Tag Archives: கணவன்

ஒருநாளும் தளர்வறியா மனம்தரும் ……

ஓட ஓட ஓட தூரம் கொறயல னு தனுஷ் ஒரு படத்துல பாடுவாரே அது போல தான் நம்ம எல்லார் வாழ்க்கையும் போன வருஷம் வரை இருந்தது. ஆனா ஒரு ஒரு கல்லையும் பொருக்கி , சரியா தூக்கி போட்டு பிடிச்சு, கைல பாலன்ஸ் பண்ணி நிறுத்தி , என் போன வருஷ வாழ்க்கையை வீடியோ வா டிசம்பர் கடைசில அமெரிக்காவுல பதிவு பண்ணிருக்கேன் பாருங்க !

ஏதோ முப்பத்தி ஒண்ணாம் தேதியோட எல்லாம் முடிஞ்சிட்டாப்ல ‘ஆத்தா நான் பாஸாயிட்டேன் ‘ னு வரப்புல சந்தோஷமா கத்திகிட்டே வர கதாநாயகி போல நாமும் 2021 ல ஆதி எடுத்து வெச்சிருக்கோம். பாப்போம்

ஆட்றா ராமா னு கோல் எடுத்தா ஆட்ற கொரங்கு போல நம்மள நல்லா தான் ஆட்டி வெச்சுது கொரோனா. ஆனா “நாமெல்லாம் யாரு ? ஹஹ என்கிட்டயேவா” (வடிவேலு குரல் ல படிங்க ப்ளீஸ் ). வருஷ ஆரம்பத்துல போட்ட சடன் பிரேக் ஓட சரி, அதுக்கப்பறம் வேணுங்கற அட்ஜஸ்ட்மென்ட் செஞ்சிகிட்டு, சீட்பெல்ட் இழுத்து க்ளிக்கிட்டு, வாழ்க்கை வண்டிய டாப் கியர்ல போட்டு இண்டு இடுக்கு சந்து பொந்து ஹய்வே, எல்லாத்துலயும் ஒட்டி வந்து சேந்திட்டமே.

பொலம்பலோ அழுகையோ, பிடிச்சுதோ பிடிக்கலீயோ ரசிச்சுதோ ரசிக்கலையோ வீட்டோட கிடந்தோம். ஆபீஸ் வேலைய (ஷார்ட்ஸ் மற்றும் நைட்டியில் ) பாத்துகிட்டே சைகைல காப்பி ப்ளீஸ் னு கேட்டோம், ப்ளூ டூத் ல மீட்டிங். அட்டென்ட் பண்ணிகிட்டே பாத்திரம் தேச்சோம், ஆடியோ மட்டும் ஆன் ல வெச்சுகிட்டு துணி மடிச்சோம், காய்கறி வெட்டினோம், மாவு பெசஞ்சோம், இன்னும் எவ்வளவோ

மக்களே, மேலே கூறியது எல்லாம் என் விருப்பம் மற்றும் கற்பனை. ( எங்க வீட்ல அப்பிடி எல்லாம் எதுவும் நடக்கலை ) பெட் ரூம் ஆபீஸ் ரூம் ஆகா மாறியது, வாட்ஸ் ஆப் ல செய்தி – தண்ணி கொண்டு வா / காப்பி வேண்டும் / மீட்டிங் ல போறேன் மூச்சு பலமா சத்தமா விட்டு தொலைக்காதே பாஸ் கு கேக்கபோகுது , நெட் பிளிக்ஸ் பாக்காதே எனக்கு நெட் ஸ்பீட் கம்மியாகுது, wifi off பண்ணிக்கோ சாப்பாடு இப்போ இல்ல, கொறிக்க என்ன இருக்கு, 4.40 லேந்து ஒரு 20 நிமிஷம் Free அதுக்குள்ள ஏதானும் வேலை இருந்தா சொல்லு இப்படி ஒரு டென்ஷன் லேயே பொழுது கழிச்சோம்.

வயசானவங்க அவங்க உடல் நிலை, ஆஸ்பத்திரி னு நிறைய ஸ்பீட் பிரேக்கர்ஸ். மல்யுத்த பயில்வான் கூண்டுக்குள்ள தொடையை தட்டி அடுத்த ரவுண்டு கு ரெடி ஆவாரே அதே மாதிரி தான்க நானும் போன வருஷம் முழுக்க ஓட்டினேன். அப்பிடி இப்பிடி அடி ஓதை எல்லாம் வாங்கி ஒரு வழியா refree என் கைய புடுச்சு தூக்கி “இவர் ஓரளவு வெற்றி பெற்றார் ” னு. அறிவிச்சாப்ல எனக்கு ஒரு காட்சி தெரிஞ்சது !

நல்ல விஷயங்கள் நடக்காமல் இல்லங்க ! நம்ம கொரோனா சார் கு என் மேல பாசம் ரொம்ப அதிகமாகி வா அம்மணி சொர்கத்தை காட்றேன் னு கூப்டாரு !நான் தான் நல்ல வார்த்தை சொல்லி, நயமா பேசி விடுங்க பாஸ் பெறகு பாத்துக்கறேன் சொல்லி ICU லேர்ந்து நன்றியோடு விடை பெற்று வந்தேன். இதை விட நல்ல விஷயம் இருக்குமான்னு தெரியல . மகள்கள் அவரவர் வாழ்க்கையில் செட்டில் ஆகறாங்க பெரியவர்கள் உடல் உபாதைகளில் இருந்து மீண்டு வந்தார்கள்.

எல்லோருக்காகவும் பிரார்த்தனை, ஒரு நாளும் தளர்வறியா மனம் வேண்டும் ! அது ஒன்னு இருந்தா எல்லாத்தையும் ஒரு கை பாக்கலாமே !

அவள் மெல்லச் சிரித்தாள் ……

அவள் மெல்லச் சிரித்தாள்
ஒன்று சொல்ல நினைத்தாள்
அந்த பொல்லாத கண்ணனின் ராதை ராதை

. ஜீன்ஸ் பாண்ட், மேலே சிவப்பு கலரில் பூப்போட்ட சட்டை அணிந்து ஒரு ஏரிக்கரையின் ஓரத்தில் அவள் நிற்க, அடித்த இளவெய்யில் காற்றில் அவள் கூந்தல் பறக்க, இரண்டு கைகளையும் பாண்ட் பாக்கெட்டில் விட்டபடி அவள் மெலிதாக சிரிக்க, அவள் கிளிக் செய்யப்பட்டாள். தனக்கே தன் கோலம்   பிடித்துப்போக, அவருக்கு அனுப்பினால் நன்றாக இருக்குமே என்று எண்ணி உடனடியாக வாட்ஸ் ஆப் செய்தாள் . ஏதோ நேற்று தான் அவரை முதன்முதலில் பார்த்தது போலும் அவருடன் முதல் முறையாக தொடர்பு கொள்வது போலவும் ஒரு பரபரப்பு. இரண்டு டிக் வந்தும், அது நீல நிறத்திற்கு மாறாதது சலிப்பை தந்தது…

என்னமா ….போன் பாத்துண்டே இருக்க என்ற பெண்ணை… ஒன்னும் மில்லடா சும்மாத்தான் என்று சொல்லி சமாளித்தாள்.

சிறிது இடைவெளிக்கு பின், smile often என்று கணவனிடமிருந்து பதில் வந்தது. த்ச் ….. அவ்வளவு தானா என்று ஒரு ஏமாற்றம். நன்றாக இருக்கிறது என்று ஒரு வார்த்தை சொல்லவில்லையே.. இந்த உடை உனக்கு பொருந்துகிறது என்று சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். எதையும் சொல்லாமல், அடிக்கடி இப்படி சிரி என்று மட்டுமா சொல்வார்கள்? இந்த ஆண்களே அப்பிடித்தானா?

ஒரு இளம் பெண்ணாகஅவருக்கு அறிமுகமாகி, மேலே சொன்ன பாட்டில் வருவது போல வெட்கம் பெறுக பெறுக சிரித்தவள் அதே சிரிப்பை  திருமணமாகி முப்பதும் நாற்பதும், ஐம்பதும் வருடங்கள் ஆனா பிறகும் சிரிக்க முடியுமா? சிரிக்க கூடாது என்று அவளுக்கு ஒன்றும் வேண்டுதலும் இல்லை. ஆனால் சிரிப்பதில்லை. இயல்பாக இருப்பதாக அவள் நினைத்திருந்தாள் , அனால் அவள் சிரிப்பு தொலைந்ததை அவள் அறியவில்லை. எங்கே தொலைத்தாள், தேடினால் கிடைக்குமா?

இளம் மனைவியாக, புது சூழலில் மிரண்ட  விழிகளுடன் இருக்கும் பொது முதலில் தொலைத்திருக்க வேண்டும்

பின் தாய்மையின் பொறுப்புகளில், எதிர்பார்ப்புகளில், இன்னும் கொஞ்சம் தொலைந்திருக்கும்.

அலுவலகத்தில் , அந்த கதாபாத்திரத்தின், எதிர்பார்ப்புகளில் இன்னும் கொஞ்சம்,

வாலிப வயது பெண் பிள்ளைகளை புரிந்து கொள்வதில் கொஞ்சம்

வீட்டில் இருக்கும் பெரியவர்களையும், தான் பெற்ற  பிள்ளைகளையும் தலைமுறை மாற்று கருத்துக்களில் நாட்டாமை செய்தும் கொஞ்சம்

திருமண வயது பெண்ணோ பிள்ளையோ இருந்து, வரன் தேடும், அந்த நீண்ட பயணத்தில் கொஞ்சம்

தான்  அதுவரை நடு வயது எட்டியிருந்தால், தன் உடல் உபாதைகளில் கொஞ்சம்

எது எப்படி இருந்தாலும், தூக்கி எறிந்துவிட்டு போக கூடாது என்று ஒரு கழக் கூத்தாடி போல, அந்த சம்சாரம் என்ற கயிற்றில் இந்த பக்கமும் விழாமல் அந்த பக்கமும் விழாமல், நடக்கும் போது கொஞ்சம்

இப்படி சிறிது சிறிதாக தொலைந்தது, அவளையும் அறியாமல் விட்டு போனதோ? ஆனால் இன்று அடிக்கடி சிரி  என்று கணவர் சொன்னபோது உணர்ந்தாள், அது கடினம் என்று.

பெண் மட்டுமே சம்சார சுழர்ச்சியில் சிரிப்பை தொலைப்பதில்லை,

பல ஆண்களும் தொலைக்கிறார்கள்.

கபாலி, கற்பகாம்பாள்

கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?

அதிலிருந்து 2 வீடு தள்ளி தான் என்னோட வீடு…

உள்ளே நுழைந்தவுடன் கோவில் வீடு எண்2 என்று பதித்த ஒரு கல் இருக்கும். அதை தாண்டினால், ஒரு பெரிய நிலப் படியும் பெரிய கனமான கதவும்.

இப்பிடி சொல்லிக் கொண்டிருந்த பந்தம் கடந்த 9ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது.

கபாலி கோவிலுக்கு சொந்தமான வீட்டில் என் அப்பா 50 வருடங்கள் முன் வாடகை தாரராக குடி போனார். அந்த வீட்டிற்கு வந்த பிறகு தான் என் அம்மாவின் சீமந்தமாம்..

ஒட்டு வீடு தான். நீண்ட தாழ்வாரம், கூடம்,ரேழி, முற்றம்,புழக்கடை, வெராண்டா…..

இதெல்லாம் என்ன என்று கேட்பார்கள் இந்த காலத்து குழந்தைகள்.

வீட்டின், ஓரோர் இடங்கள்.

அந்த பெரிய கதவில்

P.S.Ramaswamy

Mrs. Lakshmi Ramaswamy

என்று ஒரு போர்டு.

ஒரு முறை நான் சாக் பீஸில் என் பெயரையும் அதற்கு கீழே எழுதினேன். உறவினர் ஒருவர், என் மேல் ரொம்ப பாசமானவர், எனக்கு பிளாஸ்டிக் இல்

R.Anuradha IN/OUT 😊😊😊

டாக்டர் ரூம் வாசலில் இருக்குமே அது போல செய்து அன்பளிப்பாக கொடுத்தார்.

அதை தாண்டினால் ரேழி(அப்படினா???) எனக்கு தெரியாது… வீட்டில் ஒரு பகுதி அவ்வளவு தெரியும். அந்த ரேழியில் என் அப்பாவை பெற்ற தாத்தா பாட்டி போட்டோ. அதன் வலப் பக்கம், ஒரு ரூம். ஏன் அதை நாங்கள் first ரூம் என்று சொன்னோம்??🤔🤔🤔முதலில் வருவதாலோ? அந்த first ரூம் தான் எங்கள் ஹால், லிவிங் ரூம், பெட் ரூம் எல்லாம். அம்மாவும் அப்பாவும் தங்கள் இறுதி சுவாசத்தை விட்டதும் இங்கே தான். அதில் அம்மா அப்பாவின் ஒரு படம். அம்மாவும் அவர் தோழியும், அம்மாவின் பட்டம் பெற்ற படம், அம்மா மடிசாரில், இன்னும் சில தெய்வ படங்கள்.

அதை தாண்டினால் ஒரு இடம், 2 படி இறங்க வேண்டும். ஒரு சின்ன ரூம் போல…பாய் படுக்கை வைக்க. அங்கிருந்து ஒரு படி இறங்கினால் , வெட்ட வெளி மித்தம்(முற்றம்). கொடிகள் கட்டப் பட்டிருக்கும் துணிகள் காய போட. வலதுபுறம் ஒரு பெரிய குளியல் அறை. (மும்பையில் அது பெட் ரூம்!!!) அதில் 2 சிமென்ட் தொட்டிகள். துணி துவைக்கும் கல்…மூடாத தண்ணீர் வடியும் கால்வாய். (சாக்கடை என்றும் சொல்லலாம்)அதில் அந்த நாட்களில் பாய்லர் இருந்தது. வென்னீர் போட.

முத்தத்தின் ஒரு கோடியில், என் அப்பா எனக்காக வைத்த நித்யமல்லி செடி. பாதி முத்தத்திற்கு படர்ந்திருக்கும். நடுவே ஒரு ஆள் நுழைகிறார் போல ஒரு gap. ஒரு ஸ்டூல் போட்டு ஏறினால், நம் உடல் அந்த gap இல் நுழைத்துக் கொண்டு, பூக்களை பறிக்கலாம். அப்பப்பா….. எவ்வளவு பூ… இதை எழுதும்.போது கூட எனக்கு வாசனை அடிக்கிறது. என் பூ தொடுக்கும் ஆர்வம் இங்கிருந்து தான் தொடங்கியது. நீண்ட பின்னலில், எங்கள் வீட்டு நித்யமல்லி… அம்மாவின் கொண்டையில், காலில் வாழை நார் மாட்டி எசைத்த அரை வட்ட வேணி…

குளியலரையை அடுத்து ஸ்டோர் ரூம். குளித்து விட்டு உடை மாற்றவும், பல சரக்கு சாமான்( இந்நாள் grocery😁) வைக்கவும் கெஸ்ட் ரூம் எல்லாம் இது தான்.

அதை தாண்டினால் தாழ்வாரம். மாதத்தின் அந்த மூன்று நாட்களில் எனக்கு இங்கு உட்கார வைத்து தான் சாப்பாடு. அன்றும் இன்றும் எனக்கு அது தப்பாக படவில்லை.

அங்கிருந்து 2 படிகள் ஏறினால் சமயலறை. இன்றைய பெரிய மாஸ்டர் பெட் ரூம் அளவு. பூஜை அறையும் டைனிங் ஏரியா வும் எல்லாம் இதற்குள்.

தளிகை பண்ற உள்…(ஐயங்கார் வழக்கு சொல்)…

இந்த நாள் இனிய நாள் …

வழங்குபவர் தென்கச்சி சுவாமிநாதன்…

ட்ரான்சிஸ்டரில் கேட்டுக் கொண்டே எல்லா படங்களுக்கும் அம்மாவும் அப்பாவும், பவழமல்லி மாலை கோர்ப்பார்கள். (புழக்கடையில் பெரிய மரம்)கருவேப்பிலை மரமும் இருந்தது. இந்த த.உள்ளிலிருந்து பார்த்தால் வாசல் தெரியும். வாசலில் ஒரு கண் இருந்து கொண்டே இருக்கும் எங்களுக்கு.தாழ்வாரத்தில்ருந்து வலப் பக்கமாக போனால் ஒரு சந்து போல வந்து புழக்கடையில் விரியும். அங்கு தான் டாய்லெட். 2007 வரை கதவு கூட இல்லாத கழிப்பறை. வெளியே வாளியில் தண்ணீர். யாரேனும் வரும் சத்தம் கேட்டால், உள்ளிருப்பவர் கணைக்க வேண்டும் 🤣🤣😂😂 கதவு இல்லாதது எனக்கு மட்டும் அல்ல என் பெண்களுக்கும் கூட அசௌகர்யமாக பட்டதில்லை.இது தான் எங்கள் வீட்டின் வரைபடம் !!!ஒன்ன பாக்காம ஒன் கையால மருந்து சாப்பிடாம போய்டுவேனோ… என்றும், இனிமே கை குழந்தையை தூக்கிண்டு பாம்பே லேந்து வந்து அலையாதே… நான் போய்ட்டேன்னு தகவல் வந்தப்பரம் வந்தா போறும் என்று சொன்ன அப்பாவும்,கற்பாகம்பாள் காலடில போகணும்,இனிமே நானும் ஒனக்கு ஒரு பொண்ணு தானே சீனு? என்று கேட்ட அம்மாவும்… இந்த வீட்டில் வாழ்ந்த வாழ்க்கை மிக மிக நிறைவானது. அவர்கள் பெற்ற நானும் நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன். போதும் என்ற பொன்னான மனம் எனக்குள் விதைக்கப் பெற்றவள். வாடகை நிலுவை தொகை 5 லட்சத்து சொச்சமும் கட்டி விட்டு, வீட்டையும் கோவிலுக்கு திருப்பி கொடுத்துவிட்டு வரும் போது மனதில் எந்த வித சலனமும் இல்லை. மாறாக பெரும் நிம்மதி. யாரிடமும் காசு வாங்காமல், sub let செய்யாமல், அப்பா அம்மா பெயரை காப்பாற்றி விட்டேன். அதற்கு முழு நன்றி என் கணவருக்கு. அவர் ஒத்துழைப்பு இல்லையென்றால் இது சாத்தியமில்லை.கடந்த 9ஆம் தேதி , நர்த்தன விநாயகருக்கு ஒரு சதிர் காய் போட்டு விட்டு , கபாலிக்கு ஒரு அர்ச்சனை செய்துவிட்டு, வீட்டை ஒப்படைத்தேன்.கபாலி கோவில் வாசல்ல கிரி டிரேடிங் தெரியுமா……?அதிலிருந்து 2 வீடு தள்ளி என்னோட வீடு…….”.இருந்தது”#மைலாப்பூர் #கபாலி

நன்றியுடன் உங்கள் அனு …..

இன்று பிறந்த நாள்

50 முடிந்தது பாதி கிணறு ??

யாருக்கு தெரியும்.

ஆனால் 50 வருடங்களை திரும்பி பார்த்தால், சரி…ஒரு 40 வருடங்களாவது நினைவிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள

நல்ல வாழ்க்கை தான்.

இந்த பதிவை 50வது பதிவாக வெளியிட வேண்டும் என்று நினைத்தேன். முடியவில்லை. மனதை தொட்டால் தான் பதிப்பது என்று ஒரு பாலிசி! அதனால் பக்கத்தை ரொப்பி எழுதுவதில் உடன்பாடில்லை.

காலம் சுழன்று கொண்டிருக்கிறது. எதற்காகவும் யாருக்காகவும் நிற்காமல்.

உப்பும் தண்ணீரும் ஊற ஊற எல்லாம் சரியாகும் என்று அம்மா சொல்லுவாள். துக்கமும் சுகமும் மாறி மாறி தான் வாழ்க்கை.

அது சரி… வேதாந்தம் பேசாமல், மொக்கை போடாமல், நீ என்ன கிழித்தாய் னு சொல்லு என்கிறீர்களா?

பெரிதாக ஒன்னும் இல்லை.

நல்ல மகள்… நீ ரொம்ப….நல்லவ 🤣🤣என்று பலர் கூறும் போது அம்மா அப்பாவை நினைத்துக் கொள்கிறேன். அந்த ஜீன்ஸ் இல்லையென்றால் ஏது நல்ல குணம். 2 வழி தாத்தா பாட்டிக்களையும் தான் சேர்த்து நினைத்துக் கொள்கிறேன். அவர்கள் ஆசீர்வாதம் உணர்கிறேன்.

************************************

நல்ல மனைவி….மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்…

ஆமா…. ஆமா…. என் கணவருக்கு அந்த வரம் கிடைச்சிருக்கு…

என்ன செய்வது …அவர் பதிவதில்லை அதனால் நானே சொல்லிக்கொள்கிறேன். நான் பேச நினைப்பதெல்லாம் அவர் பேச , அவர் பேச நினைப்பது /நினைக்காதது எல்லாம் நான் பேச…கவியரசர் கண்ணதாசன் என் கணவரை சந்தித்ததில்லை…(நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு 🤣🤣😎) இல்லைனா பாட்டை மாற்றி எழுதிருப்பார். இப்பிடிஒரு கணவன் அமைய என்ன தவம் செய்தேனோ. பெரியவர்களின் ஆசி, பூர்வ ஜென்ம நல்ல கர்மா…சீனு என்கிற ஸ்ரீனிவசனை என்னோடு இணைத்தது னு தான் சொல்லணும்.

************************************

நல்ல மருமகள்…பெண் குழந்தை இல்லாத மாமியார் மாமனாருக்கு மகளானேன்.

இந்த ஒரே வாக்கியம் போதும்…

என் மாமனார் தாயுமானவன் !!!

ஒரு மருமகளுக்கு இவ்வளவு தான் செய்ய முடியும் என்கிற தடையை உடைத்தவர். அறுவை சிகிச்சை முடிந்த 6 மாத காலத்தில் கண்ணை இமை காப்பது போல னு சொல்லுவார்களே அது போல என்னை காத்தவர். 4 மாதங்கள் வாரம் தோறும் எனக்கு மூத்திர பை மாற்றியவர். இன்றளவும் எங்கள் உள்ளாடைகள் மடிப்பவர். (வெக்கமாயில்லியா னு கேட்கிறீர்களா? )அப்பாவிடம் மகளுக்கு என்ன வெட்கம்.

இன்றளவும் மறக்க முடியாதது… ரயில் பயணத்தில் ஒருவர் என்னை பார்த்து கேட்டது…”மாமனாராயா இப்படி அப்பா அப்பா னு கூப்படறீங்க…உங்க அப்பா னு நெனச்சேன்”அது என் பாசத்திற்கான சான்றிதழ்.

மாமியார்….அடாடா… நாங்க சீரியல் மாமியார் மருமகள் இல்லியே. காலை ஐந்தரை மணிக்கு காபி பொழுதில் கூட ஸ்வெட்டர் போடுவது பற்றி ரொம்ப தீவிரமா டிஸ்கஸ் பண்ணுவோம்.

ஹாஹாஹா… அதுக்காக அப்பிடியே ஆதர்ஷ மாமியார் மருமகள் னு எல்லாம் சொல்ல முடியாது. எலியும் பூனையுமா கூட இருப்போம். 2 நாள் 3 நாள் அப்பறம் மருந்துட்டு பொழப்ப பாக்க வேண்டியதுதான். குடும்பத்தை தாண்டி வெளி ஓலகத்ல எத்தனையோ விதமான மனிதர்களை பொறுத்துக் கொள்கிறோம்…நம் கண்ணான கணவரின் அம்மா அப்பா வை கொஞ்சம் கூடுதல் பொறுமை காட்டி அரவணைக்கலாம்.பெரியவா எதானும் சொன்ன மூஞ்சியை தூக்கி வெச்சுக்காம, அதை எப்படி சரி ஆக்கறது னு பாரு…இங்க கேட்பது நாகலக்ஷ்மிங்கிற எங்க அம்மா ஓட அசரீரி😂************************************நல்ல அம்மா…இதுக்கு தனி பதிவே போடணும்!!!!ரெண்டும் ரெண்டு கண்ணு.சின்ன பொட்டலமாக வந்த கடவுளின் பரிசுப்பொருள்கள்.முதலில் என்னை தாயாக்கி இப்போது என்னை சேயாக்கியவர்கள்.கடவுள் அருளால், பெரியவர்கள் ஆசியால், அவர்கள் துணையுடன் நல்ல பிள்ளைகளாக வளர்த்த பெருமை உண்டு. ஒரு தாய்க்கு இது போதும்.************************************நல்ல நண்பி !!!!… நிறைய நண்பர்கள். வெகு காலமாக தெரிந்தவர்கள், சில காலமாக தெரிந்தவர்கள், நண்பர்களின் நண்பர்கள், நண்பர்களின் குடும்பத்தினர், முகநூல் நண்பர்கள், இன்ஸ்டாகிராம் நண்பர்கள், வாட்சப் நண்பர்கள், போதுமா…..எல்லோர்க்கும் தெரியும் சாய்வதற்கு என் தோள்கள் எப்பவும் தயார் நிலையில் இருக்கும் என்று.

இனும் ஒரு பெரிய பாத்திரம் பாக்கி . அதற்க்கான காத்திருப்பில் இருக்கிறேன்

50 வயதில் கசப்பான அனுபவங்களும் , மனிதர்களும், ரணங்களும், வலிகளும், காயங்களும், இல்லாமல் இல்லை. புரையோட விடாமல் பார்த்துக்கொண்டுவிட்டேன். கொஞ்சம் லேட்டாக தான் சிலரை புரிந்து கொண்டேன், ஆனால் இப்போதாவது புரிந்ததே என்று சந்தோஷம்.புரிந்து கொண்டு????என்னை விலக்கிக் கொண்டேன்.என் நிம்மதி முக்கியம் என்று உணர்ந்ததால்.

பெண்ணின் கண்ணீர்….

எனக்கு மின் அஞ்சலில் வந்த ஒரு விஷயத்தை உங்களுடன் பகிரலாம் என தோன்றியது….

பெண் ஒருத்தி அழுதுக்கொண்டிருந்தாள், அவள் மகன் அவளிடம் கேட்டானாம்,

ஏன் அம்மா அழுகிறாய் என்று…
அவள் சொன்னாளாம்,
நான் ஒரு பெண் என்பதால் என்று.

எனக்கு புரியவில்லையே அம்மா என்றானாம் அவன்,
அந்த தாய் அவனை கட்டிக்கொண்டு கூறினாளாம்

உனக்கு எப்பவுமே புரியாது என்று…

அந்த பையன் அவன் தந்தையிடம் சென்று,

காரணமே இல்லாமல் அம்மா ஏன் அழுகிறாள் என்று கேட்டதற்கு,

எல்லா பெண்களுமே அப்பிடித்தான் காரணமில்லாமல் அழுவார்கள் என்று கூறினாராம் …
தன தேடலுக்கு பதில் தெரியாமலேயே, அவனும் பெரியவன் ஆனான்.

கடைசியில் ஆண்டவனை தொலைபேசியில் அழைத்து, ( அவர் நம்பர் என்ன என்று என்னை கேட்காதீர்கள்)!!!!!
ஏன் கடவுளே இந்த பெண்கள் சுலபமாக அழுதுவிடுகிரர்கள் ?
என்று கேட்டானாம்.

கடவுள் பின் வருமாறு கூறினாராம் …..

பெண்ணை படைத்தபோது, அவளை தனித்தன்மையுடன் படைக்க நினைத்தேன்….

அதனால் தான், அவள் தோள்களை படைத்த போது , அவை உலகத்தின் பாரங்கள் அனைத்தையும் தாங்கும் சக்தி உடையதாக வலுவானதாக அதே சமயம், அவள் தோள்களில் சாய்ந்தால், அது மிக மென்மையானதாக, ஆதரவு அளிப்பதாக இருக்கும்படி செய்தேன்

அவளுக்கு குழந்தை பேரின் போது வலியை தாங்கும் உடலும், பெற்ற பிள்ளை வளர்ந்து உதாசீனப் படுத்தும்போது, அந்த வலியையும் தாங்கும் மன வலிமையையும் கொடுத்தேன்.

தன குடும்பத்தினரின், பசி தூக்கம், உடல் நலக் குறைவு என்று எல்லா தேவைகளையும், அலுக்காமல் சலித்துக்கொள்ளாமல் முகம் கோணாமல், செய்து முடிக்கும் மனோ பலத்தையும் கொடுத்தேன்.

என்னால் முடியாது என்று எளிதில், கை விடாமல் கடைசி வரை முயற்சித்து பார்க்கும், உந்துதலையும் அவளுக்குள் பதித்தேன்.

தான் பெற்ற பிள்ளைகள் தன்னை உதாசீனப்படுத்தினாலும், எல்லா காலங்களிலும் அவர்களுக்கு, தன பாசத்தை மட்டுமே தரும் உன்னதமான குணத்தை படைத்தேன் .

ஒரு நல்ல கணவன் ஒரு போதும் தன் மனைவியை, துன்பப்படுத்த மாட்டான், அனால், சோதிப்பான் என்பதை உணரும் அளவுக்கு, பக்குவத்தை கொடுத்தேன் …..

கடைசியாக, அவளுக்கு கண்ணீர் என்று ஒரு விஷயத்தை கொடுத்தேன்.

அதை எப்போது, எப்படி, எங்கு உபயோகிக்க வேண்டும் என்பதை அவளிடமே விட்டு விட்டேன்….
என்று கூறினாராம் …..

பெண்கள் மனதை தொடும் தருணங்களில் எல்லாம் அந்த கண்ணீரை சிந்துகிறார்கள்
ஆத்மாவை தொடும் தருணங்களில் சிந்தப்படும் கண்ணீர், அவளது இயலாமையில் சிந்தும் கண்ணீராக, புரிந்துக்கொள்ள படுகிறது.
அழுமூஞ்சி என்ற பட்டம் வேறு….
பெண் என்பவள் ஒரே சமயத்தில் மென்மையானவளும் வலுவானவளும்

காரடையான் நோன்பு

உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் ஒரு காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாமல் இருக்க வேண்டும் …. என ஒவ்வொரு பெண்ணும் நோன்பு நூற்று கொண்டிருப்பாள்..

நல்ல கணவன் வாய்க வேண்டும் என்று கன்னி பெண்களும்,
கிடைத்த கணவன் நன்றாகவும், இந்த அன்பான உறவு, எல்லா ஜென்மத்திலும் வாய்க்க வேண்டும் என்று மணமான பெண்களும் வேண்டியிருபார்கள்.

சில எடக்கு ஜென்மங்கள்,
” ஐயோ இதே மனுஷனா வேண்டாம்ன்டா சாமி ” என்று சொல்பர்வர்களும் உண்டு.

ஏதோ ஒன்று, கிடைக்கப் போகும் உறவை பற்றி நல்ல விதமாக நினைக்க வேண்டும்.

கிடைத்த உறவை, உயிரினும் மேலாக போற்ற வேண்டும்.

அது ஒன்றும் சுலபமான விஷயம் அல்ல என்பது எனக்கும் தெரியும்.

இருந்தாலும் முயன்று பார்க்கலாமே

எந்த உறவு தான் சுலபமானது?

எல்லா உறவுகளிலும் உரசல்கள் இருக்கும்… அந்த உரசல்களை ரணமாக்கி புரயோடிபோகும் வரை கொண்டு செல்வதா

அல்லது

மெலிதாக மயிலிறகால் வருடிக்கொடுத்து ஆற்றுவதா என்பது நம் கையில் உள்ளது.

இதே கணவன் வேண்டும் என பிரார்த்தனை செய்வதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

எப்பிடி இருக்கிறீர்கள் என்று கேட்டால் சிலர் சொல்வார்கள்….

“ஏதோ பத்துக்கு அஞ்சு பழுதில்லாமல் போய்க் கொண்டிருகிறது “என்று…

அது போல, பெரிதாக எந்த பிரச்சனையும் இல்லாத வரை, சரிதான்.

அதற்காக, உடலாலும், மனதாலும் துன்புறுத்தும் கணவனை கட்டிக் கொண்டு அழச் சொல்லவில்லை.

கல் ஆனாலும் கணவன்….. இதெல்லாம் வேறு கதை.

முயன்று பார்த்து முடியவில்லை என்றால், அந்த உறவை எட்டி உதைத்துவிட்டு வரவும் நாம் தயாராக இருக்க வேண்டும்

அதற்க்கு முதலில், நல்ல கல்வி வேண்டும்,

மனதில் உறுதியும் தைரியமும் வேண்டும்….

தன்னம்பிக்கை வேண்டும்

நான் பெறாத தலைச்சன் பிள்ளை ………….

நான் பெறாத தலைச்சன் பிள்ளை நீ…..

உனக்கு பின்னல் இரண்டு பிள்ளைகள் பிறந்து வளர்ந்து விட்டாலும், உனக்கு பிடித்த சவலை இன்று வரை போகவில்லை…..
செல்லமாக கடிந்து சொன்னாலும், ஒரு சில சந்தர்பங்களில் மிரட்டி சொன்னாலும் ஏற்க மறுக்கும் பிடிவாதக்காரன் நீ…..
சுயபச்சாதாபத்தில் பல நேரங்களில் மூழ்கிவிடுகிறாய்……….
உன் சண்டித் தனம் உன்னை விட்டு போகவில்லை………
நினைத்துக்கு கொண்டு விட்டால் பிடிவாதம் பிடிக்கிறாய்………
மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு என் கவனத்தை ஈர்ப்பது  உன்னால்  மட்டும் தான் முடியும்…….( நானும் ஈர்க்கப்பட்டு பழகி விட்டேன்)
யார் மீதோ உனக்கு இருக்கும் கடுப்பை என் மேல் திணிப்பதில் நீ மிகவும் தேர்ச்சி பெற்றவன்…….
திடீரென்று ‘மூட்’ போய்விடுகிறது…. ( காரணம் தெரிந்தாலும் பகிர்ந்து கொள்ள இசையமாட்டேன் என்கிறாய் )
தொப்புள் கோடி சம்பந்தத்தில் உண்டான பிள்ளைகள் கூட உன்னை கையாள கற்றுகொண்டுவிட்டார்கள் ……………
உன் ஒவ்வொரு அசைவும் எனக்கு அத்துப்படி, நீ உதிர்க்க போகும் அடுத்த வார்த்தையை  கூட என்னால் யூகிக்க முடியும்….
இது பல வருட பரிச்சயத்தால் வந்த தெளிவல்ல, உன்னை ஆழ் மனதிலிரிந்து நேசிப்பதால் வந்த தேர்ச்சி ……..
எந்த ஒரு மனிதனும் முற்றிலும் சரியானவன் அல்ல….
மேல் சொன்ன புகார்கள் வெறும் புகார்கள் மட்டுமே…… பழிப்புகள் அல்ல……..
இவை எல்லாவற்றையும் தாண்டி/தவிர்த்து நீ என் மனதில் பெரிய  பீடம் அமைத்து அமர்ந்திருக்கிறாய்…….
விஸ்வரூபம் எடுத்து நிற்கிறாய் ………….