏறினால், நம் உடல் அந்த gap இல் நுழைத்துக் கொண்டு, பூக்களை பறிக்கலாம். அப்பப்பா….. எவ்வளவு பூ… இதை எழுதும்.போது கூட எனக்கு வாசனை அடிக்கிறது. என் பூ தொடுக்கும் ஆர்வம் இங்கிருந்து தான் தொடங்கியது. நீண்ட பின்னலில், எங்கள் வீட்டு நித்யமல்லி… அம்மாவின் கொண்டையில், காலில் வாழை நார் மாட்டி எசைத்த அரை வட்ட வேணி…

குளியலரையை அடுத்து ஸ்டோர் ரூம். குளித்து விட்டு உடை மாற்றவும், பல சரக்கு சாமான்( இந்நாள் grocery😁) வைக்கவும் கெஸ்ட் ரூம் எல்லாம் இது தான்.

அதை தாண்டினால் தாழ்வாரம். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் எனக்கு இங்கு உட்கார வைத்து தான் சாப்பாடு. அன்றும் இன்றும் எனக்கு அது தப்பாக படவில்லை.

அங்கிருந்து 2 படிகள் ஏறினால் சமயலறை. இன்றைய பெரிய மாஸ்டர் பெட் ரூம் அளவு. பூஜை அறையும் டைனிங் ஏரியா வும் எல்லாம் இதற்குள்.

தளிகை பண்ற உள்…(ஐயங்கார் வழக்கு சொல்)…

இந்த நாள் இனிய நாள் …

வழங்குபவர் தென்கச்சி சுவாமிநாதன்…

ட்ரான்சிஸ்டரில் கேட்டுக் கொண்டே எல்லா படங்களுக்கும் அம்மாவும் அப்பாவும், பவழமல்லி மாலை கோர்ப்பார்கள். (புழக்கடையில் பெரிய மரம்)கருவேப்பிலை மரமும் இருந்தது. இந்த த.உள்ளிலிருந்து பார்த்தால் வாசல் தெரியும். வாசலில் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு.தாழ்வாரத்தில்ருந்து வலப் பக்கமாக போனால் ஒரு சந்து போல வந்து புழக்கடையில் விரியும். அங்கு தான் டாய்லெட். 2007 வரை கதவு கூட இல்லாத கழிப்பறை. வெளியே வாளியில் தண்ணீர். யாரேனும் வரும் சத்தம் கேட்டால், உள்ளிருப்பவர் கணைக்க வேண்டும் 🤣🤣😂😂 கதவு இல்லாதது எனக்கு மட்டும் அல்ல என் பெண்களுக்கும் கூட அசௌகர்யமாக பட்டதில்லை.இது தான் எங்கள் வீட்டின் வரைபடம் !!!ஒன்ன பாக்காம ஒன் கையால மருந்து சாப்பிடாம போய்டுவேனோ… என்றும், இனிமே கை குழந்தையை தூக்கிண்டு பாம்பே லேந்து வந்து அலையாதே… நான் போய்ட்டேன்னு தகவல் வந்தப்பரம் வந்தா போறும் என்று சொன்ன அப்பாவும்,கற்பாகம்பாள் காலடில போகணும்,இனிமே நானும் ஒனக்கு ஒரு பொண்ணு தானே சீனு? என்று கேட்ட அம்மாவும்… இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை மிக மிக நிறைவானது. அவர்கள் பெற்ற நானும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். போதும் என்ற பொன்னான மனம் எனக்குள் விதைக்கப் பெற்றவள். வாடகை நிலுவை தொகை 5 லட்சத்து சொச்சமும் கட்டி விட்டு, வீட்டையும் கோவிலுக்கு திருப்பி கொடுத்துவிட்டு வரும் போது மனதில் எந்த வித சலனமும் இல்லை. மாறாக பெரும் நிம்மதி. யாரிடமும் காசு வாங்காமல், sub let செய்யாமல், அப்பா அம்மா பெயரை காப்பாற்றி விட்டேன். அதற்கு முழு நன்றி என் கணவருக்கு. அவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.கடந்த 9ஆம் தேதி , நர்த்தன விநாயகருக்கு ஒரு சதிர் காய் போட்டு விட்டு , கபாலிக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வீட்டை ஒப்படைத்தேன்.கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?அதிலிருந்து 2 வீடு தள்ளி என்னோட வீடு…….”.இருந்தது”#மைலாப்பூர் #கபாலி

கூந்தல் கருப்பு….ஆஹா !!!

கூந்தல் கருப்பு….ஆஹா !!!

டையின்  சிறப்பு …ஓஹோ…!!!
நம்மில் பலர் ” டை”  போடுவதால் தான் கூந்தலின் நிறத்தை அப்பிடியே வைத்துக்கொண்டிருக்கிறோம்.
நரை முடி வயது முதிர்வதையும், வாழ்க்கை கற்றுத் தந்த பாடத்தையும் குறிக்கும் என்ற காலம் போய் , முதிர்வதை, விரும்பாதவர்கள்/ ரசிக்காதவர்கள் அதற்க்கு கலர் அடிக்க துவங்கினார்கள்.
இளநரை ஒரு பெரும் பிரெச்சனை. இன்றைய டென்ஷன் கலந்த வாழ்க்கையில்,
( வாழ்வின் பெரும் பகுதி டென்ஷனில் தான் செலவழிகிறது ..நர்செரி  படிக்கும் குழந்தைக்கு கூட டென்ஷன் தான்.)
இளநரையை  மறைக்க தேவைபடுகிறது ‘டை’.
எது எப்படியோ,
எனக்கு எதற்கு இதெல்லாம்? என்றோ ஒரு நாள் நான் இப்படித் தானே தோற்றமளிக்கப்  போகிறேன் என்று சில மாதங்கள் டை பக்கமே போகாமல் இருந்தேன்.
என்னை நானாகவே ஏற்றுக்கொள்ளுங்கள் !! என்று கணவரிடமும், குழந்தைகளிடமும் தத்துவம் பேசினேன் !
முதலில் என்னை நானே ஏற்றுக்கொண்டேனா என்றால் 80% ஒப்புக்கொண்டேன் என்று தான் சொல்லவேண்டும்.
நீண்ட முடியும், இருபது நாட்களுக்கு ஒரு முறை போட வேண்டி இருப்பதும் அலுப்பை தந்தது…..
இடையிடையே, தலைமுடிக்கு டை போடாததால் இந்த உடை அணியமுடியவில்லையே ….இந்த நகை, ஜிமிக்கி இவையெல்லாம் அணிய முடியவில்லையே என்று சில பல தடைகள் வந்தது உண்மைதான்.
காதில் வைரத்தோடும் மூக்கில் வைர மூக்குத்தியும் நிரந்தரமாகிப் போயின …அழகாகத்தான் இருந்தது… அனால் ஜிமிக்கி அணிந்தால் பாந்தமாக இல்லாதது ஒரு குறை.. அவ்வளவு பிடிக்கும் ஜிமிக்கி…
” நீ உன் முடியை சர்ப் எக்ஸ்செலில்  தோய்த்தாயா ” என்ற ஒருவரது நாகரீகமில்லாத பேச்சு மனதை காயப்படுத்தியது.
இரண்டு நாட்கள் புலம்பிவிட்டு புறக்கணித்தேன் .
என்னைப்  பார்த்து பேசாமல், என் மண்டையையே பார்த்து பேசும் என்னவர் மேல் கோபம் கோபமாக வந்தது .
பார்த்தவுடன், ‘அய்யய்யோ , என்னாச்சு, டை போட நேரமில்லையா ‘ என்று கேட்பவர்களுக்கு, மெல்லிய சிரிப்பு ஒன்றை மட்டுமே, பதிலாக அளித்தேன்.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விமர்சனம் தோழி ஒருத்தியிடமிருந்து,…
‘ வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனையா ‘ என்றாள்
‘ ஏன் ஒன்றும்  இல்லையே   நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது என்றேன்…’
‘இல்லை …..டை போடுவதை கூட விட்டுவிட்டாயே என்று கேட்டேன் ‘ என்றாளே  பார்க்கலாம்…..!!!!!!
தூக்கி வாரி போட்டது எனக்கு… எதற்கும் எதற்கும் முடிச்சு போடுகிறார்கள் இந்த மனிதர்கள்….
சிலருக்கு விரிவாகவும்
சிலருக்கு சுருக்கமாகவும் ,
சிலருக்கு புன்னகைத்தும்
சமாளிதுக்கொண்டிருந்தேன்,
முதலிலிருந்தே என் குழந்தைகளின், ஏக போக, ஆதரவு….
‘ நீ இப்பிடித்தான் மா நன்னா இருக்கே ‘ என்று…
அனால் ஒவ்வொரு முறை, யாரேனும் விமர்சிக்கும் போது  வந்து அவர்களிடம் கூறக் கூற அவர்களுக்கு ஒரு சமயத்தில், சலிப்பாக இருந்தது….
‘ உனக்கு வேனும்னா  கலர் பண்ணிக்கோ மா ‘ என்று கூறத் தொடங்கினார்கள்….
மூன்று மாதங்கள் தாக்கு பிடித்தேன் …..அதற்க்கு மேல் முடியவில்லை…
சரி திரும்பவும் போட்டுப்பார்ப்போம் என்று முடிவு செய்து, மறுபடியும் துடங்கினேன் ..
ஆஹா….. என்ன ஒரு மாற்றம்…
எனக்கே நான் ப்ரெஷ்ஷாக  இருப்பது தெரிந்தது….( மறுபடியும் ஜிமிக்கி ) !!!!!
என்னவர் ஒரு பெரிய பெருமூச்சு விட்டார் …… ஒரு ஐம்பது வயசு வரைக்கும் போட்டுக்கோ ….அப்பறம் பாக்கலாம்…..!!!! ( இதெப்படி இருக்கு ….)
வெளியே இறங்கினால், நண்பர்களின் கண்களில் நிம்மதி….
பக்குவம் என்பது அவரவர் மனது சம்பந்தப்பட்ட விஷயம்
சரி, நாப்பத்தி மூணு வயசில், தொண்ணூறு வயது தோற்றமளிக்காமல் இருக்கலாமே என்று, தொடர்ந்து கலர் செய்ய தொடங்கிவிட்டேன்…..
மனப்பக்குவம் தொண்னூறு போல் உள்ளது என்ற நிம்மதியில் !!!!!!